ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 60

மேகலா : பீஷ்மர், யுத்த களத்தில் தனது முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்தார். தேவர்களும், ரிஷிகளும் வானத்தில் கூடி விட்டனர். அங்கு நறுமணம் பொருந்திய காற்று வீசியது. தேவ வாத்தியங்கள் முழங்கின. பீஷ்மர் மீது பூமாரி பொழிந்தது. தேவர்களின் ஆசி பெற்ற பீஷ்மர் மீது சிகண்டி பல அம்புகளைப் பாய்ச்சினான். அச்சமயம், அர்ஜுனனும் பல பாணங்களை பீஷ்மர் மீது எய்தான். தன் மீது பாய்ந்த அம்புகளை அர்ஜுனனுடையதுதான் என்று துச்சாசனனிடம் காட்டி, ‘என் கவசங்களைப் பிளக்கும் அம்புகளை அர்ஜுனனால் மட்டுமே பாய்ச்ச முடியும்’ என்று சிரித்துக் கொண்டே கூறினார். என்றாலும், பாண்டவர்கள், சிகண்டியை முன்னிறுத்தி, பீஷ்மர் ஒருவரையே எதிர்த்துப் போரிட்டாலும், பீஷ்மர் அசையாமல் மலை போல் நின்றார். அர்ஜுனன் பாணங்களால் பீஷ்மரைத் துன்புறுத்தினான்.

உடலிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓட, பீஷ்மர், ரதத்திலிருந்து கிழக்கு முகம் பார்த்த நிலையில், கீழே சாய்ந்தார். பீஷ்மர் கீழே விழுந்த போதே, அவருடன் கூடவே, துரியோதனாதிகளின் மனதிலிருந்த தைரியமும் கீழே விழுந்தது. வானத்திலிருந்து யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தேவர் கூட்டம், ‘ஆ’வென்று ஆச்சரியம் மிகுந்த ஒலியை எழுப்பினர்.

சூரியனின் ஒளி மங்கியது
வானம் இருள் அடைந்தது
மேகம் மழையைப் பொழிந்தது
பூமி நடுங்கியது

புருஷர்களில் உத்தமரான பீஷ்மரைத் தெய்வத் தன்மை வந்தடைந்தது.
பீஷ்மர் வீழ்ந்தவுடன், பாண்டவ சைன்யம் வெற்றி முழக்கம் செய்தது. துரியோதனன் படை கலக்கமுற்றது. ‘பீஷ்மர் சாய்ந்தார்’ என்ற அதிர்ச்சித் தகவலைக் கேட்ட துரோணர் மூர்ச்சை அடைந்தார். தெளிந்து எழுந்ததும், போரை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டார். துரியோதனனும், கிருபரும் கதறி அழுதார்கள். பீமன், தோள் தட்டி, உரத்த குரல் எழுப்பி, தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினான். பீஷ்மர் உயிர் விடுவதற்குரிய ‘உத்தராயண காலம்’ வருவதை நோக்கி, அங்கே அம்புப்படுக்கையில் படுத்திருந்தார்.
இரு பக்கமும் போர் நிறுத்தப்பட்டு, அனைவரும் பீஷ்மரைத் தேடி வந்தார்கள். அவர் உடல் முழுதும் துளைத்த அம்புகளின் மீதே சாய்ந்திருந்தார். அவர் தலையில் அம்புகள் துளைக்காமல், தலை மட்டும் கீழே தொங்கிக் கொண்டிருந்தது. தலைக்கு ஒரு தலையணையைக் கொடுக்குமாறு, அங்கிருந்தவர்களைக் கேட்டார். துரியோதனன், அவருக்காக மிருதுவான தலையணையை எடுத்து வரச் சொன்னான். பீஷ்மர் அதைத் தடுத்து விட்டு, அர்ஜுனனைப் பார்த்து, வீரனுக்குத் தகுந்த தலையணையைக் கேட்டார். அர்ஜுனன் மூன்று அம்புகளை எய்து, பீஷ்மரின் தலைக்குத் தலையணையாகச் செலுத்தினான்.

துரியோதனன் வரவழைத்த வைத்தியர்களைத் திருப்பி அனுப்பி விட்டு, ‘அம்புப் படுக்கையில் என்னுடைய மரணத்தை எதிர்பார்த்துப் படுத்திருக்கும் எனக்கு, வைத்தியம் தேவையில்லை. அர்ஜுனா, சாஸ்திரத்தில் கூறப்பட்ட முறைப்படி என் தாகத்திற்குத் தண்ணீர் வரவழைப்பாயாக’ என்று கேட்டார்.

