ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 91

மேகலா : துரியோதனனின் வேண்டுகோளை ஏற்று, சல்யன் கௌரவர் படைக்குத் தலைமை ஏற்கச் சம்மதித்தான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். கௌரவர் தரப்பில் எல்லோருக்கும் மீண்டும் புதியதோர் உற்சாகம் பிறந்தது. இந்தச் செய்திகளை யுதிஷ்டிரர் அறிந்தார். அவர் இது பற்றிக் கிருஷ்ணரிடம் பேசினார். துரியோதனன் படைக்கு சல்யன் தலைமை ஏற்றிருக்கும் இந்த நிலையில் என்ன செய்வது என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தருமன், கிருஷ்ணரைக் கேட்டுக் கொண்டான்.

கிருஷ்ணர் சொன்னார், ‘யுதிஷ்டிரரே! சல்யன் சிறந்த வீரன் என்பதில் சந்தேகமில்லை. இந்த சூழ்நிலையில், சல்யனை எதிர்ப்பதற்கு நீர்தான் தகுதியானவர் என்பது என் கருத்து. புலிக்குச் சமமான வல்லமை உம்மிடம் இருக்கிறது. இந்த இறுதிக் கட்டத்தில் சல்யனை நீர் வீழ்த்துவதுதான் முறையாக இருக்கும். உமக்குள்ள தவ வலிமையையும், க்ஷத்திரிய பலத்தையும் காட்டுவதற்கு இதுதான் தருணம். ஆகையால், சல்யனை வதம் செய்யத் தக்கவர் நீரே’.

இப்படிக் கூறி விட்டு, கிருஷ்ணர் தனது பாசறைக்குச் சென்றார். பதினேழாவது நாள் இரவு கழிந்தது. தனது படைகளைத் தயாராகும்படி, துரியோதனன் உத்தரவிட்டான். யாருமே தனியாக நின்று போரிடக் கூடாது என்று, குறைந்த பட்சம் இருவர் இருவராக எதிரிகளை எதிர்த்துச் செல்ல வேண்டும் என்றும், துரியோதனன் படையில் ஒரு தீர்மானம் செய்து கொள்ளப்பட்டது. ‘ஸர்வதோபத்ரம்’ என்ற விசித்திரமான வியூகத்தை சல்யன் வகுத்தான்.

துரியோதனன் படை இவ்வாறு அணிவகுக்கப்பட்ட போது, கிருஷ்ணரின் சொல்லை ஏற்று, சல்யனை வீழ்த்துவது தனது கடமை என்று மேற்கொண்ட யுதிஷ்டிரர், அவனை எதிர்க்கச் சித்தமானார்.

ஸம்சப்தர்களை அழிக்க அர்ஜுனன் முனைந்தான். பீமன், கிருபரை எதிர்க்கத் தயாரானான். நகுல-சகாதேவர்கள், சகுனியையும், உலூகனையும் எதிர்ப்பதில் முனைந்தார்கள். இரு தரப்புச் சேனைகளும் அணி வகுத்தன. பதினெட்டாம் நாள் போர் துவங்கியது.

மேகலா : கடைசி நாள் போர் துவங்கி விட்டது, கிருஷ்ணா! இந்த அத்தியாயத்தில், துரியோதனனின் பேச்சில் உள்ள நியாயம், அவனுக்கு clap பண்ணத் தோணுது, கிருஷ்ணா!

