ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 88

மேகலா : கர்ணன் எய்த ‘நாகாஸ்திரம்’ அர்ஜுனனின் கிரீடத்தைப் பறித்துச் சென்று, வீணானது என்று சென்ற பகுதியில் பார்த்தோம். நாகாஸ்திரம் ஏவிய போது, ரதத்தை பூமியில் அழுத்திய கிருஷ்ணர், அந்த அஸ்திரம் பாழான பிறகு, தேரை மீண்டும் மேலே வருமாறு செய்தார். அதன் பின், கர்ணன் பெரும் கோபத்துடன் போரிட்டான். அதைக் கண்டு பொறுக்காத அர்ஜுனன், பல அஸ்திரங்களை ஏவ, கர்ணனுடைய கிரீடம் அடிபட்டுப் பூமியில் விழுந்தது. பெரிதும் தாக்கப்பட்ட கர்ணன், உடல் முழுதும் ரத்தம் வழிய, பெரிதும் களைப்படைந்து ஓய்ந்தவனாகி விட்டான்.

அந்த நிலையில், அவனைக் கொன்று விடச் சொல்லி, அர்ஜுனனைக் கிருஷ்ணர் தூண்டி விட்டார். ஆனால், அதற்குள்ளாகக் கர்ணன், தன் களைப்பிலிருந்து விடுபட்டு, மீண்டும் உற்சாகத்துடன் போரிட ஆயத்தமானான்.

ஆனால், அந்த நேரத்தில் விதி விளையாடியது! கர்ணன் பெற்ற சாபங்கள் பலிக்கும் நேரம் நெருங்கியது. கர்ணன் கற்ற சாஸ்திரம் மறந்து போகும் என்ற பரசுராமரின் சாபமும், ஆபத்தான நேரத்தில், ‘உன்னுடைய தேர்ச் சக்கரம் பூமியில் அழுந்தி விடட்டும்’ என்ற முனிவரின் சாபமும் பலிக்கும் நேரம் வந்தது.

மேகலா : கள்ளன் கிருஷ்ணா, நீ! திறமைசாலிகளுக்குக் கூட, கடவுள் அனுக்கிரகமும் வேண்டும்; கூடவே இருந்து முடுக்கி விடுதலும் வேண்டும். முயற்சியும், திறமையும் இருப்பவர்களுக்கு, வெற்றியின் பக்கம் வரைக்கும் கடவுள் அழைத்துச் செல்ல...., தப்பு....தப்பு...., இழுத்துச் செல்வார் போல.... கர்ணனின் நேர்மையா....., ’வச்ச குறியை மாற்ற மாட்டேன்’ என்று சொல்வது..., மிகுந்த தன்னம்பிக்கையா....? இல்லை, ’மறுகுறி வைப்பது, வீரத்திற்கு இழுக்கு’ என்ற நினைப்பா....? இல்லை, இதுதான் விதியா....?
அர்ஜுனன் விஷயத்தில், சாத்யகியுடன் போர் செய்து கொண்டிருந்த பூரிசிரவஸை வீழ்த்தச் சொல்லி, கிருஷ்ணர் சொல்லிக் கொடுக்க, அர்ஜுனன் பூரிசிரவஸின் கையை நோக்கி, அவன் எதிர்பார்க்காத நேரத்தில் அம்பு தொடுக்கத்தானே செய்தான்.....

கிருஷ்ணர் : அது வேற.... அப்படிப் பார்த்தால், அபிமன்யுவை எதிர்க்கும் போது, துரோணர் சொல்லிக் கொடுத்தது போல, அவன் பின்னால் நின்று அபிமன்யுவின் நாணை அறுத்தவன் தானே கர்ணன்....! விதிமீறல் இங்குதான் நடந்தது என்பது இல்லை; அங்கும் நடக்கத்தான் செய்தது. ஆனால், கர்ணனின் போர்ப் பயிற்சி என்பது, ஒரு முறை குறி வைத்தால், அதை மாற்றுவது கிடையாது. சாதனையாளர்களின் பழக்கமே இதுதானே! Project எதை வேண்டுமானாலும் எடுத்து, சாதித்து விடுவார்கள். ஆனால், தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். அது அர்ஜுனனுக்கு சாதகமாகி விட்டது. ஒரு முறை ஏவிய நாகாஸ்திரத்தை மறுபடியும் ஏவவும் மாட்டான்; இது கர்ணனுடைய பழக்கம். அது அர்ஜுனனுக்கு வெற்றியாகி விட்டது. அவ்வளவுதான்.... மேலே சொல்லு.....

கர்ணன் மாண்டான்

மேகலா : கர்ணனுடைய தேர்ச் சக்கரம் பூமியில் அமிழ்ந்து போகத் தொடங்கியது. அதனால், அவனுடைய தேர், நிலையில்லாமல் சுழன்றது. பரசுராமரின் சாபத்திற்கேற்ப, அவனுக்கு அந்த நேரத்தில், அவர் அளித்த அஸ்திரத்தைப் பிரயோகிக்கும் வகையும் மறந்து போயிற்று. ரதமோ, மேலும் மேலும் பூமியில் அழுந்திக் கொண்டிருந்தது. இதைக் கண்ட கர்ணன், மிகவும் வெறுப்புற்று, ‘தர்மத்தைக் காப்பாற்றுகிறவனை என்றும் தர்மம் காப்பற்றும் என்று பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். நாமோ, தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவே இருக்கிறோம். யுத்தத்திலும், தர்மத்தின்படிதான் போராடுகிறோம். ஆனால், அந்த தர்மமோ, நம்மைத் துன்புறுத்துகிறது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று பேசி, தர்மத்தை நொந்து கொண்டான்.