உடனே, அர்ஜுனன், பீஷ்மரை வலம் வந்து வணங்கி, தன் காண்டீபத்தை வளைத்து, நாணேற்றி, தண்ணீர் உண்டாவதற்குரிய மந்திரத்தைச் சொல்லி, அதை ஏவினான். அப்போது பூமி அங்கே பிளந்தது. நீர்ப்பெருக்கு ஒன்று அந்த இடத்தில் தோன்றியது. அந்த நீரின் மூலம், பீஷ்மரின் தாகம் தணிக்கப்பட்டது.

அடுத்த நாள் பீஷ்மரைக் காண நகர மக்கள் அனைவரும் வந்து அவரைச் சுற்றி அமர்ந்து, அவரை வணங்கினார்கள்.

மேகலா : கிருஷ்ணா! குருக்ஷேத்திரத்தில், யுத்த காட்சிகளில் திரும்பத் திரும்ப, ‘நெருப்பு போலத் தோன்றினார், நாசம் விளைவித்தார்’ என்றே விவரித்துக் கொண்டிருந்த நிலையில், பீஷ்மர் வீழ்ந்ததும், அன்று அங்கு பொங்கிய உணர்ச்சி வேகம், இன்னும் அப்படியே கொப்பளிக்குது. எத்தனை மரியாதைக்குரியவர், போற்றுதற்குரியவர், ஏதோ நம்மிடையே வாழ்கிறவர் போல, நமக்கும் உணர்ச்சிமயமாகிறது.

கிருஷ்ணர் : இன்னும் கர்ணனிடம் பேசுவதைக் கேள், மேகலா! நெகிழ்ச்சியில் கண்ணீரே வந்து விடும். சரி, பீஷ்மரும், கர்ணனும் என்ன பேசுகிறார்கள், பார்க்கலாம்.....

பீஷ்மரை வணங்கிய கர்ணன்

பீஷ்மர், துரியோதனனைப் பார்த்து, ‘மன்னனே, கோபத்தை விட்டு விடுவாயாக. இந்தப் பூவுலகில், மற்றவர்கள் அறியாத அஸ்திரத்தை அர்ஜுனன் அறிவான். கிருஷ்ணரின் சகாயத்தைப் பெற்ற அர்ஜுனனை வெல்வது என்பது இயலாத காரியம். நீ பாண்டவர்களோடு நட்பைச் செய்து கொள்வாயாக. யுத்தத்தில் ஏற்கனவே பலர் மாண்டு விட்டார்கள். ஆனால், இன்னமும் உன்னுடைய பல சகோதரர்களும், மற்றும் அநேக அரசர்களும் உயிருடன் இருக்கிறார்கள். இந்த நிலையிலேயே சமாதானம் உண்டாகி விடட்டும். நான் வீழ்ந்ததோடு இந்த யுத்தம் முடியட்டும். என்னுடைய வீழ்ச்சி, சமாதானத்தின் வளர்ச்சியாக அமையட்டும்’ என்று கேட்டுக் கொண்டார். ஆனால், துரியோதனன் அவருடைய வார்த்தைகளை ஏற்கவில்லை. பீஷ்மர் மௌனமானார். சுற்றி இருந்தவர்கள் கலைய ஆரம்பித்தார்கள்.

எல்லோரும் விலகிச் சென்ற பிறகு, கர்ணன் அங்கு வந்தான். அவன் பீஷ்மரை நமஸ்கரித்து, ‘நான் கர்ணன்; தேரோட்டியின் மகன்; ராதையின் பிள்ளை; எந்தத் தவறும் செய்யாத போதும், உங்களால் வெறுக்கப்பட்டவன்’ என்று கூறி நின்றான்.

