பக்குவம் - பாகம் 1
மேகலா : கிருஷ்ணா…, தினந்தோறும் ஏதும் எழுதாமல் சும்மா இருப்பது…, குற்ற உணர்ச்சியில் குறுகிப் போகிறேன். ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி எழுதலாமா…. இன்று, மாண்புமிகு நரேந்திர மோடி பேசிய, ‘ரோட்டி காவ்…, இல்லையேல் என் துப்பாக்கியின் கோலி உன்னைத் தேடி வரும்’ – என்று பாகிஸ்தானை எச்சரித்ததை நினைத்து கொந்தளிக்கவா…, என்று திணறித் திணறி மூச்சு முட்டுது கிருஷ்ணா…. கிருஷ்ணர் : மூச்சு முட்டெல்லாம் வேண்டாம்… ஏதாவது எழுதணும் என்றால், நல்ல தலைப்பாக யோசி… இன்னும் முடிவுறாத ஆபரேஷன் சிந்தூரை வேறு ஒரு நாள் யோசிக்கலாம்… நிறையப் பேசி, பேசி நானே கொதித்துப் போனேன்… ஏதாவது குளிர்ச்சியாகப் பேசலாம்… மேகலா : அக்னி நட்சத்திரத்தில், சூரியன் கூட தகிக்காமல், கொஞ்ச நாளாக குளிர்ச்சியாயிருக்கிறான். அது போல, நாட்டு மக்கள் எல்லோருக்கும் ஒரு இதம் தேவையாக இருக்கு போல…. நீயும் அதைத்தான் சொல்லுகிறாய்… கிருஷ்ணர் : சரி…, தலைப்பைச் சொல்லு… மேகலா : எதை எழுதுவது என்று எனக்கும் புரியவில்லை கிருஷ்ணா…. கிருஷ்ணர் : இன்று முழுவதும், ‘பக்குவம்’, ‘பக்குவமடைதல்’…, ‘மேன்மை’ – இதைப் பற்றி யோசி… அப்புறம் பேசலாம்… ...