கதை கதையாம், காரணமாம் - பகுதி 7

(அத்திவரதரைப் பார்க்க ஏதாவது ஏற்பாடு செய்யுமாறு நான் கிருஷ்ணரிடம் கேட்டதற்கு, என்னை ‘வடபத்ரசயனரை’ப் பார்க்குமாறு சொல்லியிருந்தார் அல்லவா? அதற்கு நான் ’ஏன்?” என்று கேட்டிருந்தேன். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பதிலுடன் இந்தப் பகுதி தொடங்குகிறது)

கிருஷ்ணர் : அட போம்மா.... ஏதோ...., 10,000 பேர் வந்து பார்த்தார்கள்; 20,000 பேர் வந்தார்கள் என்றால் கூட, நானும், ‘மேகலாவைப் பார்க்க வைப்போமே’ என்று யோசிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர், week-end என்றால், 2 லட்சம் பேர் தரிசிக்க வருகிறார்கள். அதிலும், ஒவ்வொரு நாளும் ஏராளமான VIP-க்கள் வேறு. அத்தோடு நில்லாமல், கையில் ‘letter'-ஐக் கொடுத்து, recommendation-ஓடு அனுப்பி வைத்து, வரதரைக் கொஞ்சம் கூட rest எடுக்க விடாமல்....., இதில் உன்னை எப்படி அனுப்புவது என்றுதான் யோசிக்கிறேன். ஒரு நபருக்கு 1,000 ரூபாய்க்கு ticket என்றாலாவது, நீயும் ticket வாங்கிச் சென்று பார்த்து விடலாம். அவனவன், ரூபாய் 25,000-த்திலிருந்து, லட்சங்களைக் கையில் வைத்துக் கொண்டு, ‘வரதரையே விலைக்கு வாங்கி விடலாம்’ என்று முண்டியடித்துக் கொண்டிருக்கிறான். இத்தனையையும் செய்பவன் யார் என்று பார்த்தால், ‘பகுத்தறியும் அரசியல்வாதிகள்’. நீ, நம் வடபத்ரசயனரைப் பார், மேகலா. அத்திவரதராக அவர் உனக்குக் காட்சி தருவார்.

ஆழ்வார்களின் பாசுரங்களை நீ படித்திருக்கிறாயா, மேகலா?
‘அமருகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே;
அமருகந்தது எப்பேர், மற்று அப்பேர்’
நீ, நம்பிக்கையுடன் எந்த உருவத்தில் அத்திவரதரை நினைத்தாலும், அத்திவரதர் அங்கு வருவார். ராமானுஜர் கதை ஒன்று சொல்லட்டுமா....? ராமானுஜர் வாழ்ந்த காலத்தில், அவருக்கு, ஸ்ரீ ரங்கம் கோயிலில், சாமி பூஜை முடித்து, முதல் பிரசாதத்தை, ‘ஜீயார்’ என்றழைக்க, ராமானுஜர் அந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்வார். அவருக்கு அப்படி ஒரு பெருமை உண்டு. அப்படி ஒரு நாள், கோயிலுக்கு அவர் வரும் வழியில், சிறுவர்கள் கோயில் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். ராமானுஜர் அந்த விளையாட்டில் ஈர்க்கப்பட்டு, அதை வேடிக்கை பார்த்தார். அச்சிறுவர்கள், மணலைப் பிடித்து, ‘இதுதான் பெருமாள்’ என்று சொல்லி, மணலாலேயே பிரசாதத்தைக் காட்டி, ‘ஜீயார்’ என்று கூப்பிட, பார்த்துக் கொண்டிருந்த ராமானுஜர், ஓடிச் சென்று, பெருமாளை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, தன் வஸ்திரத்தைக் காட்டி, ‘மணல்’ பிரசாதத்தை வாங்கிக் கொண்டார். கூட இருந்தவர்கள், ‘என்ன சுவாமி, அவர்கள் பிரசாதம் என்று மணலைக் கொடுக்கிறார்கள்: நீரும் வாங்கிக் கொண்டீரே?” என்றதும், ராமானுஜர், ‘அந்தக் குழந்தைகள் நம்பிக்கையுடன், மணலைப் பிடித்து, ‘இதுதான் பெருமாள்’ என்றவுடனேயே, எம்பெருமான் ஓடி வந்து மணலில் இறங்கி அருள் புரிவார். பிரசாதம் மணலாக இருந்தாலும், அது ‘பெருமாள் பிரசாதம்’ என்றார். ராமானுஜர் கண்ணுக்கு, மணலில் பிடித்த பெருமாளே, ரங்கநாதராகத் தெரியும் போது, உனக்கு வடபத்ரசயனர், அத்திவரதராகத் தெரிய மாட்டாரா...... எல்லாம் தெரிவார். ஏயப்பா..... என்னா கூட்டம்..... என்னா நெரிசல்.....!

