ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 70

ஜயத்ரதனின் வதம், ஸ்ரீ கிருஷ்ணரின் தயவால் எப்படி நிகழ்ந்தது என்று சென்ற பகுதியில் பார்த்தோம்.

மேகலா : ஒரு வேலையை, சொன்னபடி முடிப்பதற்கு நமது திறமை மட்டும் பத்தாது; தெய்வத்தின் அருளும் இருக்க வேண்டும் என்று strong-ஆக சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியே மெய் சிலிர்க்குது, கிருஷ்ணா.....!
‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்ற இப்போதைய பழமொழி, என் கிருஷ்ணன் சொல்லும் போது, எத்தனை உற்சாகமாக இருக்கிறது, கிருஷ்ணா! எல்லாமே technical movement தான். அர்ஜுனன், நீ சொன்னபடியெல்லாம் கேட்கிறான்; எதிர்த்துப் பேசுவதேயில்லை. Technical யோசனையும் கூட ரொம்ப இல்லை. இல்லையா, கிருஷ்ணா...?

கிருஷ்ணர் : முனைப்பாக யுத்தம் செய்யும் வேளையில், யுத்தத்தின் விதிதான் ஞாபகம் இருக்கும். ஒரு easy-யான சந்தர்ப்பத்தை உருவாக்குவது, gap பார்த்து அடிப்பது, இது எல்லாம், பார்ப்பவருக்குத்தான் சட்டுனு தோணும். Match விளையாடுபவரைக் காட்டிலும், அதைப் பார்ப்பவருக்குத்தானே, ‘இப்படிச் செய்யலாம்’, ‘அப்படிச் செய்யலாம்’ என்று தோன்றும். அர்ஜுனனோட திறமை, என்னைச் சாரதியாக்கி அருகில் வைத்துக் கொண்டது. எப்படியாவது துரியோதனன் தோற்க வேண்டும் என்று நீதான் சொன்னாயே; அதுதான் நடக்கிறது.
சரி, துரியோதனன் புலம்புவதைக் கேட்போமா.....

துரியோதனனின் உள்ளக் குமுறல்

மேகலா : திருதராஷ்டிரன், ‘ஜயத்ரதன் கொல்லப்பட்ட பிறகு, நம்மைச் சார்ந்தவர்கள் என்ன செய்தார்கள் என்பதைச் சொல், சஞ்சயா’ என்று சஞ்சயனிடம் கேட்டுக் கொள்ள, சஞ்சயன் தனது யுத்த வர்ணனையை மேலும் தொடர்ந்தான்.

ஜயத்ரதன் கொல்லப்பட்டதைக் கண்ட கிருபாச்சாரியாருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. அதனால், அர்ஜுனன் மீது கடுமையான போர் தொடுத்தார். ஆனால், அர்ஜுனனின் அஸ்திரங்களால் பலமாகத் தாக்கப்பட்டு, தேரின் நடுவிலேயே அமர்ந்து விட்டார். அதைக் கண்ட அர்ஜுனன், ஆச்சாரியாரைத் தாக்க நேர்ந்ததை நினைத்து மிகவும் வருத்தப்பட்டான். அவனைக் கிருஷ்ணர் உற்சாகப்படுத்தினார்.

‘அர்ஜுனா! துரியோதனனின் இந்தப் படையை எதிர்த்துப் போரிடக் கூடியவன், உன்னைத் தவிர வேறு யாருமே கிடையாது. மிகப் பெரிய வீரர்களால் பதுகாக்கப்பட்ட ஜயத்ரதனை, அந்தப் படைகளை எல்லாம் கடந்து நீ வீழ்த்தியிருக்கிறாய். இப்பொழுது யுத்த களத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளுக்காக வருந்துவதில் அர்த்தமில்லை’.

இவ்வாறு கிருஷ்ணர் கூறிய போது, அர்ஜுனன், ’ஜயத்ரதனைக் கொல்வதாக நான் செய்த சபதம் நிறைவேறியது என்றால், அது உம்முடைய கருணையினால் தான் என்பது தெளிவாகிறது. நீர் யாருக்கு ஆதரவாக இருக்கிறீர்களோ, அவர்கள் பக்கம் வெற்றி என்பதில் சந்தேகமில்லை’ என்று கூறினான்.

தருமபுத்திரனும், ஜயத்ரதனை வீழ்த்தியதற்காக, அர்ஜுனனையும், கிருஷ்ணரையும் பாராட்டினார். ‘கிருஷ்ணா! உம்முடைய அருளைப் பெற்றவர்களுக்குத் தோல்வி என்பது ஏது? உம்முடைய அருளால்தான், அர்ஜுனன் தன் சபதத்தை நிறைவேற்றினான். உம்மைச் சரணம் எய்தியவர்களுக்குத் துன்பம் என்பது கிடையாது’ என்று கூறி, கிருஷ்ணரின் மகிமைகளை எடுத்துரைத்தார்.

கிருஷ்ணரோ, ‘தர்மனை யார் கோபமடையச் செய்கிறார்களோ, அவர்கள் அழிவைத்தான் எய்துவார்கள்’ என்று பாராட்டினார். சாத்யகி, அர்ஜுனன், பீமன் போன்ற எல்லோரையும் தர்மன் பாராட்ட, பாண்டவர் தரப்பு பெரும் மகிழ்ச்சியில் மூழ்கியது.

கௌரவர் தரப்பில் சோகம் குடி கொண்டது. துரியோதனனும், தன்னுடைய கர்வம் ஒழிக்கப்பட்டவனாகவும், உற்சாகமிழந்தவனாகவும் மாறி விட்டான். அஸ்வத்தாமா, கர்ணன், துரோணர் போன்ற வீரர்களைக் கடந்து சென்ற அர்ஜுனனின் வீரத்தை எதிர்க்க இந்தப் படைக்குத் திறன் கிடையாது என்று மனம் புழுங்கினான்.

