வயசானாலும், சின்னச் சின்ன ஆசைகள், நம்மைச் சிறகடிக்க வைக்கும் - பகுதி 2

மேகலா : கிருஷ்ணா! பிள்ளையார்பட்டி தரிசனம் பற்றிய விவரத்தோடு இந்தப் பகுதியை ஆரம்பிக்கிறேன், சரியா.... பிள்ளையார்பட்டி தரிசனத்தை வார்த்தைகளால் சொல்லணுமா கிருஷ்ணா...? பிள்ளையாரின் அழகைச் சொல்வதற்கு வார்த்தைகள் தான் இருக்கிறதா...., எனக்குத் தெரியவில்லை! கிருஷ்ணா! என்னைப் பொறுத்த வரையில்..., பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயில்..... எந்நாளும், எந்த நேரமும், சதுர்த்தி தினக் கொண்டாட்டம் தான்! எப்பொழுது சென்றாலும், கருவறை சமீபத்தில் நின்று தரிசனம் பெற முடிகின்ற ஒரே கோயில்.

விளக்குகளின் ஒளி கூட, கம்பீரமாய் ஜொலிக்கும் அழகு. பிள்ளையாருக்கு தீபாராதனை காட்டப்படும் போது, பிள்ளையாரின் மெருகேறிய தரிசனம், நம்மை புல்லரிக்க வைத்து விடும். நெருக்கமில்லாத கூட்டம்; விரட்டாத பூசாரிகள்; உபசரிக்கும் அமைதி..... எத்தனை நேரமானாலும் உற்று உற்றுப் பார்த்து, தீபத் தட்டை கண்ணில் ஒற்றிக் கொள் என்று சொல்லும் பிள்ளையாரின் மௌன பாஷை.....; அடேயப்பா..... நின்றேன்; நிதானமாய்ப் பிள்ளையாரைப் பார்த்தேன். தீப விளக்குகள் அவரின் கருணையை எடுத்துக் காட்டிய விதத்தில், மெய் மறந்தேன். சற்றே நடந்து வந்தேன். கையை நீட்டி விபூதி பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டேன். ஒரு கண நேரம் இமைத்தால், கண்களில் காட்சி மறையுமோ என்று நினைத்து இமைக்கவே மறந்தேன், கிருஷ்ணா..... என்னைப் போல் என்னைத் தொடர்பவரும் தரிசனம் பெற வேண்டுமல்லவா....., நகரத்தானே வேண்டும்....

யாரும் அவசரப்படுத்தாமலேயே நகர்ந்து, மறுபடியும் படியேறி, அங்கே தடுப்பு வளையத்தின் அருகில் நின்று, மறுபடியும், விளக்குகளின் வெளிச்சத்தில், கோடி சூர்யப்பிரகாசமாய் மின்னும் பிள்ளையாரைக் கண்டேன்; என்னையறியாமல் என் கைகள், என் காதுகளைத் தொட்டன. மந்திரம் செபிக்கவில்லை; பிள்ளையாரப்பா என்று முணுமுணுக்கவில்லை. என் மௌனத்தின் மூச்சுக்களையே பிள்ளையாரிடம் தூது விட்டேன். கால்கள் உக்கி போட்டன. என் பிள்ளைகள் ஆயுள், ஆரோக்யமாய் இருக்கச் சொல்லி வேண்டிக் கொண்டேன், கிருஷ்ணா....!

கிருஷ்ணர் : மேகலா! நீ பேசும் போது, உன் முகத்தையே நான் பார்க்கிறேன். அப்படியே மறுபடியும் பிள்ளையார்பட்டிக்குச் சென்று வந்த மாதிரி உன் முகம் திருப்தியாவதைப் பார்க்கிறேன். சந்தோஷம்; அப்புறமாவது வெளியில் வந்தாயா....?

மேகலா : கிருஷ்ணா! இந்த முறை, பிள்ளையார்பட்டி கோயிலிலேயே ஒரு 1/2 மணி நேரம் உட்கார்ந்திருக்கணும் என்று நினைத்திருந்தேன்.

கிருஷ்ணர் : ஏன், அதிலென்ன உனக்குத் தடை? உட்காரலயா....? கடைத்தெருவுக்குப் போய், கடைகளை மேய்ந்தாயா?

மேகலா : கடைக்கெல்லாம் போகல, கிருஷ்ணா! வழக்கம் போல calendar வாங்கினேன். காரில் ஏறி உட்கார்ந்தேன். மதுரை நோக்கி வந்து விட்டேன், கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : வந்ததும், நேரே ‘ஆரத்தி ஹோட்டல்’ போனாய். அங்கு அளிக்கப்பட்ட அன்பான உபசரிப்பில், வயிறு நிறைய, மனம் நிறைய, சந்தோஷமாய் சாப்பிட்டாய். 3 மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்தாயா...?

மேகலா : இப்படித்தான் என்னுடைய anniversary celebration சந்தோஷமாய் முடிந்தது, கிருஷ்ணா! உனக்குத் தெரியுமா...? INX Media வழக்குல, முன் ஜாமீன் மறுக்கப்பட்டு, விசாரணைக் கைதியாக, சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்......

கிருஷ்ணர் : என்ன.... அவர் கேட்ட ஜா....மீன் கிடைச்சிருச்சா....?