மேகலா : கிருஷ்ணா! இந்தக் கதை பேராசிரியர் வேங்கட கிருஷ்ணன் சொன்ன கதை..... நேற்றுதான் பாண்டே interview-வில் சொன்னார்.

கிருஷ்ணர் : இது கதையல்ல, மேகலா! ராமானுஜர் வாழ்வில் நடந்த சம்பவம்.

மேகலா : கிருஷ்ணா..... ‘முயல் ஆமை’ கதையை விட இது super-ஆ இருக்கே! இது மாதிரி உண்மைக் கதைகளைச் சொன்னால் நல்லாயிருக்குமோ....!

கிருஷ்ணர் : எனக்கு, ‘முயல் ஆமை’ கதையை முதலில் சொல்லு. அதில் எனக்கு ஒரு கருத்து இருக்கிறது.

மேகலா : ஒரு காட்டில், ஒரு முயலும், ஒரு ஆமையும் ரொம்ப close friends. அதிலும், இந்த முயல் இருக்கிறதே, அதுக்கு, ‘தான் வேகமாக ஓடக்கூடியவன்; ஆமை ஒரு slow walker; எங்கும் ஆமையால் சீக்கிரம் செல்ல முடியாது’ என்று நக்கலாக நினைக்கும். அப்பப்போ, ஆமையைச் சீண்டிக் கொண்டே இருக்கும். ‘நாமிருவரும் ஓட்டப்பந்தயம் வைத்துக் கொள்வோமா; யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்’ என்று கேட்டுச் சிரிக்கும். அன்றும் அப்படித்தான்; முயல் அப்படிக் கேட்ட போது, ஆமை திடீரென்று, ‘ஓட்டப்பந்தயம் வைத்துக் கொள்வோம். வேகமாக ஓடுவது உன் இயல்பு; மெதுவாக நடப்பது என் இயல்பு. ஆனால், வெற்றி என்பது நம் கையில் இல்லை’ என்று யதார்த்தமாய்ச் சொல்லியது. முயலோ, விழுந்து விழுந்து சிரித்தது. ‘வெற்றி உன் கையில் என்று சொல்’ என்று கூறி விட்டு, ‘சரி, பந்தயத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம்’ என்றவுடன், ஆமை, ‘இப்போதே தயார்’ என்று சொல்லியது.

