வாகனங்கள் பலவிதம் - பகுதி 1

மேகலா : ஹாய் கிருஷ்ணா! ஒரு அற்புதமான தலைப்புடன் என்னை வந்து பார் என்று சொல்லிட்டு, வேக வேகமாகப் போனியே..... உன்னைத் தேடி இதோ வந்து விட்டேன்.

கிருஷ்ணர் : என்ன தலைப்புடன் வந்திருக்கிறாய்? அதச் சொல்லு முதலில்.

மேகலா : கிருஷ்ணா! அதத்தான் உங்கிட்ட கேட்கலாம் என்று நெனச்சேன்...

கிருஷ்ணர் : நான் உன்னத்தான யோசிக்கச் சொன்னேன்..... சரி, போகட்டும். நீ என்ன car வைத்திருக்கிறாய்....?

மேகலா : ஏன் கிருஷ்ணா..... மறந்துட்டயா..... 'Dezire' car வைத்திருக்கிறேன்.

கிருஷ்ணர் : காசிக்கு எப்படி போனாய்....?

மேகலா : ஏன் இதையெல்லாம் கேட்கிறாய்....?

கிருஷ்ணர் : விஷயமிருக்கு.... சொல்லு.... எப்படிப் போனாய்.....

மேகலா : ரொம்ப தூரம் போகணுமில்ல கிருஷ்ணா.... அதனால் flight-ல் போனேன்...

கிருஷ்ணர் : முன்னல்லாம் Bangalore-க்கு எதில் போவாய்...?

மேகலா : Bus-ல போவேன். Train கூட இருக்கு.... ஆனா, அது விருதுநகர் போய் ஏறணும்... அதனால் நான் ‘பஸ்’சுல போறதத்தான் விரும்புவேன். அது Srivi-யிலிருந்து கிளம்பும் என்பதால், ‘எனக்கு’ அதுதான் சௌகரியம்....

கிருஷ்ணர் : எந்த ஊருக்காவது, கப்பலில் சென்றிருக்கிறாயா?

மேகலா : ஏன் இப்படி கேட்கிறாய் கிருஷ்ணா.... உனக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா....?

கிருஷ்ணர் : நான் காய்ச்சலில் பிதற்றுகிறேன் என்று நீ ‘கேலி’ பேசினாலும் சரி, என் கேள்விக்கு பதில் சொல், மேகலா...

மேகலா : கப்பலில் சென்றது கிடையாது. ஆனால், ‘மால்தீவ்ஸில்’, airport-லிருந்து ‘மாலே’ செல்வது முதல் எல்லாமே, speed boat, passengers boat என்று நீரிலும் பயணித்தது உண்டு கிருஷ்ணா...

கிருஷ்ணர் : ஆக, வானில் பறந்து சென்றிருக்கிறாய்; கடலில் மிதந்து சென்றிருக்கிறாய்; எங்கு செல்ல வேண்டும் என்றாலும், car-ல் தான் பயணம் செய்கிறாய். இன்னும், local-ல் 'auto'-வில் செல்கிறாய். Two-wheeler-ல் சென்றிருக்கிறாய். இன்று இதுதான் ‘topic'!

மேகலா : ’வாவ்!’ இதுக்குதான், என்னை நோண்டி நோண்டி கேள்வி கேட்டாயா, கிருஷ்ணா?

கிருஷ்ணர் : ஆமாம்..... மனிதன், ஆதி காலத்தில் இருந்தே, ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு புலம் பெயர்வது, பல காரணங்களுக்காக நடந்து கொண்டேதான் இருக்கிறது. அப்படி அவன் புலம் பெயர்வதற்கு பயன்படுத்திய சௌகர்யமான வாகனங்கள் என்னென்ன என்பதைப் பற்றித்தான் சுவாரஸ்யமாகப் பேசப் போகிறோம். ‘Transport'.

மேகலா : ஆதி மனிதனிலிருந்தா கிருஷ்ணா..... ஆதி மனிதன் காலத்தில் தான் வாகனங்கள் கிடையாதே, கிருஷ்ணா....

கிருஷ்ணர் : கழுதை மேல் சென்றிருக்கலாம்..... குதிரை மேல் சென்றிருக்கலாம். யோசிச்சி, வரிசையாகச் சொல்....