மேகலா : என்னவோ....., ஜாமீன் கிடைச்சது, விடுதலையே கிடைச்ச மாதிரி, parliament-க்கு வந்து, ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்பது மாதிரி ‘லுக்’கெல்லாம் குடுத்து, பொருளாதாரம் செத்து வீழ்ந்ததன் காரணமே நிர்வாகச் சீரழிவால் மட்டுமே என்று நக்கல் பேசி......., எனக்கெல்லாம் கடுப்பாகுது, கிருஷ்ணா..... இதுல, சுதந்திரப் போராட்டத்துல கைதியாக அடைக்கப்பட்ட ‘செக்கிழுத்த செம்மல்’ வ. உ. சிதம்பரனாரும் சிறைக்குச் சென்றாராம்; இந்த பானா. சிதம்பரமும் சிறைக்குச் சென்றாராம்; இந்த comparison வேறு.....

கிருஷ்ணர் : அடப்பாவி..... அமலாக்கத் துறையினரை உசுப்பி விடலாமே, மேகலா.... இன்னும் கொஞ்ச நாள், விசாரணைக் கைதியாக உள்ளே தள்ளிரலாம்.....

மேகலா : நீ நினைச்சா நடக்கும்....., ஆனா, அதுக்குள்ள வீட்டில் முடக்கிப் போட்டு, passport-ஐப் பிடுங்கி வைத்து, விசாரிக்கப் போகிறார்களாம், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : ‘சத்யமேவ ஜயதே’.... நீ சந்தோஷமாய் இரு மேகலா... என்ன...., கார்த்திகை மஹாதீபத்திற்கு வேலை பார்க்கிறாய் போல....

மேகலா : ஆமாம், கிருஷ்ணா! இறைவன் சோதி ரூபனாய் வெளிப்படுத்திய இந்த தினம்; கார்த்திகை மாதத்து வியர்வையில்லாத இதமான பருவம்; பக்தியுணர்வும் சுகமான நிறைவைத் தரும். பளிச்சென்ற சூழ்நிலை; கதம்ப சாம்பார் வாசனை; விரதம் காப்பவர்க்கு சாப்பிடுவதற்கு எளிமையான வேர்க்கடலை, பொரிகடலை உருண்டை, வரிசையான தீப விளக்கால் சோதிமயமாகும் குளிர்ச்சியான வீடு; இதமான ஒளியில் அழகாய்த் தெரியும் இரவு நேரத்து முற்றமும், சுத்தமாய் குளித்து மிளிரும் சாலையின் அழகும்; வருடத்திற்கு ஒரு நாள் மஹா தீபத்தன்று பேரின்ப வாசனையை நான் உணர்கிறேன், கிருஷ்ணா......

கிருஷ்ணர் : ‘சொக்கப்பனை’ கொளுத்தியது போல இருக்கிறது, உன் பேச்சு. இப்படியே, ‘கச்சா முச்சான்னு’ பேசிக்கிட்டிருக்கோமே....., ஏதாவது ஒரு topic சொல்லேன், மேகலா...... உருப்படியாப் பேசுவோம்.....

மேகலா : கிருஷ்ணா! எங்க channel ஆரம்பிச்சு 7 வருஷம் ஓடிப் போச்சு, கிருஷ்ணா...... Dec 13th அன்றுதான், எங்கள் channel பிறந்த நாள்,....

கிருஷ்ணர் : Oh! வாவ்! Congratulations மேகலா! எத்தனை videos கொடுத்திருக்கீங்க....?

மேகலா : 752 videos கிருஷ்ணா! இந்த 7 வருஷத்துல, புதுசா முளைத்த express channel.... பிரமிப்பாய் இருக்கு, கிருஷ்ணா....

கிருஷ்ணர் : நல்லது நடந்திருக்கு மேகலா.... ஒவ்வொரு மனிதனும், இந்த உலகில் வாழும் போது, பிறருக்கு உபயோகமாய் இருக்கணும்; காந்தி, நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது போல; அப்துல் கலாம், ஏவு கலங்களையும், ஏவு கணைகளையும் தயாரித்து நம்மைப் பெருமைப்படுத்தியது போல; நீயும் எத்தனை பேர் ‘கிச்சனை’ மணக்க வைத்திருக்கிறாய்.....! பெரிய வேலை, மேகலா!

மேகலா : என்ன கிருஷ்ணா...! யாரோடு யாரை compare பண்ணிப் பேசுற; நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட மகா ஆத்மா..... அந்த காந்தி எங்க..... ஐயோ, கிருஷ்ணா.....! அவரையெல்லாம் என்னோட compare பண்ணலாமா..... அடுத்து, அப்துல் கலாமோட, என்னையவா......, அவரெல்லாம் நூற்றாண்டுக்கு ஒரு முறை முளைக்கும் விடிவெள்ளி மாதிரி..... நானெல்லாம்...., பெருக்கெடுத்து ஓடும் நதியின் வெள்ளத்தில் கொப்பளித்து வரும் நீர்க்குமிழி மாதிரி.... பேச்சுக்குக் கூட என்னைப் பேசும் போது, மகான்களை உதாரணம் காட்டிப் பேசாதே, கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : இப்ப, நான் என்ன சொல்லிட்டேன்னு, இந்தக் குதி குதிக்கிற..... இப்ப என்ன உன்ன congratulate பண்ணணும்..... அதுவும் உன் சாதனையைப் பாராட்டிச் சொல்லணும்....., அதானே..... சுத்திப் போட்டுக்கோ, மேகலா..... நல்ல சாதனை; மனசாரச் சொல்றேன்..... என் friend நீ...., எனக்குப் பெருமையா இருக்கு......

மேகலா : Thanks, கிருஷ்ணா!

கிருஷ்ணர் : சரி.....இ..... இப்படியேதான் பேசிக்கிட்டே இருக்கப் போறோமா....? ஒரு புது title ஒண்ணும் கிடையாதா....?

மேகலா : பேசுவோம், கிருஷ்ணா....! அடுத்த பகுதியில் அதைப் பற்றிப் பேசுவோமே......, சரியா......

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2