ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 76

மேகலா : ‘நாராயணாஸ்திரம்’ ஏவப்படப் போகிற நிலையில் சென்ற பகுதியை நிறைவு செய்திருந்தோம்..... தொடர்வோம்...

நாராயணாஸ்திரம் ஏவப்பட்டது

மேகலா : துரோணர் கொல்லப்பட்டவுடன், பயந்து யுத்த களத்தை விட்டு ஓடத் தொடங்கிய கௌரவப்படை வீரர்கள், திடீரென்று உற்சாகத்துடன் யுத்த களத்திற்குத் திரும்பிய காட்சியைப் பார்த்த தருமபுத்திரன், திகைத்தான். இந்த வீரர்களுக்கு மறுபடியும் உற்சாகத்தைக் கொடுத்த வீரன் யார் என்று புரியாமல் தவித்தான். ஒரு வேளை, இந்திரனே கோபம் கொண்டு, துரியோதனனுக்கு உதவி செய்ய வந்து விட்டானோ என்ற அச்சத்தில் தவித்தான்.

அவன் தவிப்பைப் பார்த்து அர்ஜுனன் சொன்னான், 'கௌரவர் தரப்பிற்கு மீண்டும் நம்பிக்கையை உண்டாக்கி இருப்பவர் யார் என்று எனக்குப் புரிகிறது. அந்த மனிதர் மிகப் பெரிய வீரர். தவறு செய்வதில் வெட்கம் கொள்பவர். வீரத்தில் இந்திரனுக்கும், கோபத்தில் எமனுக்கும், அறிவில் பிரஹஸ்பதிக்கும் நிகரானவர். அவர்தான் துரோணரின் மகன் அஸ்வத்தாமா’.

இவ்வாறு கூறி, தருமபுத்திரரின் சந்தேகத்தைத் தீர்த்து வைத்தான், அர்ஜுனன். மேலும் தொடர்ந்த அர்ஜுனன், ‘நிஷ்டையில் அமர்ந்திருந்த துரோணரின் சிகையைப் பிடித்து, அவருடைய தலையை வெட்டிய திருஷ்டத்யும்னனின் கொடூரமான செயலை, அஸ்வத்தாமா பொறுக்கப் போவதில்லை. பழிக்குப் பழி வாங்கப் புறப்பட்டு விட்டார். அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். தவறான வழியில் செல்ல மனமில்லாதவர்; செல்லவும் மாட்டார். ஆனால், கொடூரமான செயல்களைச் செய்தவர்களைப் பழிவாங்கும் பொழுது, எந்த வழியில் வேண்டுமானாலும் செல்வதற்குத் தயாராகி விடுவார். இங்கு அக்கிரமம் நடந்திருக்கிறது. அக்கிரமத்தை அழிக்க, அக்கிரமத்தையே கையாள்வார் என்று நான் நினைக்கிறேன்.

‘அரசே! நீங்கள் எல்லா தர்மங்களையும் உணர்ந்தவர். தவறிப் போய் கூட, பொய் சொல்ல மாட்டீர் என்று நம்பித்தான் நம் குரு, தன் மகன் இறந்து விட்டான் என்ற செய்தியை எல்லோரையும் விடுத்து உம்மிடம் வந்து கேட்டார். நமது சிஷ்யன் எந்தக் காலத்திலும் பொய் சொல்ல மாட்டான் என்று நம்பினார்.

‘ஆட்சி பீடத்தின் மீது வைத்த ஆசையின் காரணமாக நீர் நமது குருவிற்கு துரோகம் இழைத்தீர். உமது சொல்லை நம்பி, நமது ஆச்சாரியார், வாழ்க்கையில் விரக்தியுற்று, தனது ஆயுதங்களைக் கீழே போட்டார். இந்த நிலையில் திருஷ்டத்யும்னன், அவர் தலையை வெட்டி வீழ்த்தினான். இந்தப் பாவத்திற்கு முழுப் பொறுப்பும் உம்மையே சாரும். புண்ணியத்தைத் தேட வேண்டிய நாம், பெரும் பாவத்தைச் செய்து விட்டோம்’.

