Maturity - பாகம் 9

மேகலா : So, சின்ன வயசுலேயே சாதிப்பவர்கள், வேலையில் தெளிவாக இருக்கணும். அதே சமயத்தில், வெற்றியை எட்டிப் பிடிக்க தன்னைத்தானே, திறமையைப் பாராட்டி உசுப்பேத்திக் கொள்வதில் தப்பு கிடையாது…. ஆமாம் கிருஷ்ணா…, நீ சொல்வது சரிதான். Tennis விளையாடும் போது, rally பண்ணிக் கொண்டே இருப்பவர்கள், ஒரு சமயத்தில், எதிராளி தொடவே முடியாதபடிக்கு ஒரு smash அடித்து, கையை பலம் காட்டி கத்துவார்கள். அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா…. ‘யார்ட்ட…, யார்ட்ட வந்து மோதுற…, சிங்கம்டா’ – என்று சொல்வது போல இருக்கும்… ஒரு ace போட்டாலும், காலை உதைத்து, racket-ஐத் தட்டி, ஜாலியாகக் குதித்து, தன் பலத்தை ரசித்து, தங்களைத் தாங்களே குஷியாக உற்சாகப்படுத்திக் கொள்வார்கள். கிருஷ்ணா…, தன்னுடைய திறமையினால் தானே final வரைக்கும் வருகிறார்கள். ஆனாலும், விளையாடும் போது, தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்துதல், தற்பெருமையல்ல…; வெற்றியை எட்டிப் பிடிக்கும் உற்சாகம்….

கிருஷ்ணர் : Yes…, very true…. மகாபாரதத்திலும் ஒரு காட்சி வருமே…. குருக்ஷேத்திரப் போருக்கு, இரு பக்கத்தாரும் தயாராகும் போது…, படைத் தளபதியாக பீஷ்மர் பொறுப்பேற்பார். துரியோதனன், எல்லோரையும் அறிமுகப்படுத்தி விட்டு, தளபதியை announce பண்ணும் போது…, ‘நீங்கள் எல்லோரும் மிகச் சிறந்த வீரர்கள்… எதிரில் இருப்பது பாண்டவர்கள் என்பதை மறந்து, நம்முடைய வெற்றிக்காக பாடுபடுங்கள்’ என்று கூறுவான். அப்போது பீஷ்மர், ‘என்னால் பாண்டவர்களைக் கொல்ல முடியாது. ஆனால், போர் புரிய வேண்டும் என்று களத்தில் இறங்கிய பின், ஒரு நாளைக்கு பதினாயிரம் பாண்டவர் தரப்பு வீரர்களைக் கொல்லுவேன்…. நான் இருக்கும் வரை, என்னைத் தாண்டி, பாண்டவர்களால் வெற்றியைத் தொட முடியாது’ என்று தீர்க்கமாகச் சொல்லுவார். அப்படித்தான் நடக்கவும் செய்தது. இந்த இடத்தில், ஒரு வீரனுக்கோ, போட்டியாளருக்கோ, தன்னுடைய திறமை மீது வலுவான நம்பிக்கை இருக்கிறது… அந்த நம்பிக்கை, அல்லது தற்பெருமை…, அதுதான் அவர்களை உற்சாகமாக வெற்றியின் சமீபத்திற்கு அழைத்துச் செல்கிறது. நீ சொன்னாயே…, ‘tennis match’, அதில் ஒரு point miss பண்ணினால் கூட, அந்த player தனக்குத் தானே பேசிக் கொள்வான்…, ‘டேய், cheer-up, cheer-up’ என்று… இவையெல்லாம் maturity இல்லாத சிறுபிள்ளைத்தனமானது இல்லை… ஒரு வகையில், வெற்றி அடைவதற்குத் தன்னைத்தானே தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துதல்….