பீஷ்மர், கண் திறந்து பார்த்து, சுற்றி நின்றவர்களை விலகிப் போகும்படிச் சொல்லி விட்டு, கர்ணனை அருகில் அழைத்து, ஒரு தந்தை மகனை ஆரத் தழுவிக் கொள்வது போல அணைத்துக் கொண்டார். ‘கர்ணா, நீ குந்தியின் மகன்; தேரோட்டியின் மகன் அல்ல; சூரியன் உன்னைக் குந்தியின் மூலம் பெற்றெடுத்தான். உன் மீது எனக்கு எந்தவித விரோதமும் கிடையாது. துரியோதனனுடன் சேர்ந்து கொண்டு, பாண்டவர்கள் மீது வெறுப்பையும், யுத்தத்தில் விருப்பத்தையும் வளர்த்துக் கொண்டாய். யுத்தத்தில் உனக்கு இருக்கும் ஆர்வத்தைக் கெடுப்பதற்காகவே, உன்னைக் கொடூரமாகப் பேசியிருக்கிறேன். நீ பாண்டவர்களோடு பகை பூண்டிருப்பது, காரணமற்ற செயல். பகைவர்களால் தாங்க முடியாத வீரம், உன் வீரம். தானம் செய்வதில் உன்னைப் போன்று ஒருவன் பிறக்கவில்லை. பாணங்களை எடுப்பதிலும், விடுப்பதிலும், கிருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்கும் சமமானவன் நீ என்பதை நான் அறிவேன். நீ ஒருவனே, துரியோதனனுக்காகச் சாதித்துள்ள வெற்றிகள் அநேகம். எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நீ நினைத்தால், பாண்டவர்களோடு இணைந்து விடு. அப்படி நீ செய்தால், யுத்தமே நின்று விடும்.

பீஷ்மர் கூறியதைக் கேட்ட கர்ணன், ‘நான் குந்தியின் மகன் என்பது எனக்குத் தெரியும். குந்தியால் தூக்கி எறியப்பட்டாலும், தேரோட்டியினால் ஒரு குறையும் தெரியாது வளர்க்கப்பட்டேன். துரியோதனனை விட்டு விலகச் சொல்கிறீர்கள். அவன் செல்வத்தை அனுபவித்து விட்டு, நன்றி கொன்றவனாகச் செயல்பட விரும்பவில்லை. அர்ஜுனனுக்கு உதவி செய்வதற்காக கிருஷ்ணர் எவ்வளவு உறுதியாக இருக்கிறாரோ, அதை விட உறுதியாக துரியோதனனுக்கு உதவி செய்ய நான் நிற்பேன். என் செல்வம், திறமை, புகழ், என் உடல் அனைத்தும் துரியோதனனுக்காக விடத் தக்கவையே. பாண்டவர்களும், கிருஷ்ணரும் சாதாரண மனிதர்களால் வெல்லத்தக்கவர்கள் அல்ல என்பதை நானும் அறிவேன். என்றாலும், அவர்களுடன் யுத்தம் புரிவதை விரும்புகிறேன். யுத்தத்தில் பாண்டவர்கள் ஜெயிப்பதுதான் தர்மம் என்று அறிகிறேன். இருப்பினும், பாண்டவர்கள் மீது கொண்டுள்ள பகையை விட முடியாது. அர்ஜுனனோடு, உங்கள் அனுமதி பெற்றுத்தான் யுத்தம் புரிய வேண்டுமென்று விரும்புகிறேன். என்னுடைய முன்கோபத்தால், பல தகாத சொற்களை உம்மைப் பார்த்துப் பேசியிருக்கிறேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்’.

இவ்வாறு கூறி, பீஷ்மரின் அனுமதி கேட்டு நின்ற கர்ணனைப் பார்த்து, பீஷ்மர் சொன்னார், ‘கர்ணா! பாண்டவர்கள் மீது நீ கொண்ட பகையை விட முடியாது என்றால், உனக்கு யுத்தம் செய்ய நான் அனுமதி தருகிறேன். சமாதானத்திற்காக நான் செய்த முயற்சிகள் எல்லாம் வீணாகி விட்டன. க்ஷத்திரியனுக்கு, யுத்தம் செய்வதை விட மேலான தர்மம் எதுவும் கிடையாது. எந்தத் தரப்பில் தர்மம் இருக்கிறதோ, அந்தத் தரப்பு வெல்லட்டும்.’

இவ்வாறு பீஷ்மரிடம் ஆசியும், அனுமதியும் பெற்ற கர்ணன், மீண்டும் அவரை நமஸ்கரித்து விட்டு, துரியோதனன் இருப்பிடத்திற்குச் சென்றான்.

அடுத்து நடந்த நிகழ்வுகளை அடுத்த பகுதியில் பார்ப்போம்.....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2