வாங்க, கொஞ்சம் ‘பொய்’ பேசுவோம் - பகுதி 5

மேகலா : அந்த அம்மாவோட மாமா, அவங்க வீட்டுக்கு, அவங்கள பார்க்க வருவார். அவரை, ‘போண்டா’ சாப்பிட்டுக் கொண்டிருக்கும் புருஷனிடம் அறிமுகப்படுத்தி வைப்பாங்க. அதற்கு அவர் என்ன சொல்வார் தெரியுமா…?

கிருஷ்ணர் : இவர் தான் உங்க மாமாவா என்று கேட்பாரா…?

மேகலா : ஐயோ…. கிருஷ்ணா…. அப்படிக் கேட்டால், அது normal…. இவர், ‘அடடே இவரா… இவரை எனக்குத் தெரியுமே….. நம்ம கல்யாணத்துல, சமையல்கட்டுக்கும், store room-க்கும் அலை அலைன்னு அலஞ்சி, வாழைப்பழத் தோல் வழுக்கி கீழே விழுந்தாரே…. அவர் தானே… நல்லாவே தெரியும்’ என்பார்.

கிருஷ்ணர் : இதுலயும் பொய்யா….

மேகலா : மாமா, கடுப்பாகி, ‘நான் கல்யாணத்துக்கே வரல மாப்ள’ என்பாரா… பொய் சொன்னது waste-ஆப் போயிரும் கிருஷ்ணா…. அப்புறம், ‘மாப்ள என்ன பண்றாரு’ என்று கேட்பார்…..

கிருஷ்ணர் : மாப்ள ’போண்டா சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்’ என்பாரா…

மேகலா : நீ குசும்புக்காரன் கிருஷ்ணா…. படம் பார்த்துதான சொல்லுற….

கிருஷ்ணர் : Continue…. மாப்ள போண்டா சாப்பிட்டுக்கிட்டு இருந்ததால…, ‘டூப்மாஸ்டர்’ இப்படித்தான் கேட்டிருப்பார் என்று சொன்னேன்….

மேகலா : பரவாயில்லை; நம் வசம் ஒரு கதை வசன கர்த்தா இருக்கிறார்!

கிருஷ்ணர் : நீ கதைய மேல சொல்லு…

மேகலா : மாப்ள என்ன பண்றாருன்னு மாமா கேட்டதற்கு, ‘மன்னாரன் கம்பெனியில manager-ஆ இருக்காரு மாமா’ என்று அந்த அம்மா, வெள்ளந்தியா சொல்லப் போக…, ‘எந்த மன்னாரன் கம்பெனி…’ என்று கேட்க, டூப்மாஸ்டர், திக்கித் திணறுவார். மாமா, ‘நான் தான அந்தக் கம்பெனிக்கு manager என்று ‘படீர்’னு உண்மையைச் சொல்ல….. ‘என்னோட கம்பெனி பெயர், ‘ராஜமன்னார் company’ என்று ‘புருடா’ விட, அவர், ‘அம்மா, உன் புருஷன்ட ஏதோ கோளாறு இருக்கு; என்னன்னு விசாரி’ என்று கொளுத்திப் போட்டுப் போயிருவார்….

கிருஷ்ணர் : ஐயோ…. அப்புறம்….

மேகலா : அப்புறம் என்ன….., அவங்க அப்பாவை வரவழைத்து புகார் கொடுக்கப் போறதா அந்த அம்மா சொன்னவுடன், இவர் உண்மையை ஒத்துக்குவாரு…. அப்புறம், வேலையில்லாத டூப்மாஸ்டரை, குழம்புக்கு மசாலா இடிக்கச் சொல்லி உத்தரவு போட்டு வேலைய வாங்குவாங்க….

கிருஷ்ணர் : அப்படிப் போடு…. Company-யில் manager-ஆ இருக்கேன்னு பொய் சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டாருல்ல…., மசாலா பொடி இடிக்க வேண்டியது தான்…!

