ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 79

மேகலா : கர்ணனுக்குத் தேரோட்ட சல்யன், சில நிபந்தனைகளோடு சம்மதித்தான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். இது சம்பந்தமாக ஸ்ரீ கிருஷ்ணருக்கும் எனக்கும் இடையே நடந்த சம்பாஷனையோடு இப்பகுதியைத் துவக்குகிறேன்.

மேகலா : மீனு வலயில மாட்டிக்கிச்சு டோய்.... கிருஷ்ணா! அடுத்த batsman கர்ணன்.... clean bowled....

கிருஷ்ணர் : இதுக்குத்தான முதலிலேயே கேட்டு வச்சிக்கிட்டோம். சல்யன் தேரோட்ட மறுக்கும் போது, எனக்கெல்லாம் ‘பக்கு’ ‘பக்கு’னு இருந்தது,  ‘ஐயய்யோ, இவன் வேற காரியத்தைக் கெடுத்துருவான் போலயே’ என்று. கொஞ்சம் ‘பிகு’ பண்ணினாலும், தருமனிடம் வாக்குறுதி தந்தது ஞாபகத்திற்கு வந்துரிச்சி, நமக்கும் காரியம் சுலபமாப் போச்சி. இன்னும் பார், சல்யன், கர்ணனை நல்லா வெறுப்பேத்துவான். ஒரு project பண்ணும் போதோ அல்லது கூட்டு முயற்சியிலோ, அங்குள்ளவர்களிடையே chemistry நன்றாக ஒத்துப் போகணும். அப்படி ஒத்துப் போகாத காரியம், எத்தனை திறமையாளர்கள் வேலை பார்த்தாலும், எரிச்சலும், விதண்டாவாதமும், காரியத்தை முடிக்க விடாமல், சிதறச் செய்யும். அதற்கு இந்தச் சம்பவம் மிகச் சிறந்த உதாரணம்.

சரி...., நீ கதையை மேலே சொல்லு.....

வாட்போருக்கிடையே ஒரு வாய்ச்சண்டை

மேகலா : ’கர்ணனுக்கு நான் தேரோட்டினாலும், அவனைப் பற்றி எனக்குத் தோன்றுவதை நான் பேசுவேன்’ என்ற நிபந்தனையோடுதான் சல்யன், கர்ணனுக்குத் தேரோட்டச் சம்மதித்தான். இந்த சல்ய மன்னன், ‘மாத்ர தேசத்து’ மன்னன். பாண்டுவின் மனைவியான ‘மாத்ரி’யின் சகோதரன். நகுலன், சகாதேவனுக்குத் தாய் மாமன். பாண்டவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு வரும் வழியில், போரில் தேர் செலுத்துவதில் வல்லவனான சல்யனை, துரியோதனன், நன்கு உபசரித்து, அவனை மகிழ்வுறச் செய்து, அவனைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டான். அடுத்து, சல்யன், தருமனைச் சந்திக்கும் பொழுது, இந்தச் சம்பவத்தை எடுத்துச் சொல்லவும், தருமன், ‘அப்படி துரியோதனனுக்காக நீங்கள் போர் செய்யும் போது, கர்ணனுக்குத் தேரோட்டும் வாய்ப்புக் கிடைக்கும் போது, அவனது தன்னம்பிக்கை குறையுமாறு பேச வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டான். அந்தச் சம்பவத்தை நினைத்துத்தான் சல்யன், துரியோதனனிடம், அந்த நிபந்தனையைக் கூறினான்.

அதற்கேற்றவாறு, ‘பாண்டவர்கள் அழிவின் பொருட்டும், துரியோதனனுடைய வெற்றியின் பொருட்டும், நான் செய்யும் யுத்தத்தை இப்போது உலகம் பார்க்கட்டும்’ என்று கர்ணன் பேசிய வீர மொழிகளைக் கேட்டு, சல்யன் ஏளனமாகச் சிரித்தான். ‘கர்ணா! அஸ்திரங்களின் தன்மைகளை முழுமையாகப் புரிந்து கொண்டவர்களும், யுத்தத்தில் புறம் காட்டாதவர்களும், யாராலும் வெல்ல முடியாதவர்களாகிய பாண்டவர்களை நீ எவ்வாறு அலட்சியமாகப் பேசலாம்?’ என்று சல்யன் கர்ணனைப் பார்த்துக் கூறினான்.

கர்ணன், சல்யனை அலட்சியப்படுத்தினான். ‘யுத்தத்தில் எனது திறமையை நீ நேரில் காணத்தான் போகிறாய்’ என்று மட்டும் சல்யனுக்குப் பதில் சொல்லி விட்டு, கர்ணன் யுத்தத்தைத் தொடங்குவதில் முனைந்தான்.
கர்ணன் புறப்பட்டவுடனேயே, பூமி நடுங்கியது; எரிநட்சத்திரங்கள் விழுந்தன; பயங்கரமான காற்று வீசியது. கௌரவ வீரர்களோ, கர்ணன் யுத்தத்தில் தங்களுக்கு வெற்றியை ஈட்டித் தரப் போகிறான் என்று வாழ்த்தினார்கள்.

அச்சமயத்தில், கர்ணன், ‘பராக்கிரமசாலிகளான பீஷ்மரும், துரோணரும் வீழ்ந்து விட்ட நிலையில், கிருஷ்ணரையும், அர்ஜுனனையும் எதிர்த்து நிற்க என்னைத் தவிர, வேறு எவரும் கிடையாது. சல்யனே! பாண்டவர்கள் இருக்கும் திசையில் விரைவாக என் தேரை ஓட்டுவாயாக! ஒன்று, அவர்களை நான் கொல்வேன்; அல்லது நான் மடிவேன். பரசுராமரால் எனக்கு அளிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த ரதத்தின் மீதேறி, அர்ஜுனனை நான் வீழ்த்துவேன். எமனே வந்து அர்ஜுனனைப் பாதுகாத்தாலும் சரி, அவன் என்னால் கொல்லப்படுவான்’.

