மேல் துண்டு படும் பாடு - பகுதி 2

மேகலா : கிருஷ்ணர் கூறியவாறு, மேல் துண்டு 'all-purpose costume' ஆக பயன்படுகிறது. எங்க அப்பா கூட, தோளில் துண்டு போடுவார். ஆனால், அது office செல்லும் போது கிடையாது. கதர் வேஷ்டி, கதரில் full-hand shirt, அதன் மேலே மடித்து வைத்த அங்கவஸ்திரம் (முகம் துடைத்துக் கொள்ள)! அதே மாதிரி, எங்க மாமனார் costume கூட இப்படித்தான், கிருஷ்ணா! ஒரு வேஷ்டி, மேலே கை வைத்த ‘பனியன்’, அதற்கு மேலே உதறிப் போட்ட மேல் துண்டு. இதுதான் நித்திய costume. என்றாவது ஒரு நாள், சட்டை போட்டு, மேலே துண்டு!

கிருஷ்ணா! அந்தக் காலத்தில், எங்க வீட்டுக்கு, காலையில் பத்து மணியளவில் ஒரு பாட்டி கத்தரிக்காய் வியாபாரம் செய்ய வரும். இப்ப மாதிரி எல்லாக் காய்கறியும் சுமந்து கொண்டு, தள்ளுவண்டியோ, சைக்கிள்காரனோ வருவதில்லை. கத்தரிக்காயோ, பாகற்காயோ, விளைந்த இடத்திலிருந்தே, பறித்து, அங்கிருந்து தலைச் சுமையாய் சுமந்து வந்து தான் வியாபாரம் செய்வார்கள். எங்க அம்மாவும், அந்தப் பாட்டியின் குரலைக் கேட்டவுடன், கதவைத் திறந்து வாங்குவதற்கு வருவார்களா; பாட்டியும், எங்க அம்மா முகத்தைப் பார்த்ததுமே, ‘பாப்பா, கத்தரிக்காய் வாங்கப் போகுது’ என்று புரிந்து கொண்டு, உடனே, ‘தாயி, ஒரு கை புடி தாயி’ என்று சொல்லி, கூடையை இறக்கி வைக்கும். தலையில் சுருட்டி வைத்திருக்கும் ‘சும்மாடு’ நழுவி விழுமல்லவா, அதைப் பிடித்து, முகத்தில் வழியும் வியர்வையைத் துடைத்து விட்டு, ‘யப்பா, என்ன வெயிலு....!” என்று அலுத்துக் கொண்டு, ‘தாயி, கொஞ்சம் தண்ணி குடும்மா’ என்று சொல்லித் தாகத்தைத் தணித்துக் கொள்ளும். அந்த மேல் துண்டு, சுருட்டிய style-ல், சுருண்டபடிக்கே இருக்கும், கிருஷ்ணா! அந்தப் பாட்டிக்கு, அந்தத் துண்டுதான், தலையை நோகாமல் காக்கும் ‘சும்மாடு’. அதுதான் வியர்வையைத் துடைக்கும் தாயின் கரமும் கூட.... இல்லையா, கிருஷ்ணா!

கிருஷ்ணர் : நீ ‘சும்மாடு’ கதையைச் சொல்லவும், என் நினைவு, எங்கெங்கோ போய் விட்டது.....

மேகலா : என்ன கிருஷ்ணா..... எங்கிட்ட சொல்ல மாட்டாயா....?

கிருஷ்ணர் : சொல்வதற்கென்ன.... எல்லாம் உனக்குத் தெரிந்தது தான். சிறையில், தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால், கம்சனுக்கு அழிவு நிச்சயம் என்ற அசரீரியைக் கேட்ட கம்சன், தேவகிக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கொன்று விடுகிறான். எட்டாவது குழந்தையாக, அடியேன் கிருஷ்ணன் பிறந்தவுடன், அந்தக் குழந்தையை, கோகுலத்தில் வசிக்கும் நந்தகோபன் வீட்டில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்காக, என் தந்தையான வாசுதேவன், ஒரு கூடையில் குழந்தையை வைத்து, தன் தலை மீது சுமந்து கொண்டு, ‘யமுனை’ ஆற்றைக் கடந்து சென்று, அந்தப்புறம் இருக்கும் கோகுலத்திற்கு எடுத்துச் செல்வார். அப்பொழுது அவருடைய தலையில் சுற்றி வைத்த அந்தப் பட்டுத்துண்டு; அதான், அந்தச் ‘சும்மாடு’; பிரம்புக் கூடைப் பின்னலின் இடைவெளி வழியாக, என்னை மெதுவாக வருடியது, மேகலா!

