ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 80

மேகலா : யுத்த களத்தில், சல்யன், கர்ணனின் மதிப்பைக் குறை சொல்லி, அர்ஜுனனின் பெருமையை அதிகரித்துப் பேசி, கர்ணனைக் கோபமுறச் செய்தான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம்.
இப்படி, தருமபுத்திரனுக்கு உதவி செய்வதற்காகப் பேசினாலும், தன் போர்த்திறமையை வெளிப்படுத்துவதிலும், ரதத்தைத் திறமையாக ஓட்டுவதிலும் சல்யன், எந்தவிதக் குறையும் வைக்கவில்லை.
என்றாலும், கர்ணன் தன் ஆர்வத்தைக் கொஞ்சம் இழந்து சிந்தனையில் ஆழ்ந்தான்.

பின் சல்யனைப் பார்த்து, ‘கிருஷ்ணரையும், அர்ஜுனனையும் பயமின்றிப் போரில் எதிர்க்கத் துணிந்த இந்த நேரத்தில், நான் பெற்ற இரண்டு சாபங்களை உன்னிடம் கூறுகிறேன். பிராமணர்களுக்கு மட்டுமே அஸ்திரம் பயிற்றுவிப்பது என்று விரதம் பூண்டிருந்த பரசுராமரிடம், பிராமணனாக வேஷமிட்டு, அஸ்திரங்கள் அனைத்தையும் கற்று, சிறந்து விளங்கினேன். என்னுடைய திறமையிலும், குருபக்தியிலும் மிகுந்த மகிழ்ச்சி கொண்ட பரசுராமர், என் தொடை மீது தன் தலையை வைத்துத் தூங்கினார். தேவேந்திரன், அர்ஜுனனுக்கு நன்மை செய்ய விரும்பி, ஒரு புழுவாக உருமாறி, என் தொடையைத் துளைத்து, அதிலிருந்து இரத்தம் கசிந்தது. குருவின் தூக்கம் கலையாமல் இருக்க நினைத்து, என் வலியைப் பொறுத்துக் கொண்டேன். ஆனால், பெருகி வந்த இரத்தம், பரசுராமரின் உடலை நனைக்கவும், அவர் விழித்துக் கொண்டார்.

அப்போது, அவர் என்னைப் பார்த்து, ‘இவ்வளவு தூரம் வலியைப் பொறுத்துக் கொண்ட நீ நிச்சயமாக பிராமணனாக இருக்க முடியாது. உண்மையைச் சொல்’ என்று கேட்கவும், ‘நான் தேரோட்டியின் மகன்’ என்ற உண்மையைச் சொன்னேன். அப்பொழுது, அவர் மிகவும் கோபம் கொண்டு, ‘உன்னால் அடையப் பெற்ற பிரம்மாஸ்திரம், உனக்கு மிகவும் தேவைப்படும் சமயத்தில், உனக்கு பயன்படாமல் போகக் கடவது’ என்று சபித்து விட்டார்.

எனக்கு வேறு ஒரு சாபமும் இருக்கிறது. தவ வலிமை மிகுந்த முனிவர் ஒருவரின் கன்றினை, அம்பு எய்து கொன்று விட்டேன். அந்தக் கன்றின் மீது எழுந்த பாசத்தினால் அவர், ’ஒன்றும் அறியாத கன்றினைக் கொன்றவனே! உனக்கு ஆபத்து வரும் சமயத்தில், உன் ரதத்தின் சக்கரம் மண்ணில் புதைந்து விடும். அந்த நேரத்தில், யுத்தத்தில் நீ மடிவாய்’ என்று சாபமிட்டார். இந்த இரண்டு சாபங்களும் என்னைச் சங்கடப்படுத்தினாலும், எனக்குப் போர் புரிவதற்கான தைரியம் சிறிதும் குறையவில்லை. அச்சமும் தயக்கமும் கொஞ்சம் கூட இல்லை.

