ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 73

மேகலா : யுத்த களத்தில், கடோத்கஜன் இறந்ததைப் பார்த்து கிருஷ்ணர் சந்தோஷப்பட்டார் என்று சென்ற பகுதியின் முடிவில் பார்த்தோம்.
மலை போல் விழுந்து கிடந்த கடோத்கஜனைப் பார்த்து, பாண்டவர் தரப்பில் எல்லோரும் கதறினார்கள். ஆனால், கிருஷ்ணரோ, மிகவும் மகிழ்ச்சி கொண்டவராக, அர்ஜுனனைக் கட்டிக் கொண்டார். அவர் ஏன் கடோத்கஜனின் மறைவுக்கு அப்படிச் செய்தார் என்று எல்லோரும் வியந்தனர். அர்ஜுனன், கிருஷ்ணரின் செயலால் மனம் குழம்பினான். அவருடைய செய்கைக்கு அர்த்தம் கேட்டான்.

அதற்கு, கிருஷ்ணர் விளக்கம் சொன்னார். ’கடோத்கஜன் மீது கர்ணன் சக்தி ஆயுதத்தை ஏவியதால், இனி உன்னிடம் கர்ணன் வீழப் போகிறான். இந்திரன், சக்தி ஆயுதத்தைக் கர்ணனிடம் தரும் போது, ‘ஒரு முறை மட்டும் தான் சக்தி ஆயுதத்தை நீ ஏவ முடியும்; அதன் பிறகு அது என்னிடமே திரும்பி விடும்’ என்ற நிபந்தனையை விதித்தான். இனி இந்த சக்தி ஆயுதம் கர்ணனுக்குப் பயன்படாது.

சக்தி ஆயுதத்தைக் கையில் வைத்திருக்கும் கர்ணனை எமனே வந்தாலும் கூட, எதிர்ப்பது என்பது நடக்காத காரியம். இனி அவனை வீழ்த்துவது நடக்கக்கூடிய காரியமே. ஆனாலும், உண்மையையே பேசுகிறவன்; பெரும் தவம் செய்தவன்; விரதங்களை உண்மையாக அனுஷ்டிக்கிறவன்; பகைவர்களிடத்திலும் கருணை கொண்டவன்; பெரும் பலசாலி; தன்னிகரில்லாத வீரன்; இப்பவும், அர்ஜுனனால் மட்டுமே அவனை வெல்ல முடியும் என்ற திறமை கொண்டவன். இப்பவும், நீ கொஞ்சம் அஜாக்கிரதை காட்டினாலும், நீ அவனிடம் தோற்று விடுவாய். நான் சொல்லும் குறிப்பை உணர்ந்து, அவனை வீழ்த்த வேண்டும். கர்ணனையும் உபாயம் செய்தே வீழ்த்த வேண்டும்’ என்று அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.

மேகலா : சக்தி ஆயுதம் ஏவிய பின்பும், உபாயம் மூலம் தான் கர்ணன் ஜெயிக்கப்பட வேண்டுமா, கிருஷ்ணா?

கிருஷ்ணர் : போரில் உபாயம் செய்வது என்பது ஒரு technical check-mate! ஆனால், போருக்கு முன்பிருந்தே உபாயம் தொடங்கி விட்டதல்லவா, மேகலா! பாண்டவர்கள் வெறும் ஐந்து பேர். கௌரவர்கள் நூறு பேரோடு பீஷ்மர், துரோணர், கிருபர், சல்லியன், அஸ்வத்தாமா, கர்ணன், மேலும் அஸ்தினாபுரத்து படையே இருக்கிறது. இவர்களிடமிருந்து நாட்டையும், செல்வத்தையும் மீட்டுக் கொடுப்பதென்பது சாதாரண விஷயமில்லை. நீ யோசித்துப் பார். போர் துவங்கும் முன்னமேயே ஜராசந்தன், சிசுபாலன் அழிந்தனர். ஜராசந்தன் கையிலிருந்த கதாயுதம் இருந்திருந்தால், பீமனால் அவனை அழித்திருக்கவே முடியாது. பலராமன் கதாயுதத்தை அழித்தார். ஜராசந்தனை பீமன் அழித்தான்.

ஏகலைவன், துரோணரைத் தன் ஆசானாக மனதில் வரித்துக் கொண்டு, வில்வித்தை பயின்றான். அவனுடைய ’வில்லை ஏந்தும், அம்பைச் செலுத்தும் முறையைப்’ பார்த்த துரோணர், குருதட்சணையாக, அவன் கட்டைவிரலை ஏன் பெற்றுக் கொண்டார், தெரியுமா.....? அவன், தன் முழுத் திறமையைக் காட்டினால், அர்ஜுனனால் நிச்சயம் அவனை எதிர்க்க முடியாது. துரோணர், அவன் கட்டை விரலை, அர்ஜுனனின் வெற்றிக்காகவே, வெட்டித் தரச் சொன்னார். சிசுபாலனும் அர்ஜுனனுக்காகவே கொல்லப்பட்டான்.

