தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமான் - பகுதி 2

கிருஷ்ணர் : ஏன், கதவில், சித்திர வேலைப்பாடு உன்னைக் கவர்ந்ததோ….?

மேகலா : ஹை! Correct-ஆய்ச் சொல்லிட்டயே…. ஆனால், ஒரு திருத்தம்… சித்திரம் இல்ல கிருஷ்ணா…, சிற்பம். சிற்ப வேலைப்பாடு மட்டுமில்ல கிருஷ்ணா…, அதன் சுத்தம்…. ‘யப்பா’, ஒரு தூசு இல்லாமல் விளக்கி வைத்த ‘வெங்கலக் குத்து விளக்கு’, தங்கமாய் மின்னுமே, அது மாதிரி, ‘சொர்க்கத்தின் கதவு’ இதுதானோ என்று சொல்லுமளவுக்கு, சுத்தமான கதவு; கோயிலின் கர்ப்பக்கிரகமே இதுதானோ என்று நம்மை மயக்கும் சிற்ப வேலைப்பாடுகள். வாயிலின் இருமருங்கிலும், இடை சிறுத்த தேவ மாந்தர்களின் சிற்பங்கள். அதன் அழகைக் கடந்து செல்ல என்னால் முடியவில்லை….

கிருஷ்ணர் : எத்தனை photos எடுத்தாய்….?

மேகலா : ராணிமா cross பண்ணிப் போய் விட்டா கிருஷ்ணா. அவளைக் கூப்பிட்டுக் காட்டினேன். அதில் தவழும் கண்ணன் வேறு தவழ்ந்து கொண்டிருந்தாரா….. நிறைய்….ய photos எடுத்தோம். நான் தேவமாந்தர் பெண்ணோடு, ‘selfie’ எடுக்க try பண்ணினேன். எனக்கு ‘ஆங்கிள்’ சரியா கிடைக்கல. ‘ராணிமா’ எடுத்திட்டா. Photos எடுத்த பின்பு, கோயிலுக்குள் நுழைந்தோம் கிருஷ்ணா. நாங்கள் கோயிலுக்குள் நுழைந்ததும், பிரகாரத்தின் இடப்புறமாகத் தனிச் சன்னதியில் பிள்ளையார்கள் அமர்ந்திருந்தார்கள் கிருஷ்ணா…!

கிருஷ்ணர் : ‘பிள்ளையார்’ அமர்ந்திருந்தார் என்றால் எனக்குப் புரியாதாக்கும். ‘பிள்ளையார்கள்’ என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லுகிறாய்…!

மேகலா : நெசம்மாவே, ‘பிள்ளையார்கள்’ தான் கிருஷ்ணா. ‘இரண்டு பிள்ளையார்’ இருக்கும் சன்னதியை நீ எங்காவது பார்த்திருக்கிறாயா கிருஷ்ணா…? இதைப் பார்ப்பதே, ஒரு குடுப்பினை….

கிருஷ்ணர் : யாரு….. எங்கிட்டயேவா….? பிள்ளையார் சன்னதியில் உனக்குக் கதை சொன்ன பூசாரியே நம்ம ஆளு. இவ்வளவு ஏன்…. கோயிலில் குடிகொண்டிருக்கும் சௌந்திரராஜப் பெருமானே நம்ம ஆளு…. நீ வந்தால், உன்னிடம் என்ன பேச வேண்டும் என்று script எழுதிக் கொடுத்ததே நான் தானாக்கும்…. நம்ம கிட்டயே கதையா….

மேகலா : நீ, சர்வ வல்லமை படைத்தவன் மட்டுமல்ல; சர்வமும் அறிந்தவன் என்பதை மறந்து, உன்னிடமே கதை சொல்ல வந்து விட்டேனா…. ஐயோ! கடவுளே, எனக்குப் பேச்சே வரலியே…

கிருஷ்ணர் : சரி…. over-ஆ நடிக்காத…. விட்ட கதையைச் சொல்லு…. நான், உன்னைக் கலாய்க்காமல், வேறு யாரு கலாய்க்கப் போறாங்க…. இரட்டைப் பிள்ளையார் கதையைச் சொல்லு…

மேகலா : முதலில், இரண்டு பிள்ளையாரா என்று நான் ஆச்சரியப்பட்டாலும், பூசாரியின் விளக்கத்தைக் கேட்கக் கேட்க, என் ஆச்சர்யம், பூசாரியின் பக்கம் திரும்பியது. அத்தனை அழகான விளக்கம்…!

கிருஷ்ணர் : அப்படி என்ன தான் விளக்கினார்…?