’சாபம் காரணமாக தேரின் சக்கரம் மண்ணில் அழுந்தாமல் இருந்தால், நான் கற்றறிந்த பிரம்மாஸ்திரம் மறவாமல் இருந்தால், நிச்சயம் கிருஷ்ணரையும், அர்ஜுனனையும் வெல்வேன்’.
இதைக் கேட்ட சல்யன், ‘நீ தற்புகழ்ச்சி செய்வதிலிருந்து, உனக்குத் திறமை போதாது என்பது தெளிவாகிறது. கர்ணா! பல கெட்ட சகுனங்களை நான் பார்க்கிறேன். உன்னுடைய தோல்வியையே இவையெல்லாம் குறிப்பதாக நான் கருதுகிறேன். காற்றையே கட்டிப் பிடித்து விட முயல்பவன் போல், அர்ஜுனனை வென்று விட முயற்சிக்கிறாய். எந்த இடத்தில் கிருஷ்ணரும், அர்ஜுனனும் இருக்கிறார்களோ, அந்த இடத்தில் வெற்றியும், தர்மமும் ஒன்றாக நிலைத்து நிற்கும்’.

இப்படி சல்யனும், கர்ணனும் ஒருவருக்கொருவர் ஏசிக் கொண்டிருந்த நிலையில், துரியோதனன் அங்கு வந்து, அவர்கள் இருவருக்கும் யுத்தத்தில் முனைப்பு ஏற்படுத்த விரும்பி, அவர்களைப் பார்த்துச் சொன்னான், ‘பெரும் பாக்கியம் செய்துள்ள க்ஷத்திரியர்கள் தான் இந்த மாதிரி யுத்தத்தைச் சந்திக்கிறார்கள்: அது நமக்குக் கிடைத்திருக்கிறது. யுத்தத்தில் பாண்டவர்களை வென்று ராஜ்ஜியத்தை ஆள்வோம்; அல்லது அவர்களிடம் தோற்று வீர சொர்க்கத்தை அடைவோம். யுத்தத்தில் முனையுங்கள்’.

துரியோதனன் இவ்வாறு பேசியவுடன், அவனுடைய தரப்பு வீரர்களெல்லாம் தங்களது சங்குகளை ஒலித்தார்கள். சிம்ம கர்ஜனை புரிந்தார்கள். இதனைப் பார்த்த அஸ்வத்தாமா, திருஷ்டத்யும்னனின் தலையைத் துண்டிக்கப் போகிறேன் என்று சபதம் செய்தான்.

அதன் பிறகு அங்கு நடந்த யுத்தத்தைக் காண, வானில் தேவர் கூட்டமே கூடியது. யுத்தத் தொடக்கத்திலேயே துரியோதனனும், பீமனும் மோதிக் கொண்டார்கள். துரியோதனன் புறம் காட்டி ஓட வேண்டியதாயிற்று.
கர்ணன், பாண்டவர் சேனையை சிதறடித்துக் கொண்டிருந்தான். அவனுடைய மகன்களாகிய வருஷசேனன், சுஷேனன், சத்யசேனன் ஆகியோரும் கர்ணனுக்கு உதவியாகப் பெரும் யுத்தம் புரிந்து கொண்டிருந்தார்கள். அந்த யுத்தத்தில் கர்ணன் காட்டிய போர்த்திறனைக் கண்டு எல்லோரும் வியந்தார்கள். அவன் அம்புகளை எடுப்பதையோ, வில்லில் பூட்டுவதையோ, நாணேற்றுவதையோ யாரும் காண முடியவில்லை. அந்த அளவுக்கு வேகமாக அவை நடந்து முடிந்தன.
இந்த நேரத்தில் தருமன், கர்ணனைத் தாக்க முனைந்து, கடுமையாக யுத்தம் புரிந்தான். ஒரு நேரத்தில் கர்ணன் மூர்ச்சையாகி, தேரோட்டியான சல்யனுக்கு அருகில் விழுந்தான். அர்ஜுனனே, கர்ணனை வீழ்த்த வேண்டும் என்று நினைத்த தருமன், அப்போது கர்ணனைக் கொல்ல முயற்சிக்கவில்லை.