நீ, கத்தரிக்காய் வியாபாரம் செய்த பாட்டி, தலைச் சுமையை இறக்கி வைத்து, ‘சும்மாடு’ துண்டால், தன் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தாள் என்றாயா...., எனக்கும் அந்த ஞாபகம் வந்தது, மேகலா...! என் தந்தையாரும், என்னைச் சுமந்து வந்த கூடையை இறக்கி வைத்து, குழந்தையை ‘யசோதை’ அருகில் கிடத்தினார். என்னை ஆசையாய் ஒரு முறை, உச்சி மோந்து முத்தம் கொடுத்தார். தன் தலைச் சும்மாடை உதறித் தோளில் போட்டுப் போயே போய் விட்டார்.

மேகலா : இந்தச் ‘சும்மாடாகிய’ மேல் துண்டு, எத்தனை வியர்வையை முகர்ந்து பார்த்திருக்கிறது! எத்தனை பேருக்கு ஆறுதல் கரமாகவும், விசிறும் கரமாகவும் இருந்திருக்கிறது...., இல்லையா, கிருஷ்ணா!

கிருஷ்ணர் : எத்தனை பேருக்குக் கையைத் துடைத்து விட்டிருக்கிறது, மேகலா....

மேகலா : வியர்வையைத் துடைக்க; கண்ணீரைத் துடைக்க; சாப்பிட்ட பின் கையைத் துடைக்க மட்டுமல்ல கிருஷ்ணா! ‘இடம்’ பிடிக்கவும், மேல் துண்டு use ஆகும்.....

கிருஷ்ணர் : இடம் பிடிக்கவா....? என்ன சொல்லுற....?

மேகலா : ஆமாம் கிருஷ்ணா! Bus-ல, train-ல கூட்டம் நிறைய இருக்கும் போது, bus-க்குள்ளயோ, train-க்குள்ளயோ ஏறவே முடியாம கூட்டம் நெறியும் போது, ஜன்னல் வழியாகத் துண்டைத் தூக்கிப் போட்டு, இடம் பிடிப்பார்கள், கிருஷ்ணா.......!

கிருஷ்ணர் : பஸ்சுல பயணம் செய்ய வருபவரெல்லாம் கையில் துண்டு வைத்திருப்பார்களா, என்ன.....?

மேகலா : Passengers எல்லாம், இடம் பிடிக்க துண்டு போட மாட்டாங்க, கிருஷ்ணா! ஆனால், பண்டிகை காலங்களில், இப்படி இடம் பிடித்துக் கொடுக்கும் agents இருப்பாங்க, கிருஷ்ணா. அதிலும், train-ல் reservation ஆக ticket எடுக்காமல், on-the-spot, ticket எடுத்தால், உட்காரக் கூட seat கிடைக்காமல், passengers திணறுவார்கள். அந்த நேரத்தில், railway station-ல் பணி புரியும் porters, ticket வாங்கிக் கொடுத்து, உட்கார இடம் பிடித்துக் கொடுக்க, தன் தலைப்பாகையை, அதாவது சும்மாடை அவிழ்த்து, இடம் போட்டுக் கொடுப்பார்கள்.

கிருஷ்ணர் : Ticket-ல் seat number இருக்குமே....?!

மேகலா : Unreserved compartment-ல், seat number எல்லாம் கிடையாது கிருஷ்ணா! விழாக்காலங்களில், porter-ஐ நம்பித்தான் passengers, train-க்குள் ஏறுவார்கள் கிருஷ்ணா! உனக்குத் தெரியுமா...., இந்தத் துண்டு, தூரத்தில் வருபவர்களுக்கு அடையாளம் காட்டும் signal ஆக இருக்கும்....

