ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 66

மேகலா : ’அர்ஜுனனால் தாண்ட முடியாத வியூகத்தை வகுத்து, உன்னை நான் காப்பாற்றுகிறேன்’ என்று துரோணர் கூறியதைக் கேட்ட பிறகு ஜயத்ரதனுக்கு அச்சம் நீங்கியது என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம்.

துரோணர் கூறியது, ஒற்றர்களின் மூலமாக, பாண்டவர்களை எட்டியது. இதைக் கேள்விப்பட்ட கிருஷ்ணர் கவலையுற்று, அர்ஜுனனிடம், ‘யாரையும் கலந்தாலோசிக்காமல், ஜயத்ரதனை நாளைய தினத்திற்குள் கொல்வதாக நீ சபதம் செய்து விட்டாய். நீ அவசரப்பட்டு விட்டாயோ என்று நினைக்கிறேன். சபதம் நிறைவேறாமல் போனால், உலகம் உன்னைப் பரிகசிக்கும். அதைத் தவிர்க்க வேண்டும். ஜயத்ரதன் யுத்தகளத்தை விட்டு விலகலாமா என்று யோசிக்கிறான். துரோணர், அவனைக் காப்பாற்றுவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். அஸ்வத்தாமா, கர்ணன் முதலிய ஆறு வீரர்கள் ஜயத்ரதனைக் காப்பதில் ஈடுபடப் போகிறார்கள். உன்னால் தாண்ட முடியாத வியூகத்தை துரோணர் வகுக்கப் போகிறார். அவர்களை மீறி, ஜயத்ரதனைக் கொல்வது எப்படி?’

கிருஷ்ணர் கூறியதைக் கேட்ட அர்ஜுனன், ‘நாளை காலை, காண்டீபத்தை ஏந்தி யுத்தம் செய்யப் போகிறேன். எனக்குத் தேரோட்டியாக நீங்கள் இருக்கும் பொழுது, நம்மை எதிர்க்கக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்? உம்முடைய ஆசியுடன் யாரையும் வெல்லக் கூடிய வல்லமை பெற்றிருக்கும் என்னை, எதற்காகக் குறைவாக மதிப்பிட்டுப் பேசுகிறீர்கள்? சாட்சாத் நாராயணனாகிய உங்களிடம் வெற்றி உறுதி பெற்று நிற்கிறது. அப்படியிருக்க, நமக்கு என்ன கவலை? சபதத்தை நிறைவேற்றுவேன். ஜயத்ரதனை நாளை கொல்வேன்’ என்று கூறினான்.
அதன் பிறகு, கிருஷ்ணர், தாருகன் என்ற தனது தேரோட்டியிடம், அர்ஜுனனின் சபதம் நிறைவேறுமா என்ற தன் தயக்கத்தை வெளிப்படுத்துகிறார்.

‘தன் மகன் கொல்லப்பட்ட துன்பத்தினால், அர்ஜுனன் பயங்கரமான சபதத்தைச் செய்து விட்டான். நாளை மாலைக்குள் ஜயத்ரதன் கொல்லப்பட வேண்டும். நான் இதில் குறுக்கிட்டால் தான், அர்ஜுனனின் சபதம் நிறைவேறும். சபதம் நிறைவேறா விட்டால், உலகம் அவனைப் பரிகசிக்கும். அர்ஜுனனை விட எனக்கு வேறொரு நண்பனில்லை....

(தேவ தேவா, கதையில் இவ்விடத்தில் நிறுத்தி, மேகலாவாகிய நான் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். அர்ஜுனன், உமக்கு நண்பன் தான். உன்னைத் தவிர, இவ்வுலகில் வேறொன்றும் அறியாத மேகலாவாகிய நானும் இருக்கிறேன். பரம்பொருளே! என்னை உன் தோழியாக ஏற்றுக் கொள்ளா விட்டாலும் பரவாயில்லை; மேகலாவாகிய நான் உன்னை என் பிரியத்துக்குரிய நண்பனாக ஏற்றுக் கொள்ள தடை ஏதும் சொல்ல மாட்டாய் என்று நம்புகிறேன். எனக்கு பொறாமை உணர்ச்சி வர வேண்டாம் என்று தடுத்தும், என்னை மீறிய அர்ஜுனன் மீதான பொறாமையை, இறைவா! கருணை கூர்ந்து, புன்சிரிப்புடன் துடைத்து விடுவாயாக.....).

நாளைய தினம் அர்ஜுனனுக்காக இந்த யுத்தத்தில் என்னுடைய பராக்கிரமத்தை நானே காட்டப் போகிறேன். அதற்கான உபாயங்களை யோசிக்க வேண்டியதுதான்’.

எல்லோருமே அடுத்த தினம் என்ன நடக்கப் போகிறது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அர்ஜுனனும் தூக்கம் வராமல் யோசித்துக் கொண்டிருந்தான். சபதத்தை எப்படி நிறைவேற்றுவது என்று நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான்.

அப்பொழுது அவன் கனவில் கிருஷ்ணர் தோன்றி, ‘அர்ஜுனா, உன் மனதைத் துக்கத்திற்குப் பறிகொடுத்து விடாதே. ஒருவனுடைய மனம் சோகத்தினால் மூடப்பட்டால், மகிழ்ச்சி அடைவது, அவனுடைய பகைவர்கள் தாம். ஆகையால், சோகத்தை விட்டு, செய்ய வேண்டிய காரியத்தைப் பற்றி யோசனை செய்’ என்று அர்ஜுனனுக்குச் சொன்னார்.