கிருஷ்ணர் : அவனுடைய பேராசைக்கு உருவம் கொடுத்தவர்கள் எல்லாம் அவனை விட்டுப் போய் விட்டார்கள். அதனால் வந்த பேச்சு அது. திருதராஷ்டிரன், சமாதானத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு, என்ன சொன்னான். ‘உனக்கு என்ன குறை; நல்ல சாப்பாடு, துணிமணி, அரண்மனை வாசம், கூப்பிட்டால் ஓடி வந்து கையைக் கட்டிக் கொண்டு வேலை பார்க்க ஆயிரம் பேர், சாஸ்திரம் கற்றிருக்கிறாய், நிர்வாகம் தெரிந்தவன், நீயே அரசன்; இன்னும் உனக்கு என்ன வேண்டும்....? பாண்டவர்கள் ‘இந்திரப்பிரஸ்தத்தில்’ இருக்கட்டும். நீ ’மஹாராஜாவாக’, அஸ்தினாபுரத்தில் கோலாகலமாய் வாழலாம் என்றானே; கேட்டானா....? அதைத்தான் இன்று அவனாக யோசித்துச் சொல்வது போலச் சொல்லுகிறான். பெருந்தன்மையெல்லாம், பிறவியிலேயே வர வேண்டும். ‘பாண்டு’ இறந்ததிலிருந்து, பாண்டவர்களை வாழ விட்டானா? பாண்டவர்கள் என்றாவது நிம்மதியாய்த் தூங்கியிருப்பார்களா....? உயிர் பயத்தோடு, வாழ்நாளில் பாதி வாழ்க்கையை வனத்திலேயே கழிக்க, இவன் ராஜவாழ்க்கை தானே வாழ்ந்தான்! இன்று என்னவோ, யுத்த தர்மத்தைப் பேசுகிறான். கர்ணன் இல்லாமல் அவனால் இருக்க முடியாது, மேகலா.....!

மேகலா : ஆம் கிருஷ்ணா! மற்றவர்களெல்லாம் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலாவது, தர்மத்தைப் பற்றிச் சிந்தித்திருக்கிறார்கள். சகுனி கூட, பேராசை கூடாது என்று சொல்லியிருக்கிறான். துரியோதனன் மட்டுமே, பாண்டவர்களுக்கான நியாயம், தர்மம் இதைப் பற்றி நினைத்தது கூடக் கிடையாது.....

கிருஷ்ணர் : சரி! சல்யன் வீழ்ச்சி நடக்கட்டும். நாம் கதையில் அடுத்து நிகழ்வதைப் பார்க்கலாம்.

துரியோதனன் ஒளிந்து கொண்டான்

மேகலா : பதினெட்டாம் நாள் யுத்த களத்தில் நின்றவர்களுக்கே பெரும் அச்சத்தை உண்டாக்கக் கூடிய கோரமானதோர் யுத்தம் தொடங்கியது. வேகமாகச் செல்லும் தேர்களின் சக்கரங்கள் ஏற்படுத்திய சப்தம், குதிரைக் குளம்புகளின் சப்தம், யானைகளின் கர்ஜனை, சங்குகளின் ஒலி எல்லாமாகச் சேர்ந்து பேரோசை உண்டாயிற்று. பாண்டவர் தரப்பினர் எய்த அம்பு மழையினால் துன்புறுத்தப்பட்ட கௌரவர்களில் எஞ்சியிருந்த படை சிதறிக் கொண்டிருந்தது. சல்யன் ஒருவனாகவே, பாண்டவர் படையை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தான்.

நகுலனின் போர்த்திறன், பதினெட்டாவது நாள் போரில் மிகவும் பிரகாசித்தது. கர்ணன் மகன்களாகிய சித்ரசேனன், சுசர்மா, சத்யசேனன் ஆகிய மூவரையும், நகுலன் வீழ்த்திக் கொன்றான். சாத்யகி, பீமன், நகுல-சகாதேவர்கள், யுதிஷ்டிரரைக் காப்பாற்றுவதில் முனைந்தார்கள். இத்தனை பேர் பாதுகாப்பில் இருந்த தருமனை, சல்யன் தனியாக எதிர்த்தான். மிச்சமிருந்த அஸ்வத்தாமா, கிருபர், உலூகன், சகுனி ஆகியோர், சல்யனுக்குப் பாதுகாப்பாக நின்றார்கள்.

அந்த நேரத்தில், துரியோதனன், அர்ஜுனனையும், கிருஷ்ணரையும் எதிர்த்தான்.