மேகலா : கிருஷ்ணா…. அந்தம்மா இவ்வளவு strict-ஆ இருக்காங்கண்ணு தான நினைக்கிற…. அப்படியில்லை கிருஷ்ணா… அந்த அம்மா, தன் புருஷனப் பத்தி ஏதாவது நல்ல விஷயமாக இருந்தா, ரொம்ப பெருமைப்படற ஆளு…

கிருஷ்ணர் : அதனால்தான, அவரும், பொய்யை வூடு கட்டி அடிக்கிறாரு…. அப்புறம், வேலை தேடுனாரா இல்லையா….?

மேகலா : அடுத்து, அவர் சொன்ன பொய்யில, அந்த அம்மா, அவர வீதியில நிறுத்திருவேன்னு எகிறுவாங்க பாரு…., சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகிப் போகும்….

கிருஷ்ணர் : அப்படி என்ன பொய்யை அவுத்து விடுவாரு…. ஏதாவது தொழில் செய்யுறேண்ணு சொல்லுவாரோ….?

மேகலா : ‘பைரவன்’ என்ற புனைபெயர் கொண்ட எழுத்தாளரைத் தெரியுமா’ என்று தன் பொண்டாட்டியிடம் கேட்க…. ’Oh! தெரியுமே’ என்று அந்த அம்மா, ‘கதையெல்லாம் எழுதுவாரே, அவர்தானே; நல்லாத் தெரியும்’ என்று ரசிப்பாய்ச் சொல்ல…., நம்ம டூப்மாஸ்டர் திக்கித் திணறிப் போவார்….

கிருஷ்ணர் : Oh! இப்ப எழுத்தாளராகி விட்டாரா….

மேகலா : ஆம்மாம் கிருஷ்ணா…… ’என்ன, தெரியுமா…?’ என்று டப்பா டான்ஸ் ஆடத் திணறிப் போவார். ‘இல்ல, அவர் கதைகளை வாசிச்சிருக்கேன்; ரொம்ப நல்லா எழுதுவாரு’ என்று லயிப்பாய்ச் சொல்லுவாங்க. அவர் அப்படியே ‘U-turn’ அடித்து, விரைப்பாய் நின்று, ‘நீ அவரைப் பாக்கணுமா! இங்கே பார், இப்ப பார், சாட்சாத் அந்த ‘பைரவன்’ நான் தான் என்பாரே பாக்கணும்… அந்த அம்மா, ஒரே excite ஆகி…. ‘ஏங்க இத்தனை நாள், இதை எங்கிட்ட சொல்லல’ என்று சிணுங்குவாங்க…..

கிருஷ்ணர் : அடப்பாவி…. அந்தப் பொண்ணுகிட்ட சொல்லுவதற்கு வேற பொய்யா கிடைக்கல….. ‘எழுத்தாளர்’ என்றா சொல்லணும்….?

மேகலா : நீ இதுக்கே இப்படி விசனப்படுகிறாய்…. நிஜ எழுத்தாளருக்கு பாராட்டு விழா நடக்கப் போவதை, newspaper-ல் வாசித்துத் தெரிந்து கொண்ட அந்த அம்மா, அவரிடமே அப்பாவியாய் கேட்கும்…. அதுக்கு எத்தனை சவடால் பேச்சுப் பேசி பாராட்டு விழாவுக்குப் போவதையே தட்டிக் கழிக்கப் பார்ப்பார்….

கிருஷ்ணர் : பொய்யிங்கிறது அப்படித்தான் மேகலா…. சாதாரணமாகப் பேச ஆரம்பித்து, அதை மூடி மறைக்க இன்னொரு பொய்யி, இன்னொன்று…. இன்னொன்று என்று பொய்யிக்கு மேல் பொய்யாகப் போய்க் கொண்டே இருக்கும். அப்புறம் என்னாச்சு…. பாராட்டு விழாவுக்குப் போனாரா…?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2