அப்பொழுது அர்ஜுனன், ‘கிருஷ்ணா! மிகப் பெரிய வீரர்களால் சூழப்பட்டு நிற்கப் போகும் ஜயத்ரதனை என்னால் பார்க்க முடியுமா? அவனை நான் கொல்வது எப்படி?’ என்று கேட்டான்.

அதற்கு கிருஷ்ணர், ‘நீ சிவனை மனதார பூஜித்தால், நாளை ஜயத்ரதனை நிச்சயம் வெல்வாய்’ என்று கூற, அவ்வாறே அர்ஜுனனும், சிவனை மனதாரப் பூஜிக்க, அவனுடைய சபதம் நிறைவேறும் என்ற வரத்தைப் பரமசிவன் அவனுக்கு அளித்தார். சிவனிடமிருந்து வரத்தைப் பெற்ற அர்ஜுனன், பெரும் மகிழ்ச்சி கொண்டான். இவை அனைத்தும் நடந்தது கனவில் தான் என்றாலும், அது அர்ஜுனனுக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது.

இரவு கழிந்தது. பொழுது புலர்ந்தது. தருமன், கிருஷ்ணரை அணுகி, ‘அர்ஜுனன் சபதம் நிறைவேற என்ன செய்ய வேண்டுமோ, அதை நீங்கள் செய்து தர வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார்.

கிருஷ்ணர், ‘மிகப் பெரிய வீரனான அர்ஜுனன், தன் சபதத்தை நிறைவேற்றப் போகிறான். துரியோதனனுடைய படைகளை அவன் பொசுக்கப் போகிறான். ஜயத்ரதனை வெட்டி வீழ்த்தப் போகிறான். வெற்றியுடன் திரும்பி வருவான்’ என்றார்.

பதினான்காவது நாள் யுத்தம் தொடங்கியது. அன்றைய யுத்தத்தில், தருமரைப் பாதுகாக்கும் பொறுப்பு, சாத்யகியிடம், அர்ஜுனனால் விடப்பட்டது. ’ஜயத்ரதன் எங்கு இருக்கிறானோ, அந்த இடத்திற்கு நான் போகிறேன். எனக்குப் பாதுகாப்பாக கிருஷ்ணர் இருக்கிறார். நான் வெற்றியடைய, தருமரைக் காப்பாற்று. அதுவே உன் பொறுப்பு’ எனக் கூறிவிட்டு, ஜயத்ரதன் இருக்கும் இடம் நோக்கித் தன் தேரைச் செலுத்துமாறு, கிருஷ்ணரைக் கேட்டுக் கொண்டான்.

கிருஷ்ணர் : என்ன மேகலா! கதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கதையை நிறுத்தி என்னிடம் என்ன சொன்னாய்? நீ என் friend தான். அதில் உனக்கென்ன சந்தேகம்? 2 பிள்ளைகள் இருக்கும் பொழுது, அம்மாவிடம் ஒரு குழந்தை கேட்டதாம், ‘அம்மா, உனக்கு அண்ணா பிடிக்குமா; நான் பிடிக்குமா?’ என்று. அம்மா சொன்னாளாம், ‘ஏண்டா செல்லம், உன்னைத்தான் அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்று. அண்ணா இதே கேள்வியைக் கேட்கும் போதும், அவனிடமும், ‘நீதான் என் செல்லம்’ என்றாளாம். உன்னை ஏமாற்றுவதற்காக நான் சொல்லவில்லை. எனக்கு நீங்கள் எல்லோரும் பிள்ளைகள் தான். அர்ஜுனன் என் நண்பன் என்றதும், பொறாமை வந்து விட்டதா, உனக்கு? மேலே சொன்ன அர்ஜுனன் சபதத்தில் உன் விமர்சனம் எதுவும் கிடையாதா....?

மேகலா : விமர்சனம் இருக்கிறது, கிருஷ்ணா..... முதலில் நீ எனக்கு தாயுமானவன், யாதுமானவன் என்று சொன்னது எப்படி இருக்கிறது தெரியுமா? ஒரு chocolate stall-க்குள் நுழைந்து, திரும்பிய பக்கமெல்லாம் chocolate, ice-cream என்று cone-லும், cup-லும், bar-ஆகவும், குச்சியில் சொருகியும் என்று திகட்டாமல், அள்ளி, அள்ளிச் சாப்பிட்டது போல இருக்கிறது, கிருஷ்ணா! சரி..., அர்ஜுனன், மிகச் சிறந்த வீரன்...., யாராலும் வெல்ல முடியாத தனித் திறமை கொண்டவன்; அவனுக்கு ஏன், ‘நாம் செய்த சபதத்தை நிறைவேற்றுவோமா’ என்ற யோசனை வருகிறது?

கிருஷ்ணர் : ஜயத்ரதனைப் பாதுகாக்கப் போகிறவர்கள் துரோணர், கர்ணன், அஸ்வத்தாமா, சல்லியன், பூரிசிரவஸ், துச்சாசனன் என்ற மிகப் பெரிய ஜாம்பவான்கள். அனைவரையும், தனித்தனியே வென்றுதான், ஜயத்ரதனைப் பார்க்கவே முடியும். ஜயத்ரதன் வேறு சிறந்த வீரனும் கூட. அதனால், சற்று யோசிக்கிறான்.

மேகலா : அதுதான் நீ இருக்கிறாயே, கிருஷ்ணா! ஜெயிப்பதற்கு வேறு என்ன தடை வர முடியும்....?

கிருஷ்ணர் : சரி! அடுத்து என்னவென்று பார்க்கலாம்....

(அடுத்த பகுதி ‘துரோணர் பூட்டிய கவசத்துடன்’ ஆரம்பமாகும்)


Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2