முயலும் போட்டிக்குத் தயாராகியது. ஓடுதளத்தை உறுதிப்படுத்திக் கொண்டு, இருவரும் போட்டிக்குத் தயாரானார்கள். முயல் சொல்லியது, ‘யார் முதலில் வெற்றி எல்லையைத் தொடுகிறார்களோ, அவர்களே ஜெயித்தவர்கள்’ என்று சொல்லி விட்டு, வேகமாக ஓட ஆரம்பித்தது. ஆமை தன் இயல்புப்படி மெதுவாக நடந்தது. வேகமாக ஓடிய முயலுக்கு, சிறிது தூரம் ஓடியதும், சற்றே மூச்சிரைத்தது. ஓடுவதை நிறுத்தி விட்டு, பின்னால் திரும்பிப் பார்த்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை, ஆமையைக் காணவில்லை. ஆமை தன் உடம்பைத் தூக்கிக் கொண்டு நடப்பதற்கே 2 நாட்கள் ஆகும். இப்போதைக்கு ஆமை இங்கு வராது. நாம் கொஞ்சம் ஓய்வெடுப்பதால் ஒன்றும் நேரம் ஓடிப்போவதில்லை. கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு ஓடினால் இன்னும் வேகமாக ஓடலாம் என்று நினைத்துக் கொண்டு, அங்கிருந்த பாறையில் ஏறி, ஓய்வாகப் படுத்துக் கொண்டது. ஆமையோ, எந்த நினைப்பும் இல்லாமல், யார் ஜெயித்தாலும் பரவாயில்லை என்ற நினைப்புடன், மெதுவாக நடந்தது. அப்பொழுது, படுத்துக் கொண்டிருந்த முயல், அசதியில் நன்றாகத் தூங்கி விட்டது. அந்த இடத்தைக் கடந்த ஆமை, தூங்கிக் கொண்டிருந்த முயலைப் பார்க்கக் கூட இல்லை. கர்ம சிரத்தையாக நடந்து சென்று, வெற்றி எல்லையைத் தொட்டது.
தூங்கிக் கொண்டிருந்த முயலும், முழிச்சிப் பார்த்து, சுற்று முற்றும் பார்த்தது. ‘ரொம்ப நேரம் தூங்கி விட்டோமோ’ என்று பதறிப் போய், மறுபடியும் ஓட ஆரம்பித்தது. எல்லையை வந்தடைந்தது. அங்கு ஏற்கனவே வந்து சேர்ந்திருந்த ஆமையைப் பார்த்த முயலுக்கு, மயக்கமே வந்து விட்டது. காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம் கை தட்டி ஆரவாரம் செய்து, ஆமைக்கு பரிசளித்து மகிழ்ந்தனர்.

முயலுக்கு அவமானம் தாங்க முடியவில்லை. எத்தனை முறை யோசித்தாலும் தன்னுடைய தவறை ஒப்புக் கொள்ள முடியவில்லை. மறுபடியும் ஆமைதான், முயலிடம் சமாதானம் பேசியது. ‘இப்ப என்ன கெட்டுப் போச்சு. நீ வேகமாய் ஓடுவாய் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நான் மெதுவாய்த்தான் நடப்பேன். யாரிடம் என்ன சிறப்பான குணம் இருக்கிறது என்பதை எடை போடத் தெரிய வேண்டும். ஒரு காரியத்தை எடுத்தால், அதில் கொஞ்சம் கூட சோம்பேறித்தனத்தையோ, அடுத்தவன் அவ்வளவுதானே, நாம் ஜெயிக்கலாம் என்ற எண்ணத்தையோ வர விடக் கூடாது. சிறிது நேர சோம்பேறித்தனம் கூட, அடுத்தவரை ஜெயிக்க வைத்து விடலாம். இன்று மட்டும் நீ தூங்காமல் இருந்திருந்தால், நீதான் ஜெயித்திருப்பாய். நான் slow-வாக நடப்பவன் தானே. தோற்றிருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன். இதற்குப் போய் ஏன் கவலைப்படுகிறாய்?” என்று மிகவும் நட்புடன் கேட்டது. முயலுக்கு அழுகையாக வந்தது.

அப்போது, ஆமைக்கு ஒரு யோசனை தோன்றியது, கிருஷ்ணா! அது என்னவாக இருக்கும் என்று யோசித்து வை கிருஷ்ணா..... அடுத்த பகுதியில் கூறுகிறேன்.....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2