எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 9

மேகலா : ‘இசை’, கிருஷ்ணா…. நாட்டுப்புறப் பாடல்கள்… இதை entertainment-ஆக கிராமத்து மக்கள் பார்க்கவில்லை… தங்களோட வாழ்க்கையின் ஜீவநாடியாகவே பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்…

கிருஷ்ணர் : ஆமாம்ல…. ‘ஆமாம்’…. எங்கே, அதைச் சொல்லு மேகலா…

மேகலா : ஒரு மனிதன் பிறந்த போது, ‘தாலாட்டு’ என்ற பாடலில் ஆரம்பித்து, அவன் இறக்கும் போது, ‘ஒப்பாரி’ என்ற பாடல் வரைக்கும் மனிதனோடு இசைந்து வருவது தான் நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்பம்சம் கிருஷ்ணா…. இந்தப் பாடல்கள் பாடுவதற்கு மனிதன் படித்திருக்க வேண்டாம்…, பட்டம் பெற்றிருக்க வேண்டாம். வாழ்க்கையோடு ஒன்றி வாழும் பொழுது பாட்டு தானாக வந்து விடுகிறது கிருஷ்ணா…. இப்பல்லாம் தாலாட்டுப் பாட்டு கூட, கண்ணதாசன் பாடலை மக்கள் பாடி விடுகிறார்கள் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : சரி…, உனக்குத் தெரிந்த பாடலைத்தான் பாடிக் காட்டேன்….

மேகலா :

’என் கண்ணே, கண்ணே நீ கானமயில் கண்ணுறங்கு

என் பொன்னே…..

பூமரத்து கிளியுறங்கு…

உன் மாமன் அடிச்சானோ

உன்ன மல்லிகப் பூ செண்டாலே

யாரடிச்சா சொல்லி அழு’

என்ற இந்தப் பாட்டை என் அம்மாவோட அம்மா…, அதாவது என் ‘மாம்மை’ பாடி கேட்டிருக்கிறேன் கிருஷ்ணா. இதெல்லாம் அன்றாட வாழ்க்கையில், மிகச் சாதாரண மனிதர்கள் பாடும் பாட்டு…. நாட்டுப்புறப் பாடல்கள் என்பது, ஒவ்வொரு வேலை செய்யும் போது, வேலை செய்யும் அலுப்புத் தீரமக்கள் பாடும் பாட்டு. இட்டுக்கட்டி பாடும் பாட்டு என்று கூட சொல்லலாம் கிருஷ்ணா….

‘சோளம் விதைக்கையிலே

சொல்லிக்கிட்டு போன புள்ள

சோளம் வெளஞ்சி காத்துக்கிடக்கு

சோடிக்கிளி எங்கயிருக்கு

சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி

என்ற இந்தப் பாடல், திரைப்படப் பாடல் தான் என்றாலும், நாட்டுப்புறப் பாடல், இந்த மாதிரிதான் இருக்கும் கிருஷ்ணா…. அதிலும், ஒருவர் ஒரு வரியைப் பாட…, அதற்குப் பதில் சொல்லும் விதமாக, அடுத்தவர் இன்னும் ஒரு வரியைப் பாட…. வேலை செய்யும் இடமே…, ஒரு ஜாலியான இடமாக மாறி விடும் போல….

கிருஷ்ணர் : வட இந்தியாவில், ‘கவ்வாலி’ (qawwali) பாடல்கள் மாதிரி….

மேகலா : கிட்டத்தட்ட அப்படியும் இருக்கலாம் கிருஷ்ணா….

‘ஏறாத மலை மேல

எலந்த பழுத்திருக்கு…. எலந்த பழுத்திருக்கு

ஏறி உலுப்பட்டுமா

எஞ்சோட்டுப் பெண்டுகளா

இள வட்டங் கண்ணுகளா – என்று இப்படிப் பாடுகிறார் ஒருவர்.

‘ஏறாத மல மேல எலந்த பழுத்திருக்கு

ஏறி உலுப்பி விட இன்னும்

கொஞ்சம் நாளிருக்கு’ – என்று, இதில் comedy கலந்தும், அங்கு இருக்கும் situation பார்த்தும் பாடுபவர்களும் உண்டு கிருஷ்ணா…. ஒரு கதை இதற்கு உண்டு…

இரண்டு பெண்கள், எங்கு சென்றாலும், அங்குள்ள பொருட்களைத் திருடி வருவார்கள். ஒரு நாள், இருவரும் ஒரு ‘இழவு’ வீட்டிற்குச் செல்கிறார்கள். அந்த வீட்டில், பாகல் கொடி படர்ந்து பாகற்காய், கொத்து கொத்தாக காய்த்திருக்கு… இழவு வீட்டில், சம்பந்தப்பட்டவரைக் கட்டிப் பிடித்து ‘ஒப்பாரி’ பாடுகிறார்கள் அந்தப் பெண்கள். அதில் ஒருத்தி, ராகத்துடன்,

‘பந்தல்ல பாவக்கா, பந்தல்ல பாவக்கா’ என்கிறாள். கூட வந்தவளோ,

அதப் போகும் போது பாத்துக்கலாம், போகும் போது பாத்துக்கலாம்’ என்கிறாள்….

இவர்கள், குறிப்பாகப் பாடுவதைக் கேட்ட வீட்டுக்காரி, ஒப்பாரி அழுகையோடயே,

‘நான் அதை விதைக்காக வச்சிருக்கேன், விதைக்காக வச்சிருக்கேன்’ணு பதில் சொல்கிறாள். இப்படி, situation-ஐ அப்படியே, பாடலாக்கிப் பாடுவதும் முன்னோர்கள் style ஆக இருந்திருக்கு.

கிருஷ்ணர் : வாழ்க்கையை எப்படி easy-யா எடுத்துச் சென்றிருக்கிறார்கள் பார் மேகலா…

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2