மேகலா : ஸ்...... ஸ்..... Oh! ஆமாம்ல.... very interesting topic! எனக்கு, ஆதிகாலத்தில் மனிதர்கள் ஓரிடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு செல்ல என்ன மாதிரி யோசித்திருப்பார்கள் என்பதற்கு ஒரு idea இருக்கு கிருஷ்ணா! இது கற்பனை தான்; ஆனால், நிறைய பதிவுகளை வாசித்தும், சரித்திர உண்மைகளைக் கேட்டறிந்தும், எனக்குள்ளாக ஒரு கற்பனையான நிகழ்வு இருக்கிறது. இது உண்மையாக இருக்கலாம் என்று நினைப்பதற்குக் கூட, ‘லாஜிக்கலாக’ யோசித்திருக்கிறேன். ஒரு கட்டுரையில் எழுதியும் இருக்கிறேன் கிருஷ்ணா!

கிருஷ்ணர் : ஹாங்..... இதத்தான்..... இதத்தான் நான் எதிர்பார்த்தேன் மேகலா.... எங்க உன்னுடைய லாஜிக்கலான கற்பனையைச் சொல்லேன் கேட்கிறேன்.

மேகலா : கிருஷ்ணா.... இன்று மகாபாரதம் வாசிக்கும்  போது, வியாசர் சொல்வதாக ஒரு வாசகம் வருகிறது. ‘சில வருடம், மழை பொழிந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில வருடம், மழை பொழியாமல் வறட்சி ஏற்படுகிறது. இரண்டையும் மனிதன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்’ என்று சொல்கிறார். நம்முடைய பாரதத்தின் தட்ப வெப்பம் அப்படித்தான் கிருஷ்ணா. ஆதி காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள், நீர் நிலைகளுக்கு அருகிலேயே கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகின்றனர். வெள்ளம் பெருக்கெடுக்கும் போதோ, மழை பொய்த்த போதோ, அந்த இடத்தை விட்டு வேறு இடங்களுக்குச் சென்று வாழ முடிவு செய்கிறார்கள். அந்த சமயங்களில், கால் நடையாகவே செல்வதைக் காட்டிலும், கழுதை மீதும், குதிரை மீதும் சென்றிருக்கலாம்.

வனங்களைக் கடந்து செல்லும் போது, சரிவுகளில் உருண்டு செல்லும் மரங்களையும், பாறைகளையும் ஆச்சரியமாகப் பார்க்கிறான். இரண்டு கைகளாலும் தூக்க முடியாத பாறைகளும், மரங்களும் உருண்டு செல்லும் போது வேகமாகச் செல்ல முடிகிறதே என்று யோசிக்கிறான். அந்த யோசனை தான் வட்ட வடிவமாக இருக்கும் ‘சக்கரம்’ பிறப்பதற்குக் காரணமாக இருந்திருக்கும். குதிரையின் முதுகும், சக்கரமும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும் என்ற மனிதனுடைய கேள்வியில் பிறந்தது தான் வண்டியாக இருந்திருக்கும் கிருஷ்ணா.... அந்த வண்டியில் வசதியாக அமர்ந்து, இடம் பெயர்ந்து, இன்னொரு உலகத்தைப் பார்க்கிறான். அந்த உலகம், அழகானதாகவும், நெருக்கமானதாகவும், வளமானதாகவும் அவனுக்குத் தெரிகிறது; வசப்படுகிறது. இப்படித்தான், ஆதி மனிதன் வண்டியை உருவாக்கி, அதை இழுப்பதற்கு வலுமிக்க குதிரையைப் பூட்டி, வேகத்தை தனதாக்குகிறான். இன்றும் கூட, சக்தியின் வீரியத்தை அளவிட, ‘horse power' என்றுதானே குறிப்பிடுகிறார்கள்!

