வயசானாலும், சின்னச் சின்ன ஆசைகள், நம்மைச் சிறகடிக்க வைக்கும் - பகுதி 3

மேகலா : இப்படியே ‘வெட்டி அரட்டையா’ பேசிக்கிட்டிருக்கோமே, வேறு ‘topic' ஒன்றும் கிடையாதா என்று கேட்டியே கிருஷ்ணா; புதுசா ஏதாவது ஒரு title நீதான் சொல்லேன், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : நீதான் ஏதாவது ‘துண்டு’, ‘பாலம்’ அப்படீன்னு தலைப்புச் சொல்லுவாய்.... எனக்கு இப்படீலாம் தலைப்பு கிடைக்க மாட்டேங்குதே...

மேகலா : ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி நடிக்காத, கிருஷ்ணா.... எனக்குள்ள இருந்துக்கிட்டு, என்னயவே எழுத வைக்கிறவன், நீ.... உனக்கு ‘தலைப்பு’ கிடைக்க மாட்டேங்குதா.... please...... கிருஷ்ணா...... ஒரு நல்ல தலைப்பு குடு, கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : நீதான் பெரீய்ய.... கவிஞராச்சே...... ரசனையான உன் சின்னச் சின்ன ஆசைகள் என்னென்ன என்று சொல்லேன், கேட்கிறேன்....., ரசனையாகச் சொல்லணும்மா.....

மேகலா : என்னைக் கிண்டல் பண்றியா, கிருஷ்ணா. நான் ஒண்ணும் பெரிய கவிஞரெல்லாம் கிடையாது; ஏதோ, எனக்குப் பிடித்ததை ரசிப்பேன். நான் ரசிப்பதை, என் நெஞ்சு முழுக்க நிறைத்து, அதை அப்படியே, என் எழுத்துக்களில் கொண்டு வருவேன்.

கிருஷ்ணர் : அதான்.... அதான்.... அதைத்தான் சொல்லச் சொல்கிறேன்....

மேகலா : கிருஷ்ணா! சின்னச் சின்ன ஆசைகள் இல்லாத மனுஷ ஜென்மமே இருக்க முடியாது.... நான் மட்டும் அதில் குறைந்தவளா! இப்போ.... இதோ.... என்னை, சின்னச் சின்ன ஆசைகள் என்னென்ன என்று பட்டியலிடச் சொல்லி விட்டு, கள்ளச் சிரிப்பால் என்னை நோட்டமிடுகிறாய்.... நானும் யோசித்துப் பார்க்கிறேன்.

ஜன்னல் வழியாக, கண்களுக்கு இதமான வெளிச்சத்தை மட்டுமே தந்து கொண்டிருக்கும் வெய்யிலைப் பார்க்கிறேன். காற்றில் செடிகள் தலையசைக்கிறது. அப்பப்போ, வானம் பூத்தூரலாய்த் தூவுகிறது. அதில் நனையும் table rose, shower-ல் குளிக்கும் அழகிய இளம் பெண் போல் சிலிர்த்து சிரிக்கிறது. எத்தனை வேலை செய்தாலும், வியர்வையில் நனையாத என் முகம், இந்த இதமான climate-ஐ ஆழ்ந்து ரசிக்கிறது. நெசம்மா கிருஷ்ணா, வருஷம் முழுதும் சுட்டெரிக்கும் வெய்யிலும், வியர்வையில் குளிக்கும் முகமாகவே திரியும் எனக்கு, இந்தக் கார்த்திகை மாசமும், மார்கழி மாசமும் வசந்த காலங்கள். இந்தக் காலங்களில் பூக்கும் பூக்களும் பிடிக்கும். பச்சைப் பசேலென்று குளிர்ச்சியான செடிகளும் பிடிக்கும். மெது மெதுவாய் விடியும் விடியலும் பிடிக்கும். சீக்கிரமே குளிரும் சூரியனும் பிடிக்கும்.

சில நேரங்களில், பூமியில் கால் பதித்தே, ஆகாயத்தைத் தொட்டு விட மாட்டோமா என்று தவிக்கும். ஏண்ணா, அந்த ஆகாயத்தில் சில நேரங்களில், மேகம் கறுத்துக் கொண்டு நிற்கும். மழை வந்து விடுமோ என்று பயம் காட்டும்; ஆனால், மழை வராது. அந்த mood எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதை மீறி சில சமயம் மழை பெய்து விடும். கொஞ்சமாய் பெய்து ஓய்ந்து நிற்கும். மழை நின்றதா என்று எட்டிப் பார்ப்பேன். ஜன்னல் அருகே முள்ளுச் செடி, கோடி இலைகளை தாங்கிக் கொண்டு, சிலிர்த்து நிற்கும். அத்தனை கோடி இலைகளிலும், நீர்த் துளிகள், வைரக் கற்களாய் மினுங்கி நிற்கும். அது முள்ளுச் செடி தான்; அது கூட வைரமாய் மின்னும் அழகைப் பார்த்து பிரமிச்சுப் போவேன். என்னோட சின்னச் சின்ன ரசனை தான், என் ஆசைகளா.... அல்லது, இந்த வசந்த காலத்திலேயே குடியிருப்பது தான் என் ஆசைகளா.... தெரியவில்லை கிருஷ்ணா....! அதை நீதான் சொல்லணும்.....