பூமிக்குள் தேர்ச் சக்கரம் அழுந்திய நிலையிலும், முனைந்து யுத்தம் புரிந்து கொண்டிருந்த கர்ணனை, அர்ஜுனன் பல அஸ்திரங்களால் தாக்கினான். ஒரு நிலையில், கர்ணன், தன்னுடைய அஸ்திரங்களால் அர்ஜுனனைத் தாக்கினான். அப்பொழுது அர்ஜுனன் தவிப்பதைக் கண்ட கர்ணன், ஏளனமாக, ‘அர்ஜுனா! போய் பயிற்சி செய்! எப்படி யுத்தம் புரிவது என்று கற்று அறிந்து கொண்டு, பிறகு யுத்த களத்திற்கு வா!’ என்று கேலி செய்தான். இந்த நிலையில், கர்ணனுடைய தேர் பூமியில் நன்றாகவே அழுந்தி விட்டது.

கர்ணன், பூமியில் அமிழ்ந்து போய் விட்ட தேர்ச் சக்கரங்களை எப்படியாவது பூமியிலிருந்து எழுப்ப வேண்டும் என்பதற்காக, தேரிலிருந்து இறங்கி, தன்னுடைய பலத்தை எல்லாம் பிரயோகம் செய்து, தேரை மேலே தூக்க முயற்சித்தான். அப்பொழுது, தேர்ச் சக்கரம் பூமியுடன் கூடவே மேலே எழும்பியது. ஆனால், தேர்ச் சக்கரம் பூமியில் இருந்து விடுபடவில்லை.
அப்போதும், தன்னைத் தாக்குவதில் மும்முரமாக இருந்த அர்ஜுனனைப் பார்த்துக் கர்ணன் சொன்னான்; ‘அர்ஜுனா! கொஞ்சம் பொறுத்துக் கொள். பூமியில் அழுந்தி விட்ட தேர்ச் சக்கரத்தை நான் மேலே தூக்கி விடுகிறேன். இந்த நேரத்தில் என் மீது தாக்குதல் நடத்தி அற்பமான செயலைச் செய்யாதே! நீ சிறந்த வீரன்; தர்மத்தை அறிந்தவன். யுத்த தர்மத்தை அறிந்த நீ தர்மத்துக்குப் புறம்பாகப் போர் செய்யாதே. உன்னைக் கண்டோ, கிருஷ்ணரைக் கண்டோ நான் பயப்படவில்லை. கொஞ்சம் பொறுத்துக் கொள்’ என்று சொன்னான்.

இப்படிக் கர்ணன் கேட்டுக் கொண்ட போது, கிருஷ்ணர் பேசினார், ‘கர்ணா! உனக்கு ஏதோ நல்ல காலம் தான் போலிருக்கிறது. அதனால் தான் இப்பொழுதாவது தர்மத்தைப் பற்றி நினைக்கிறாய். தர்மத்தை நிந்தித்து நீ பேசுகிறாய். ஒன்று புரிந்து கொள். பாண்டவர்கள் தர்மத்தின்படி நடக்கிறார்கள். அதனால், தர்மம் அவர்களைக் காப்பாற்றுகிறது. ஆனால், நீங்களோ, தர்மத்தை விட்டு முழுமையாக விலகி விட்டீர்கள்.
ஒற்றை ஆடையுடன் இருந்த திரௌபதியைச் சபைக்குக் கொண்டு வந்தீர்களே, அது எந்த தர்மத்தைச் சேர்ந்தது? சூதாட்டத்தின் மூலம் யுதிஷ்டிரரைத் தோற்கடித்து, அவருடைய செல்வத்தையெல்லாம் கவர்ந்தீர்களே; அது தர்மமா?

பாண்டவர்கள் வனவாசம் முடிந்து திரும்பிய போது, முதலில் பேசியபடி அவர்களுக்கு ராஜ்ஜியம் கொடுக்க மறுத்தீர்களே; இது தர்மமா? பீமனைப் பாம்புகள் மூலமாகவும், விஷத்தின் மூலமாகவும் கொல்ல முயற்சித்தீர்கள். வாரணாவதத்தில் அரக்கு மாளிகை கட்டி, அதில் பாண்டவர்களைக் குடியேற்றி, அவர்களை உயிருடன் எரித்து விடுவதற்கு முனைந்தீர்களே; அப்பொழுது எங்கே போயிற்று உன் தர்ம சிந்தனை? திரௌபதியை அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல், பரிகாசம் செய்து பேசினாயே, நீயா தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதி உள்ளவன்? பலரோடு சேர்ந்து யுத்த களத்தில் அபிமன்யுவைக் கொன்று விட்டு, இங்கு வந்து யுத்த நெறிகளைப் பற்றிப் பேசுகிறாய்! தர்மத்தில் தவறாதவர்கள் பாண்டவர்கள். யுத்தத்தில் ஜெயித்து ராஜ்ஜியத்தை அடையப் போகிறார்கள்; நீங்கள் நாசமடைவீர்கள்’.

இவ்வாறு கிருஷ்ணர் பழைய நிகழ்ச்சிகளைப் பட்டியலிட்ட போது, கர்ணன் வெட்கித் தலை குனிந்தான். அந்த நேரத்தில், தேர்ச் சக்கரத்தை மேலே தூக்க முயற்சித்துக் கொண்டிருந்த நிலையில் கிருஷ்ணர், அர்ஜுனனிடம், ‘அர்ஜுனா! தயக்கமின்றி இவன் கவசத்தைப் பிளந்து, இவனுடைய உயிரை மாய்ப்பாயாக’ என்று கூறினார்.

உடனே அர்ஜுனன், கர்ணனைக் கொன்றானா, என்ன நடந்தது என்பதை அறிய அடுத்த பகுதி வரை காத்திருப்போமா....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2