கிருஷ்ணர் : பரவாயில்லை மேகலா; பிள்ளையார் சுழி போட்டுட்ட... உனக்கு ஒண்ணு தெரியுமா மேகலா...? தான், பார்த்துப் பழகிய இடத்தை விட்டு, இன்னொரு இடத்தைப் பார்க்கும் மனிதனுக்கு, புதிய இடத்தின் வளங்களும், வனப்பும் பிரமிப்பை மட்டும் கொடுக்கவில்லை.... அந்த இடத்தைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையும் வருகிறது. அங்கு குடியிருந்தவர்களை விரட்டி விட்டு, ‘நில அபகரிப்பு’ செய்கிறான். அப்படிச் செய்யும் பொழுது, தன்னுடைய பகுதியை விட்டுக் கொடுக்க மனமில்லாதவர்களுடன், சண்டையிட வேண்டியிருக்கிறது. அந்த மாதிரி சமயங்களில், கும்பல் கும்பலாகக் கூடித்தான் யுத்தம் செய்கிறார்கள். அதற்கு, வெறும் கைகளும், கால்களும் மனிதனுக்குப் போதவில்லை. யுத்தத்தில் போர் புரிய வலிமையான ஆயுதங்களும், விரைந்து செல்ல, குதிரை மட்டும் பத்தாது. ஆயுதங்களை சுமந்து செல்லும் தேரும் பயன்படுத்தப்படுகிறது.

பேராசை பெருகப் பெருக, மனிதனுக்கு ‘வேகம்’ என்பதும் அவசியமாகிப் போகிறது. மனிதனின் ஆசையும், அதனை அடையும் வேகமும், அவனை வளர்ச்சிப் பாதையில் கூட்டிச் செல்கிறது.
அதனால், மனிதனும் அந்தந்த காலகட்டங்களில் தன் வேகத்திற்கான வாகனங்களை வடிவமைப்பதில் தீவிரமாக ஈடுபடுகிறான். ‘சக்கரத்’தை உருவாக்கிய மனிதன், மாடுகளால் இழுத்துச் செல்லப்படும் வண்டி மட்டுமல்ல; ஒரு குதிரை, இரண்டு குதிரை; இது பத்தாது என்று ஏழு குதிரைகளால் இழுக்கப்படும் அதிக சக்தியுள்ள தேரினையும் உருவாக்கி, காற்றின் வேகத்திற்கு பறந்து செல்ல முனைகிறான்.

நீ கூட கேள்விப்பட்டிருப்பாய். நம்முடைய சூரியன் கூட ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் தான் வலம் வருகிறான் என்று புராணங்கள் மூலம் நீ அறிந்திருக்கலாம்.... நாராயணன், கழுகு வாகனத்தில் பறந்து வருகிறார். சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வருகிறான். முருகன் மயில் வாகனத்தில் பறக்கிறார். பரமசிவன், ரிஷப வாகனத்தில் ஏறி வருகிறார். - என்று கதைகளைக் கேட்கும் மனிதனுக்கு, அனுபவ ரீதியாக, ‘வாகனம்’ மனித வாழ்க்கையின் வளர்ச்சிக்கு அவசியம் என்பதை உணர்கிறான். அதனால் தான் நேரம் கிடைக்கும் போதெல்லாம், ‘நம்மாலும் பறக்க முடியுமா’ என்று யோசித்து முயற்சி செய்து பார்க்கிறான். இதெல்லாம், மனிதனை வளர்ச்சியின் பாதையில் கூட்டிச் செல்கிறது. ராமாயணத்தில், ராமர், ராவண வதம் முடிந்த பின் அயோத்திக்கு, ‘புஷ்பகவிமானத்தில்’ ஏறிச் செல்வதாகப் படித்திருக்கிறாய். ராமர், கடவுள் அவதாரம் என்று நாம் சொல்லி விடலாம். ஆனாலும், ராமாயணத்தை எழுதிய ‘வால்மீகி முனிவர்’ அவர் காலத்தில் விமானத்தை விவரித்து எழுதியிருக்கிறார். அவர்கள் பறக்கும் விமானத்தை அறிந்திருக்கிறார்கள். இதெல்லாம் நாம் ஆராய்ந்து பார்க்கத் தகுந்த ஒரு சுவையான விஷயங்கள். இது ஒருபுறம் இருக்கட்டும்.

மாட்டு வண்டி, வில்வண்டியிலிருந்து, மனிதன் உருவாக்கிய வாகனங்களைப் பற்றி அடுத்து பேசுவோம்.....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2