இவ்வாறு அர்ஜுனன் கூறிய போது, பீமன் கோபமுற்றான். ‘அர்ஜுனா! நீ க்ஷத்திரியன் என்பது உனக்கு மறந்து போய் விட்டதா? ஏதோ வனத்தில் வசிக்கிற தவ முனிவர் போலப் பேசுகிறாய். பதின்மூன்று வருட காலம் நாம் பொறுமையாக இருந்து விட்டோம். நமக்கு எதிரான சூழ்ச்சிகளையும், சதிகளையும் சகித்துக் கொண்டோம். திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அவமானத்தையும் பொறுத்துக் கொண்டோம். இது நமக்குரிய நிலை அல்ல என்றாலும், இதையெல்லாம் சகித்துக் கொண்டோம். ஆனால், யுத்த களத்தில் எதிரிகளை வீழ்த்த முயற்சி செய்வதுதான் நமது கடமை. யுத்தத்தை நாம் விரும்பி அழைக்கவில்லை. அது வந்த போது, அதை எதிர்கொள்கிறோம். இந்த நிலையில், உனது சகோதரர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் நீ பழித்துப் பேசுவது உனக்கே நல்லதல்ல. நமக்கு இப்போது தேவை ஊக்கமும், உற்சாகமும்; ஆனால் நீயோ, நமது தரப்பினரை உன் வார்த்தைகளால் புண்படுத்துகிறாய்.

‘அஸ்வத்தாமா, மிகச் சிறந்த வில்வித்தை வீரன் என்று கூறுகிறாய். என் இரண்டு கைகளால் நான் மலையைக் கூடப் பிளப்பேன். என் ‘கதை’யைச் சுழற்றி வீசினால், கௌரவர் படை சிதறுண்டு போகும். நான் அஸ்வத்தாமாவை வீழ்த்திக் காட்டுகிறேன்’ என்று பீமன் தனது கோபத்தை வெளிப்படுத்தியவுடன், திருஷ்டத்யும்னன் பேசலுற்றான், ‘துரோணர், பிராமணர்களுக்கான ‘வேதம் ஓதுவது’, ‘யாகம் செய்வது’ போன்ற தர்மத்திலும் நிலைபெறவில்லை. க்ஷத்திரிய தர்மமான அஸ்திரங்களின் தன்மையை அறியாதவர்கள் மீது பிரம்மாஸ்திரத்தை ஏவக் கூடாது என்ற நிலையிலும் நிலைபெறவில்லை.

‘இப்படிப்பட்ட ஒரு மனிதரை யுத்த களத்தில் கொல்லுவதில் என்ன தவறு இருக்க முடியும்...? பகைவர்களைக் கொல்ல வேண்டும், அல்லது பகைவர்களால் கொல்லப்பட்டு விழ வேண்டும். இதுதான் க்ஷத்திரிய லட்சணம். அதைத்தான் நானும் செய்தேன். தர்ம நியாயத்தைப் பற்றி விரிவாகப் பேசி என்னை விமர்சிக்கிற அர்ஜுனா, ‘நீ எவ்வாறு பகதத்தனைக் கொன்றாய்? நீ உனது பாட்டனான பீஷ்மரை எவ்வாறு வீழ்த்தினாய்? நீ செய்தது நியாயம் என்றால், நான் செய்ததும் நியாயமே. இதில் வருந்துவதற்கு ஏதுமில்லை’ என்று திருஷ்டத்யும்னன் பேசிய போது, சாத்யகி சீறி எழுந்தான். நிஷ்டையில் அமர்ந்து, ஆயுதத் துறவு எய்திய துரோணரை வெட்டிக் கொன்றதால், உன் ஏழு தலைமுறைகளும் நரகத்தில்தான் கிடக்கப் போகிறார்கள். அர்ஜுனன் எனது குரு. அவருக்கு குரு துரோணர். எனது குருவையும், குருவின் குருவையும் மீண்டும் நீ நிந்தித்தால், உன்னை நான் வெட்டி வீழ்த்துவேன்’ என்று கோபமாகப் பேசினான்.