இவ்வாறு கர்ணன் கூறியதும், சல்யன், ‘உன் புகழ்ச்சியை நிறுத்து. மனிதர்களில் சிறந்த அர்ஜுனன் எங்கே? மனிதர்களில் தாழ்ந்த நீ எங்கே? கந்தர்வர்களிடம் சிறைப்பட்ட துரியோதனனை, பாண்டவர்களே விடுவித்தனர். நீயோ, கந்தர்வர்களிடம் போரிட முடியாமல் தோற்று ஓடிப் போனாய். விராட தேசத்தில், அர்ஜுனன் ஒருவனே, பீஷ்மர், துரோணர், துரியோதனன், நீ உட்பட அனைவரையும் ஓட ஓட விரட்டினான் என்பதை மறந்தாயா? இப்பொழுதும், அர்ஜுனன் உன்னை எதிர்த்து வரப் போகிறான். நீ உயிர் பிழைக்க வேண்டுமானால், இந்த யுத்த களத்தை விட்டு ஓடுவதைத் தவிர உனக்கு வேறு வழியில்லை’. இவ்வாறு கூறிய சல்யனிடம், கர்ணன், ‘அதையும் பார்க்கலாம். அவன் என்னை வென்றால்தானே, நீ சொன்ன அனைத்தும் நியாயமாகும்’ என்று ஏளனமாகச் சிரித்து விட்டு, பாண்டவப் படைகளைப் பார்த்து, ‘உங்களில் யார் எனக்கு அர்ஜுனனைக் காட்டுகிறீர்களோ, அவர்களுக்குப் பரிசுப் பொருட்களை அள்ளித் தருவேன்’ என்றும் கூறினான்.

இதைக் கேட்டு சல்யன் மீண்டும் பரிகாசம் செய்தான். ‘தேரோட்டி மகனே! கர்ணா! அநாவசியமாக நீ பொருட்களை செலவழிக்க வேண்டியதில்லை. ஒரு நரியினால் இரு சிங்கங்கள் கொல்லப்பட்ட கதையை நான் கேட்டதேயில்லை. அர்ஜுனனையும், கிருஷ்ணரையும் கொல்வதென்பது, நீயாகச் சென்று தீயில் விழும் முயற்சி. வீண் பிரதாபங்களைப் பேசாதே!”
இதைக் கேட்டுக் கர்ணன் சொன்னான், ‘சல்லியா! நீ நண்பன் என்ற போர்வையில் இருக்கும் பகைவன். எப்படியாவது என் உறுதியைக் குறைத்து விட நீ முயற்சிக்கிறாய். அர்ஜுனனையும், கிருஷ்ணரையும் எதிர்ப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை’.

அதற்குச் சல்யன், ‘சிங்கத்தை நேரில் சந்திக்கும் வரைதான் உன் உறுதி. அர்ஜுனன் சிங்கம், நீ நரி; அவன் அமுதம் என்றால், நீ விஷம்’ என்று பரிகசித்ததைப் பொறுக்காத கர்ணன், ‘அர்ஜுனன் வீரத்தையோ, கிருஷ்ணரின் மேன்மையையோ உன்னால் அறிந்து கொள்ள முடியாது. ஆனால், நான் அவர்கள் இருவரையும் முழுமையாகப் புரிந்து கொண்டுதான், அவர்களை எதிர்க்க முனைந்துள்ளேன். கிருஷ்ணரின் சக்ராயுதத்தையும், அர்ஜுனனின் காண்டீபத்தையும் கண்டு பயப்படாதவர்கள் இருக்க முடியாது. நான் அப்படிப்பட்டவர்களை எதிர்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீர் என்ன சொன்னாலும், அவர்கள் இருவரையும் எதிர்ப்பதை நினைத்து பயப்படப் போவதில்லை.

’பாண்டவர்களைப் புகழ்ந்தும், என்னை ஏசியும் பேசுகிற உன்னை ஒரே நிமிடத்தில் கொன்றிருப்பேன். நீ துரியோதனனுக்கு நண்பன் என்ற காரணத்தினாலும், தேரோட்டியைக் கொன்றான் என்ற பழிச்சொல் என்னைச் சேர்ந்து விடக் கூடாதே என்ற காரணத்தினாலும், உன்னை நான் கொல்லாமல் விடுகிறேன். கர்ணன் ஒருவனே நின்று, கிருஷ்ணர், அர்ஜுனன் இருவரையும் கொன்று வீழ்த்தினான் என்றோ - கிருஷ்ணர், அர்ஜுனன் இருவருமாகச் சேர்ந்து, கர்ணனைக் கொன்று வீழ்த்தினார்கள் - என்றோதான் வரலாறு கூறப் போகிறது’.

அதற்கு சல்யன் கூறினான், ‘மதுபானத்தைக் குடித்தவன் போலப் பேசாதே. தேரோட்டியாக இருப்பவர் எதிரியின் பலத்தையும், பலவீனத்தையும் எடுத்துச் சொல்பவனாக இருக்க வேண்டும். அதைத்தான் நானும் செய்கிறேன். நீயும் உனது நிலையை உணர்ந்து கொண்டு, அர்ஜுனன், கிருஷ்ணர் ஆகியோரின் உதவியை நாடு. மனிதர்களில் நாய் போன்ற நீ, மனிதர்களில் சிங்கம் போன்ற அர்ஜுனனை இகழ்ந்து பேசாதே’.

மேலும் யுத்த களக் காட்சிகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2