துரோணரிடம், ‘யாராலும் வெல்ல முடியாத திறன் படைத்த ஜயத்ரதனை, அர்ஜுனன் கொன்று விட்டான். எனக்காகப் பலர் உயிர் இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் மிகவும் கடமைப்பட்டவனாகி விட்டேன். நூற்றுக்கணக்கான அஸ்வமேத யாகங்களை நான் செய்தாலும் கூட, இந்தப் பாவத்திலிருந்து என்னால் விடுபட முடியும் என்று தோன்றவில்லை. இப்படிப்பட்ட பாவியாகிய என்னை இந்தப் பூமி ஏன் இன்னும் விழுங்கவில்லை.

‘சிகண்டியினால் வீழ்த்தப்பட்ட பீஷ்மரையும் என்னால் காப்பாற்ற முடியவில்லை. பல நண்பர்கள் என் பொருட்டுக் கொல்லப்பட்டார்கள். இதையெல்லாம் கண்டும், நான் ஏன் வாழ வேண்டும்?’ என்று துரியோதனன் புலம்பினான். பிறகு, ஒரு முடிவுக்கு வந்தவனாக, ‘யாகங்கள் மீது ஆணை! புண்ணிய தீர்த்தங்கள் மீது ஆணை! நான் பெற்ற மக்கள் மீது ஆணை! பாஞ்சாலர்களையும், பாண்டவர்களையும் யுத்தத்தில் கொல்வேன். அப்படி என்னால் செய்ய முடியவில்லை என்றால், என் நண்பர்கள் சென்ற உலகத்திற்கே செல்வேன்’ என்று உறுதியாக சபதமிட்டான்.

துரியோதனனின் புலம்பலைக் கேட்ட துரோணர், ‘பீஷ்மர் வீழ்ந்த போதே நமது சேனை அழிந்தது என்று நான் தெரிந்து கொண்டேன். அன்று சூதாட்டத்தில் சகுனி உருட்டிய காய்களே இன்று அம்புகளாக நம்மை வந்து தாக்குகின்றன. பிராமணன் என்று சொல்லிக் கொள்ளும் நான், சூது ஆடுவதைத் தடுத்திருக்க வேண்டும். அந்தப் பாவ காரியத்தை நிறுத்தாமல், தர்மத்திற்கே துரோகம் இழைத்து விட்டேன்.

ஜயத்ரதனை, மிகப் பெரிய வீரர்களால் காப்பாற்ற முனைந்தோம். அப்படியும் அவன் கொல்லப்பட்டான். இது தெய்வத்தினாலன்று வேறு எவ்வாறாவது நடந்திருக்க முடியுமா? இந்த நிலையில் முனைப்பாக செயல்படுவதைத் தவிர, நமக்கு வேறு வழியில்லை’

துரோணர் இப்படிக் கூறிய பிறகு, துரியோதனன், கர்ணனை நெருங்கிப் பேசினான். ‘கர்ணா! அர்ஜுனன் நமது படைகளைக் கடந்து, ஜயத்ரதனை அடைந்ததற்கு, துரோணர் தன்னுடைய வியூகத்தைக் கடந்து செல்லுமாறு அர்ஜுனனுக்கு வழி விட்டாரோ என்று நான் சந்தேகிக்கிறேன்’.
இவ்வாறு துரோணரைப் பற்றிக் குற்றம் கூறிய துரியோதனனைப் பார்த்து, கர்ணன், ‘துரியோதனா! துரோணரைப் பழித்துப் பேசுவது நியாயமல்ல. நாம் எல்லோரும் தான் ஜயத்ரதனுக்குப் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தோம். அப்படியானால், நாமும் பழிக்கத் தக்கவர்களா? தெய்வம் தான் நம் எல்லோருடைய வல்லமையையும் பயனற்றதாகச் செய்து கொண்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஆரம்பத்திலிருந்தே பாண்டவர்கள் நம்மால் வஞ்சிக்கப்பட்டார்கள்; காட்டிற்கும் துரத்தப்பட்டார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களை எதிர்த்து மனித முயற்சியால் செய்யப்பட்ட காரியங்கள் அனைத்தையும் தெய்வ பலத்தினால் அவர்கள் கடந்து வந்திருக்கிறார்கள். அதே தெய்வ பலத்தினால் தான் இந்த யுத்த களத்திலும், நம்மை மிஞ்சி நிற்கிறார்கள். நம்முடைய வீரம் வெல்லப்பட்டதற்குக் காரணம் பாண்டவர்களல்ல; தெய்வமே என்றுதான் நான் நினைக்கிறேன்’.

இவ்வாறு துரோணரிடமும், கர்ணனிடமும் பேசிய பிறகு, துரியோதனன், பாண்டவ சைன்யத்திற்குள் பிரவேசித்து மிகவும் உக்கிரமான போர் புரிந்தான். பீமன், விராடன், துருபதன், திருஷ்டத்யும்னன், சிகண்டி போன்ற பல வீரர்களையும் எதிர்த்துப் போரிட்டான். அவனுடன் துரோணரும் சேர்ந்து கொண்டு, பாண்டவ சேனைகளை எதிர்த்தார். அந்த நேரத்தில் இருள் கவ்வத் தொடங்கியது. அந்த இரவு நேரத்திலும் யுத்தம் தொடர்ந்தது.

நாமும் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு, மேலும் நடந்த நிகழ்ச்சிகளை அடுத்த பகுதியில் பார்ப்போம்.....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2