மேகலா : கிருஷ்ணா! இந்த topic-ஐப் பேசப் பேச…, பல நுணுக்கமான psychology பிரமிக்க வைக்கிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : பின்ன…, இல்லையா… maturity என்பது வெகு அற்புதமான குணம்…. முழுமையாகப் பக்குவம் அடையாத சாதனையாளர்கள் கூட, தங்கள் திறமைக்கான செயல்களில் தெளிவாகவும், பக்குவமாகவும் நடந்து கொள்ள வேண்டிய தருணங்கள் சுவாரஸ்யமானது. அதிலும், நீ குறிப்பிட்டது போல, விளையாட்டுத் துறையில், வெற்றி வாய்ப்பை சில நொடிகளில் தவற விட்டவர்கள், திரும்ப தன் சிகரத்தை எட்ட முயற்சிக்கும் போது…, அவர்களுடைய பயிற்சியாளர்…, முதலில் அவர்களை ஆசுவாசப்படுத்தி, சகஜ நிலைக்கு வரச் செய்வார். அதற்குப் பிறகு, வெற்றி எதனால் இழக்கப்பட்டது என்பதை எடுத்துச் சொல்லி புரிய வைப்பார். எந்தச் செயலிலும், ‘ஏன் இப்படி ஆயிற்று’ என்று அலசிப் பார்க்கும் தருணம்…, ‘தான் இன்னும் மெருகேற வேண்டும்’ என்ற உண்மையை புலப்பட வைக்கும்… அல்லது அடுத்த முறை, இன்னும் கவனத்துடன், தவறு நேர்ந்து விடாமல் விளையாட வைக்கும். இன்னும் ஒரு சில அற்புதமான தருணம் இருக்கிறது. சிலர், தங்கள் செயலை செய்து முடித்தவுடன், அவர்கள் மனதில் முழுத் திருப்தி ஏற்படும்…, அது எந்த வேலையாக இருந்தாலும் சரி… விண்ணில் ஏவும் ஏவுகலமாக இருந்தாலும், 1000 பேருக்கு பிரியாணி செய்வதானாலும் சரி.., பலத்த கைதட்டலுடன், Grand Slam வெற்றி பெற்றாலும் சரி…, வர்த்தகத்தில் மிகப் பெரிய dealing-ஐ challenge-ஆக எடுத்துச் செய்து வெற்றி பெற்றாலும் சரி…, புரியாத கணக்குப் பாடத்தை, மாணவர்களுக்கு புரிய வைத்து, 100% result கொடுத்தாலும் சரி… எந்த வேலையாகவும் இருக்கட்டும்…, சாதித்த அன்று…, தூக்கமே வராத அளவுக்கு ஒரு மனத் திருப்தி…, சந்தோஷம் வரும், பார்… அப்படிப்பட்ட அவர்கள், maturity அடைவது நிச்சயம் நடக்கும்…. எதிலும் திருப்தி இல்லாமல் இருப்பது, நிம்மதியைத் தடுக்கும்… திருப்தி…, நிம்மதியைக் கொடுக்கும். நிம்மதியடைபவர்கள், திருப்தி எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்வார்கள்….

மேகலா : Oh! அப்படீன்னா…, ஒரு மனுஷன், தன்னுடைய திறமையில் நம்பிக்கையுடனும், சந்தோஷமாகவும் இருக்கணும்… அப்படிப்பட்ட சந்தோஷத்துடன் செய்து முடித்த வேலையில் திருப்தி இருக்கணும். ‘நாம நல்லாதான் செஞ்சிருக்கோம்’ – என்ற மன நிறைவு இருக்கணும்… அப்படிப்பட்ட மன நிலையில் இருக்கும் மனிதர்கள், நிதானத்துடனும், தெளிவுடனும் இருப்பார்கள். இவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக பக்குவ நிலையை…, அதாவது maturity நிலையை அடைகிறார்கள்.

கிருஷ்ணர் : Very correct…. இந்த ‘நம்பிக்கை’, ‘திருப்தி’, ‘சந்தோஷம்’…, இதெல்லாம் ஒருவிதமான சுகமான அனுபவம்… இதை ஒருமுறை சுவைத்துப் பார்த்தால்.., மனிதர்களுக்கு…, ‘பதறுவது’, ‘அரைகுறை அறிவு’, ‘புலம்புவது’, ‘பிறரை இளக்காரமாக பேசுவது’ – என்பதெல்லாம் தன்னோட சிந்தையில் கொஞ்சமாவது இருந்தாலும் தூக்கி எறியத்தான் நினைப்பார்கள். ஏன்னா…, பதறுவதாலும், அரைகுறையாய் தெரிந்து கொண்டு புலம்புவதாலும், எந்தக் காரியமும் நமக்கு நல்ல தீர்வைத் தரப் போவதில்லை என்று அவர்களுக்கு, நிதானமாய் யோசிக்கும் போது தெரிந்து விடும்….

மேகலா : உண்மைதான் கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 57

கதை கதையாம், காரணமாம் - பகுதி 3

கதை கதையாம், காரணமாம் - பகுதி 6