கிருஷ்ணர் : அப்படியா...! Signal-னா, தனக்கு சாப்பாடு கொண்டு வரும் காதல் மனைவியைப் பார்த்து, வயல் வரப்பில் வேலை பார்க்கும் கணவன், துண்டை அசைத்துக் காட்டுவானா.....

மேகலா : நீ சொல்வது interesting ஆக இருக்கு..... ஆனாலும், உற்சாகமான சமயங்களில், தூரத்தில் வரும் தெரிந்தவர்களுக்கு, ‘நான் இங்கே இருக்கிறேன்’ என்று காட்ட வேண்டிய சமயங்களில், நம்மைத் தேடி வருபவர்களை, துண்டை அசைத்து signal கொடுப்பார்கள். அதிலும் முக்கியமாக, train வரும் பாதையில், ஏதாவது தடங்கல் வரும் போது, வண்டியை நிறுத்துவதற்கு signal காட்டுவதற்கு, இந்தத் துண்டு தான் பிரதான signal ஆகப் பயன்படுகிறது. இன்னொரு சுவாரஸ்யமான தகவல், கிருஷ்ணா! நம்ம ஊரு ஆண்டாள் கோயில் தேரோட்டத்தின் போது, தேர் எல்லையை விட்டுக் கிளம்பும் நேரம், தக்கார், துண்டை அசைத்துத்தான், ‘தேர் கிளம்பியாச்சு’ என்று signal கொடுப்பார்.

கிருஷ்ணர் : வாவ்! இன்னும் என்னென்ன தகவல்களைக் collect பண்ணி வச்சிருக்க....?

மேகலா : கிருஷ்ணா! கல்யாணம் பண்ணி வைக்கப் போகும் சம்பந்திகள், தங்களுடைய சம்பந்தத்தை உறுதிப்படுத்திக் கொள்ள, இந்தத் துண்டைத்தான் மாற்றிக் கொள்வார்கள்....., தெரியுமா?

கிருஷ்ணர் : எ...என்ன.... என்னது? துண்டு மாற்றிக் கொள்வதா....?

மேகலா : ஆமாம் கிருஷ்ணா! கல்யாணம் பேசி முடிக்கும் போது, ‘நிச்சயம்’ பண்ணுவார்கள், இல்லையா....? அது ஒரு சடங்காக நடத்தப்படும். இரு வீட்டாரும், ‘உப்பு’ மாற்றிக் கொள்வார்கள். பெண்ணோட தகப்பனார், தன் தோளில் கிடக்கும் துண்டை எடுத்து, பையனின் அப்பாவுக்கு, தலைப்பாகையாகக் கட்டி விடுவார். பையனின் அப்பா, பெண்ணின் அப்பா தலைக்கு, தன் துண்டை எடுத்துத் தலைப்பாகையாகக் கட்டி விடுவார்.
இரு வீட்டாரும், உப்புப்பெட்டி மட்டுமல்ல, கிருஷ்ணா; தட்டும் மாற்றிக் கொள்வார்கள். அந்தத் தட்டில், தேங்காய், பழம், வெற்றிலை வைத்திருப்பார்கள் இல்லையா? அந்தப் பழம் முதலானவற்றை, துண்டில் போட்டு முடிஞ்சி எடுத்துத்தான் வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள். எங்கள் பகுதியில், நிச்சயதார்த்தத்தின் போது இது முக்கியமான சடங்கு கிருஷ்ணா! துண்டு மாற்றியாச்சுன்னா, அந்த உறவு பலப்படுத்தப்பட்டது என்று அர்த்தம். அதன் பிறகு, உறவுகள் எல்லோரும் சந்தோஷமாகச் சாப்பிடச் செல்வார்கள், கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : Oh....! interesting..... துண்டு இதற்கெல்லாம் பயன்படுகிறதா.....?!

மேகலா : இன்னும் சுவாரஸ்யமான விஷயங்களோடு அடுத்த பகுதியில் சந்திப்போம், கிருஷ்ணா......

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2