சல்யனுக்கும், பீமனுக்கும், ‘கதை’யைக் கொண்டு யுத்தம்நடந்தது. கடுமையான யுத்தத்தில், சல்யன் களைப்படைய, கிருபர், சல்யனைத் தேரில் ஏற்றிக் கொண்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

துரியோதனனுக்கும், சேகிதானனுக்கும் இடையே நடந்த யுத்தத்தில், சேகிதானன் கொல்லப்பட்டான்.

மீண்டும், சல்யனும், யுதிஷ்டிரரும் ஒருவரையொருவர் பலமாகத் தாக்கத் தொடங்கினார்கள். இதைக் கண்ட சாத்யகி, பீமன், நகுல-சகாதேவன் ஆகியோரும், தருமனுடன் சேர்ந்து, சல்யனைத் தாக்கத் தொடங்கினார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து போரிட்டுக் கூட, சல்யனை எதிர்க்க அவர்களால் இயலாமல் போயிற்று.

பாண்டவர் படை, அன்று சல்யனிடம் தோற்று விடும் என்றே துரியோதனன் நம்பத் தொடங்கினான். யுதிஷ்டிரரோ, ‘சல்யன் என்னால் கொல்லப்படத் தக்கவன் என்று கிருஷ்ணர் கூறிய வார்த்தை பொய்யாகி விடுமோ? நாங்கள் இத்தனை பேரும் சேர்ந்தும் சல்யனை எதிர்க்கச் சக்தியற்றவர்களாக இருக்கிறோமே! கிருஷ்ணருடைய வார்த்தை பலிக்காமல் போகக் கூடியதா?’ என்றெல்லாம் நினைத்துக் குழம்பினார்.

நிகரற்ற வீரனாகிய சல்யன் யுதிஷ்டிரரையும், அவருக்குப் பாதுகாப்பாக வந்த அனைவரையும் எதிர்த்துக் கொண்டிருந்தான். இறுதியில் சல்யனின் கை தாழத் தொடங்கியது. அந்த நிலையில், யுதிஷ்டிரர், சல்யன் மீது மிகவும் சக்தி வாய்ந்த ஓர் ஆயுதத்தைப் பிரயோகித்தார். சல்யன் வீழ்ந்தான். இரு கைகளையும் விரித்துக் கொண்டு, சல்யன் பூமியில் வீழ்ந்தான்.
யுதிஷ்டிரரைப் பாண்டவர்களும், வீரர்களும் பெரிதும் போற்றினார்கள். கௌரவர் தரப்பு வீரர்கள் சிதறி ஓடுவதைக் கண்ட பாண்டவர் தரப்பு வீரர்கள் பெரிதும் உற்சாகம் கொண்டார்கள்.

'தருமன் அரச பதவி பெற்றாகி விட்டது;
துரியோதனனிடமிருந்து ராஜ்யம் நழுவி விட்டது’ - என்று பலவாறாகப் பேசி, அவர்கள் அனைவரும் மகிழ்வுற்றார்கள்.

இந்த நிலையில், துரியோதனன் பெரும் கோபம் கொண்டு, தான் ஒருவனாகவே பாண்டவர்களை எதிர்க்கத் தொடங்கினான். துரியோதனன் தனியாகவே நின்று போர் புரிவதைப் பார்த்த பாண்டவர் படை, செய்வதறியாது திகைத்தது. அவனுடைய போர்த்திறனைக் கண்டு அச்சமுற்றது.

இந்த நிலையில், துரியோதனன், தனது வீரர்களைப் பார்த்து, ‘ஏதோ ஒரு வகையில் மரணம் நம் அனைவரையும் வந்து அடையத்தான் போகிறது. அதை யுத்த களத்தில் பெறுவது, நமக்கும் பெருமை. ஆகையால், தொடர்ந்து யுத்தம் செய்வோம். வெற்றி பெற இன்னமும் கூட வாய்ப்பு உண்டு’ என்று கூறினான்.

அடுத்து நடந்த யுத்த நிகழ்வுகளை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2