கிருஷ்ணர் : இப்பத்தான ஆரம்பிச்சிருக்க....நீ சொல்லு; நான் பிறகு சொல்கிறேன்.... யப்பா.... உன் ஆசைகளைச் சொல்லு என்றுதான் கேட்டேன், மதகு திறந்து விட்ட வெள்ளமாய்க் கொட்டுகிறாய். நான் உன்னையவே பார்த்துக்கிட்டு இருக்கேன். கண்ணதாசனும் இதைத்தானே சொல்லியிருக்கிறார், ‘மாதங்களில் அவள் மார்கழி’ என்று.... மார்கழியைப் பிடிக்காதவங்க யார்தான் உண்டு....?

மேகலா : கிருஷ்ணா! ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று சொன்னது.... என் பேரன்புக்குரிய ஸ்ரீ கிருஷ்ணர், கிருஷ்ணா..... கண்ணதாசனுக்கு அந்த வார்த்தை பிடித்ததோ...., இல்லை, நீ சொன்னது மாதிரி, ‘யாருக்குத்தான் மார்கழியைப் பிடிக்காது’ என்று சொன்ன காரணத்தினாலோ, அவரும், ‘மாதங்களில் அவள் மார்கழி’ என்று சொல்லியிருக்கிறார்.

கிருஷ்ணர் : சரி..... நீ ரொம்ப alert-ஆ தான் இருக்கற... சரி..., மார்கழி மாசம் தான் உனக்கும் பிடிக்குமா? இதில் வேறு ஏதாச்சும் இருக்கா....?

மேகலா : இந்த மார்கழி மாசத்தில், காலையில் எழுந்திருக்கவே பிடிக்காமல், blanket-ஐ கால் முழுவதும் சுற்றி..., ‘கதகதப்பை’ நிதானமாக அனுபவித்து, அந்த blanket-ஐ நல்லா இழுத்து விட்டு, உடலைச் சுருக்கி, blanket-க்குள் முழுவதுமாகச் சுருங்கி, படுத்துத் தூங்கும் போது, தூக்கமும் இல்லாமல், விழிப்பும் இல்லாமல், ‘அந்த நேரத்தில்’ இதமான கதகதப்பை மட்டுமே enjoy பண்ணுவது என்பது, உலகத்திலேயே இந்த மாதிரியான சுகம் வேறொன்று இருக்குமா....?’ எனக்குத் தெரியல, கிருஷ்ணா....

கிருஷ்ணர் : அப்ப.... இந்த அருமையான மார்கழி மாசக் குளிரில், ‘திருப்பாவை’ படிக்காமல், முட்டாங்கு போட்டு, மூடித் தூங்குவது தான் உனக்கு ரொம்பப் பிடிக்குமா.... அடிப்பாவி.... உன்னய, என்னமோன்னு நெனச்சேனே.... நீ இவ்வளவு சோம்பேறியா....?

மேகலா : ஏன் கிருஷ்ணா.... இப்படிப் புலம்பற.... தூங்க எனக்குப் பிடிக்கும்ணுதான் சொன்னேன். ஆனா, correct-ஆ, time-க்கு எந்திரிச்சி, எல்லா வேலையும் பண்ண ஆரம்பிச்சுடுவேன்....

கிருஷ்ணர் : சரி, okay...., இந்த மாசக் குளுருல, ice-cream சாப்பிடப் பிடிக்கும்; cool drinks குடிக்கப் பிடிக்கும் என்று சொல்லப் போறயா....

மேகலா : கிருஷ்ணா, இது குளிர் காலம் கிருஷ்ணா.... சுடச் சுட ரசம் ரசிச்சு ரசிச்சு சாப்பிட ரொம்பப் பிடிக்கும். காலையில் எழுந்ததும், சுடச் சுட ‘டிகாக்க்ஷன்’ இறக்கி, மணக்க மணக்க coffee குடிப்பதும்.... அத்தனை சுகம், கிருஷ்ணா....

கிருஷ்ணர் : So, உன்னுடைய சின்னச் சின்ன ஆசைகள், தூங்குவதிலும், சாப்பிடுவதிலுமே தான் சுற்றிச் சுற்றி வருகிறது, இல்லையா....

மேகலா : நீ சின்னச் சின்ன ஆசைகளைத்தானே கேட்கிறாய், கிருஷ்ணா.... இதோ, இன்று 1 மாதம் கழித்து, லக்ஷ்மி நரசிம்மரையும், வடபத்ர சயனரையும் பார்க்கச் சென்றேன். வழி நெடுகிலும், ‘கடவுளே, இன்னைக்கு நல்லா சாமி கும்பிடணும்’ என்று கேட்டுக் கொண்டே சென்றேன். திடீரென்று, என் உள் மனது, ’இப்படிக் கடவுள் கிட்ட கேட்டு வைக்கவில்லையென்றால், நல்லா சாமி கும்பிட மாட்டாயா’ என்று கேட்டு, என்னைப் பீதியில் ஆழ்த்தி விட்டது. ‘ஐயய்யோ, அப்படீல்லாம் ஒண்ணும் கிடையாது. சாமியப் பார்த்த உடனே, நான் என்னயவே மறந்து போயிருவேன். அதுதான் உண்மை.... சரி, ‘கடவுளே, இன்னைக்கு எனக்கு சாமி தரிசனம் நல்லா கிடைக்கணும்; அதுக்கு நீதான் எனக்கு அருள் புரியணும்’ என்று கேட்டுக் கொண்டேன்.

உள்ளே சென்றேனா...., இது மார்கழி மாசம் என்பதே எனக்கு மறந்து போனது..... என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள, அடுத்த பகுதி வரும் வரை காத்திருப்பாயா, கிருஷ்ணா..... please....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2