மேகலா : பெருமாள் கோயிலில், பிள்ளையாருக்கு ’திருமண்’ இடுவார்கள்; ஏன் தெரியுமா என்று கேட்டார். நாங்கள் ‘திருதிரு’வென விழித்தோம். அப்போதான் சொன்னார், ‘வியாசர், மகாபாரதம் எழுதும் போது, அதை ஏட்டினில் எழுதுவதற்கு, பிள்ளையாரைத்தான் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மகாபாரதம் எழுதிய பிள்ளையார், ‘திருமண்’ இட்டுக் கொண்டார். எந்தக் காரியத்தைத் தொடங்கும் போதும், ‘விக்னங்கள்’ விலகுவதற்காக, நாம் பிள்ளையாரை வணங்கிய பின்பு தான், அந்தக் காரியத்தைத் தொடங்குவோம். அப்படிச் செய்வதால், தடைகள் விலகி, எடுத்த காரியம் சுமுகமாக நிறைவேறும். வியாசர், மகாபாரத சுலோகங்களை விரைவாக எழுத வேண்டும் என்று கணபதியைக் கேட்டுக் கொள்கிறார். பிள்ளையார், வியாசரிடம், ‘நீர் கூறும் சுலோகத்தை நான் பொருள் புரிந்த பின் தான் அடுத்த சுலோகம் சொல்ல வேண்டும்’ என்று கேட்டுக் கொள்கிறார். இருப்பினும், மகாபாரதம் எழுதி முடியும் வரை, எந்த வில்லங்கமும் வராமல் இருக்க, உலக நியதிப்படி, பிள்ளையாரைப் பிடித்து வைத்து, பூஜை செய்து, பின் எழுத ஆரம்பிக்கிறார். இதில் ஒரு பிள்ளையார் திருத்தமாகச் செதுக்கப்பட்டிருப்பார்; இன்னொரு பிள்ளையார் பிடித்து வைக்கப்பட்டிருக்கும்’ என்ற கதையைச் சொல்லி, எங்களை ஆச்சரியப்படுத்தினார் கிருஷ்ணா…!

கிருஷ்ணர் : Oh…..! பிள்ளையாருக்கே, பிடிச்சு வைச்ச பிள்ளையாரா…?

மேகலா : இரட்டைப் பிள்ளையாரைப் பார்த்த அதிசயம் மாறாமல், அடுத்ததாக, ஸ்ரீ லக்ஷ்மி சமேத ஹயக்ரீவரின் ஆளில்லாத தனி சன்னதியைப் பார்த்தோம் கிருஷ்ணா. இந்தக் கோயில் மிகப் பிரம்மாண்டமான கோயில் கிடையாது; ஆனால், ஒவ்வொரு சன்னிதானத்திலும் குடிகொண்டிருக்கும் ஒவ்வொரு மூர்த்தங்களும், மிகத் தெளிவாக, அற்புத அழகுடன், அதே நேரத்தில், பிரம்மாண்டமாகவும் இருந்ததென்னவோ நிஜம் கிருஷ்ணா. ஹயக்ரீவரை உற்றுப் பார்த்து, வணங்கி, மெள்ள நகர்ந்து, பிரகாரம் சுற்றி வந்தோம். அங்கு லக்ஷ்மி நரசிம்மர் தனி சன்னதியில் ஆனந்தமாய் இருக்கக் கண்டேன். அந்த நேரத்தில், எனக்கு ஒரு அற்ப சந்தோஷம் வந்தது கிருஷ்ணா!

கிருஷ்ணர் : என்ன…., நம்ம ஊரு லக்ஷ்மி நரசிம்மர், இங்கிருக்கும் சாமியை விட, பிரம்மாண்டமாக இருக்கிறார் என்றா?

மேகலா : எப்படி கிருஷ்ணா…. கண்டுபிடிச்ச….?

கிருஷ்ணர் : நீ, ‘அற்ப’ சந்தோஷம் என்று சொன்னேல்ல…. எனக்குத் தெரிஞ்சி போச்சு… இது ஒரு சந்தோஷமா…! மூர்த்தி சிறிசா இருந்தாலும் கீர்த்தி பெருசு…. நரசிம்மர் சிறுசா இருந்தால் என்ன…? பக்தன் அழைப்புக்கு ஓடி வருகிறாரா இல்லையா….

மேகலா : ஆமாம், ஆமாம்…. லக்ஷ்மி நரசிம்மரைத் தரிசித்து விட்டு, ஆண்டாள் தனிச் சன்னதியைக் கடந்து, புல்லாங்குழல் வாசிக்கும் வேணுகோபாலன் சன்னதியை வந்து சேர்ந்தோம் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஆண்டாள் சன்னதியை ஏன் தாண்டி வந்தீர்கள்?

மேகலா : நாங்கள் வரும் போது, நடை சாத்தியிருந்தது கிருஷ்ணா. அதனால் சன்னதியைக் கடந்து சத்யபாமா, ருக்மணி சமேத வேணுகோபாலனைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடக் கூட மறந்து போய், சிலையாக நின்று விட்டேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : போச்சுடா….. பின், எப்ப இந்த உலகத்துக்கு வந்தாய்….?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2