அதற்கு மறுமொழியாக திருஷ்டத்யும்னன், ‘நீ பூரிசிரவஸைக் கொன்ற முறை நியாயமானதா? கையை இழந்து விட்ட நிலையில்தானே பூரிசிரவஸைக் கொன்றாய்? இரு தரப்பிலும் அதர்மமே கையாளப்பட்டிருக்கிறது. நல்லவன் பேசும் பொழுது பொறுமையைக் கடைப்பிடிக்கலாம். தீமையே உருவான உனக்கு, மரணமே சிறந்தது’ என்று கோபமாகப் பேசினான்.

அங்கு, அந்த இடத்தில் பதட்டம் உண்டாகியது. சாத்யகியைப் பீமன், தன் இரு கைகளால் கட்டிப் பிடித்துத் தடுத்தான். சகாதேவன் இருவருக்குமிடையில் சமாதானம் செய்ய முனைந்தான். இங்கே நாம் சண்டையிட்டுக் கொள்வது எதிர்த்தரப்புக்குத்தான் நன்மையை விளைவிக்கும். எந்தக் காரணத்திற்காக நாம் அனைவரும் இந்த யுத்தத்தில் முனைந்தோமோ, அதுவே தோற்று விடும். இருவரும் இங்கு நடந்த முறைகளைப் பொறுத்துக் கொண்டு ஒருவரையொருவர் மன்னித்து விடுங்கள்’ என்று சகாதேவன் கூறிய பிறகு, தருமனும், கிருஷ்ணரும், சாத்யகியையும், திருஷ்டத்யும்னனையும் சமாதானம் செய்தார்கள். கௌரவர்களை எதிர்க்க, பாண்டவர் படை தயாராயிற்று.

எதிர்த்தரப்பில் துரியோதனனிடம், அஸ்வத்தாமா, ‘அரசனே! தர்ம வேடம் பூண்ட தருமபுத்திரன், என் தந்தையிடம் பொய் சொல்லி, அவர் ஆயுதங்களைக் கை விடுமாறு செய்தான். அவனுடைய படையை இந்த யுத்த களத்திலிருந்தே விரட்டி அடிக்கப் போகிறேன்’ என்று கூறி விட்டு, நீரைத் தொட்டு, சில மந்திரங்களை ஓதி, ‘நாராயணாஸ்திரம்’ என்ற பலம் வாய்ந்த அஸ்திரத்தை ஏவினான். அவை திக்கெட்டும் பரவின. அந்த நாராயணாஸ்திரம் பாண்டவ சேனையைப் பொசுக்கியது.
தனது படையினர் இப்படி மடிவதைக் கண்ட தருமபுத்திரர், அச்சத்தினால் பீடிக்கப்பட்டார். அஸ்வத்தாமாவினால் ஏவப்பட்ட நாராயணாஸ்திரம், பாண்டவப் படையைத் தொடர்ந்து பொசுக்கித் தள்ளியது.

இடியோசை கேட்டது; பூமியே அசைந்தது; கடல் கலங்கியது; ஆறுகள் எதிர்த்திசையில் ஓடத் தொடங்கின. பாண்டவர் தரப்பு, பெரும் துன்பத்தை அடைந்தது. இதையெல்லாம் கண்ணுற்ற கிருஷ்ணர், பாண்டவர் தரப்புப் படை வீரர்களைப் பார்த்துத் தனது கையை உயர்த்திப் பேசினார், ‘படை வீரர்களே! உங்களது ஆயுதங்களைக் கீழே போடுங்கள்’.......

மேகலா : பார், கிருஷ்ணா! அர்ஜுனனுடைய குரு விசுவாசம் அவர்களுக்குள்ளேயே பகையை வளர்த்து விடும் போலயே....

கிருஷ்ணர் : அண்ணனுக்கும், தம்பிக்கும் வேற வேலையே இல்லை. எதிர்த்தரப்பில் இருப்பவர் ஒவ்வொருவரும் மிகச் சிறந்த வீரர்கள். அவர்களை அலுக்க வைக்கவே முடியாது. போரை முடிவுக்குக் கொண்டு வரத் திணறும் நேரத்தில், இப்படி ஒரு பிரச்னை. அவன் நாராயணாஸ்திரம் வேறு ஏவி விட்டான். சரி...., என்ன நடக்குது, பார்க்கலாம். நீ மேலே சொல்லு.....

மேகலா : சரி, கிருஷ்ணா! என்ன நடக்கிறது என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்......

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2