ஆனால், வெகு விரைவிலேயே மீண்டும் நினைவு திரும்பிய கர்ணன், தருமனைத் தாக்குவதில் முன்பை விட ஊக்கத்துடன் முனைந்தான். கர்ணன், ஒரு வலிமையான அஸ்திரத்தைத் தருமபுத்திரன் மீது ஏவ, அது அவனுடைய கவசத்தைப் பிளந்து, உடைத்து எறிந்தது. தருமபுத்திரன், அவனை எதிர்க்கச் சக்தியற்றவனாகி, அந்த இடத்திலிருந்து விலகத் தொடங்கினான்.
அப்போது, கர்ணன், ‘தர்மா! இப்போது உன்னை நான் கொல்லப் போவதில்லை. அர்ஜுனனும், கிருஷ்ணரும் எங்கே இருக்கிறார்களோ, அங்கே சென்று, அவர்களிடம், உன்னைப் பாதுகாக்கும்படிக் கேட்டுக் கொள்; பிழைத்துப் போ’ என்று பரிகாசமாய்க் கூறினான்.
சோர்ந்து போயிருந்த பாண்டவ சேனையை பீமன் அழைத்து உற்சாகப்படுத்திய பின், மீண்டும் கோரமான யுத்தம் நடக்கத் தொடங்கியது. பாண்டவ சைன்யம் புரிந்த யுத்தத்தில், துரியோதனன் தரப்பின் கை தாழத் தொடங்கியது.

பீமனால் விளைந்து கொண்டிருந்த நாசத்தைக் கண்ட கர்ணன், அவனை நோக்கித் தன்னுடைய தேரை ஓட்டுமாறு சல்யனிடம் கூற, அவனும் அவ்வாறே செய்தான்.

தன்னை எதிர்த்து வருகிற கர்ணனைச் சந்திக்கத் தயாரானான், பீமன். அப்பொழுது சல்யன், கர்ணனைப் பார்த்து, ‘கர்ணா! பீமன் பெரும் கோபத்துடன் வருகிறான். தன் மகன் கடோத்கஜன் கொல்லப்பட்ட போது கூட, இப்படிப்பட்ட கோபத்தைப் பீமனிடம் நான் பார்க்கவில்லை’ என்று எச்சரித்தான்.

தன்னை எச்சரித்த சல்யனிடம், கர்ணன், ‘பீமனை எதிர்ப்பதோ, கொல்லுவதோ என் நோக்கமல்ல. அர்ஜுனனைக் கொல்ல வேண்டும், அல்லது அவனால் நான் கொல்லப்பட வேண்டும் என்பதே எனது லட்சியம். பீமனை நான் எதிர்ப்பதால், அர்ஜுனன் கோபம் கொண்டு என்னை எதிர்க்க வருவான். நான் விரும்பிய வாய்ப்பை அது எனக்குத் தரும்’ என்று கூறி, பீமனுடன் யுத்தம் புரியத் தொடங்கினான். மிகப் பயங்கரமான யுத்தம் தொடங்கியது. ஒரு மதயானை போலப் பீமன் போரிட்டான். கர்ணன், மதயானையை அடக்குவதற்குக் கொள்ளிக் கட்டைகளால் அடிப்பது போல, பீமனை அடித்துக் கொண்டிருந்தான். இருவருக்குமிடையே நடந்த யுத்தத்தில், கர்ணன், இரத்தத்தினால் நனைக்கப்பட்டவனாக நினைவை இழந்து, தேர்த்தட்டில் விழுந்தான். அப்போது கர்ணனைக் கொல்வதற்காக ஓடி வந்த பீமனைப் பார்த்து, சல்யன், ‘பீமா! கர்ணனைக் கொல்வேன்’ என்பது அர்ஜுனனின் சபதம். நீ இப்போது கர்ணனைக் கொன்றால், அர்ஜுனனுடைய வார்த்தைகள் வீணாகி விடும்’ என்று கூறவும், பீமன் சல்யனின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டான். இதற்குப் பிறகு, வீழ்ந்து விட்ட கர்ணனைத் தாங்கிக் கொண்டு, அந்த இடத்திலிருந்து சல்யன், தேரை ஓட்டிச் சென்றான். கௌரவர் படை சிதறத் தொடங்கியது.

மேலும் நடந்த யுத்தக் காட்சிகளை அடுத்த பகுதியில் கானலாம்.

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2