துரியோதனின் பக்கம் நின்று போர் புரியக் கூடிய வீரர்கள், போர் துவங்கும் முன்னமேயே, உபாயம் செய்து தான், அதுவும் அர்ஜுனனுக்காகவேதான் கொல்லப்பட்டார்கள். தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவே, இவையெல்லாம் செய்யப்பட்டது. எந்த இடத்தில் சத்தியமும், தர்மமும், பொறுமையும் இருக்கின்றனவோ, அந்த இடத்திற்குச் சாதகமாகத்தான் என்னால் செயல்பட முடியும். தர்மத்திற்கு விரோதமானவர்களை அழித்து, தர்மத்திலிருந்து வழுவாமல் இருப்பவர்களுக்கு உதவுவதே என்னுடைய நோக்கம்.
இது மட்டுமல்ல; இனி வரப் போகும் நாட்களிலும், கர்ணனும் ஒரு உபாயத்தின் மூலமாகத்தான் வெல்லப்படுவான். பீமனால், துரியோதனன் வீழ்த்தப்படுவதும் ஒரு உபாயத்தின் மூலமாகவே நடக்கப் போகிறது.
கர்ணனோ, துரியோதனனோ வீரத்தில் அர்ஜுனனுக்கும், பீமனுக்கும் கொஞ்சமும் குறைந்தவர்கள் அல்ல; இங்கு உபாயம் மூலம் வெல்வது என்பது அவசியமாகிறது.

மேகலா : கிருஷ்ணா! பரம்பொருளாகிய நீ அருகில் நின்று உதவுவதும், உபாயம் சொல்வதும், வெற்றி தருவதும் என்று இருந்து விட்டால், எங்களைப் போன்ற சாமான்யர்களுக்கு, அது கதையாக இருந்தாலும், தேசிய விஷயங்களாக இருந்தாலும்; ஏன் எங்கள் வாழ்க்கையாகவே இருந்தாலும், இனி எங்களுக்கு பயம் என்பதே இல்லை, கிருஷ்ணா!

கிருஷ்ணர் : நான், உன் அருகில் இல்லை என்றா நினைக்கிறாய்? நீ கதை சொல்லு; நான் கேட்கிறேன்.....

தருமன் கூறிய பொய்

மேகலா : கடோத்கஜன் மாண்டதால் பெரிதும் துக்கமுற்ற தர்மனிடம், வியாசர் அறிவுரை கூறினார். ‘உனக்கு விரைவில் வெற்றி கிட்டப் போகிறது’ என்று வியாசர் கூறியதைக் கேட்டு, தர்மன், கர்ணனை எதிர்த்துக் கொல்லும் எண்ணத்தைக் கை விட்டான். அதன் பிறகு, திருஷ்டத்யும்னனை அழைத்து, துரோணரை எதிர்த்துப் போர் புரிய உத்தரவிட்டான்.

துரியோதனன், துரோணரைப் பாதுகப்பதற்காக, வீரர்களை நிறுத்தினான். ஆனாலும், நாள் முழுவதும் சண்டையிட்டு, பிறகு இரவு நேரத்திலும் போரிட்டுக் கொண்டிருந்ததால், இரு தரப்புப் படை வீரர்களும் மிகவும் சோர்ந்திருந்தனர். இதைக் கண்ட அர்ஜுனன், பாண்டவர் தரப்பு வீரர்களைப் பார்த்து, ‘நீங்கள் எல்லோரும் விரும்பினால் ஓய்வு எடுத்துக் கொண்டு, களைப்பு தீர்ந்து, மீண்டும் யுத்தம் புரிவோம்’ என்று கூறினான். இதை ஏற்ற பாண்டவர் தரப்பினர் யுத்தத்தை நிறுத்தியதால், துரியோதனன் தரப்பிலும், யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது. ஒரு சில மணி நேரங்கள் ஓய்வெடுத்துக் கொண்ட பிறகு, மீண்டும் யுத்தத்தைத் தொடர்ந்தார்கள்.
இப்படிப் படை வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதை, துரியோதனன் விரும்பவில்லை. துரோணரைப் பார்த்து, ‘பாண்டவர் தரப்பு வீரர்கள் ஓய்வு எடுத்தார்கள் என்று, நம் பக்கத்து வீரர்களுக்கும் ஓய்வு கொடுத்திருக்கக் கூடாது. பாண்டவர் தரப்பு வீரர்களிடம் உங்களுக்குக் கருணை இருப்பதால் தான், நாம் இன்னமும் வெற்றி பெறாமல் இருக்கிறோம்’.

இப்படிக் கூறிய துரியோதனனைப் பார்த்து துரோணர், ‘நான் என் வயதுக்கு, உற்சாகத்துடன் போரிடுகிறேன். இன்னும் உக்கிரமாகப் போர் புரிய வேண்டும் என்றால், யுத்த நெறிகளையும் மீறி, மிக இழிவான செயல்களை நான் புரிய வேண்டும். ஆனால், இழிசெயலோ, நற்செயலோ, உனக்காக அதைச் செய்து விடத் தயாராயிருக்கிறேன். ஆனாலும், அர்ஜுனனை எதிர்ப்பது எளிதான காரியம் அல்ல’ என்று கூறிய துரோணரைப் பார்த்து, ‘அர்ஜுனனிடம் உங்களுக்குப் பெரும் அன்பு உள்ளது. யுத்தத்திலிருந்து நீங்கள் ஒதுங்கி நில்லுங்கள். துச்சாசனன், சகுனி, கர்ணன், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்றான்.

‘துரியோதனா! நீ இப்படிப் பேசுவது, இது முதல் முறையல்ல. நீயும், பாண்டவர்களை வெல்வேன் என்று பலமுறை கூறி விட்டாய். இதோ, இதுவே சரியான தருணம். அர்ஜுனனை எதிர்த்து வெற்றி பெறுவாயாக. என்னைப் பொறுத்த வரையில் பாஞ்சாலர்களைக் கொன்று குவித்த பின்பே, என் கவசத்தைக் கழற்றப் போகிறேன்’ என்று துரோணர் சபதம் செய்தார்.

இரவு நேரமும் யுத்தம் தொடர்ந்தது. அந்தப் போர் நிகழ்ச்சிகளை நாம் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2