வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 3

கிருஷ்ணர் : நீ பேசப் பேச…., இதோ இப்பவே கிளம்பி ரிஷிகேஷ் போகலாமா என்று தோணுகிறது…. உன்னோட சிலிர்ப்பு எனக்குள் தொற்றிக் கொண்டது மேகலா…. சரி, அடுத்து எங்க போனீங்க…. ‘லக்ஷ்மண் ஜூலா’வா…..

மேகலா : கிருஷ்ணா…, லக்ஷ்மண் ஜூலா…. ரொம்ப….. தூரத்தில் இருக்கு….. அதற்கு முன் ராதாகிருஷ்ணர் கோயில் வருகிறது…, அங்கு சென்றோம். ராதையும், கிருஷ்ணரும், கங்கையின் மென்மையான சலசலப்பு சப்தத்தில் புல்லாங்குழல் இசைத்து தன்னை மறந்திருந்தனர். நம்ம ஊர் பக்கமெல்லாம், கோயிலுக்குள் camera-வைப் பிடுங்கி வச்சிருவாங்க… அங்கு அப்படியில்லை கிருஷ்ணா…. Photo எடுத்துக்கோங்க என்று ‘கைடு’ சொல்கிறார்…. கிருஷ்ணருடன் தோள் மேல கைதான் போடவில்லை… எல்லோரும் வளச்சி வளச்சி photo எடுத்தோம்…. அங்கிருந்து கிளம்பி, கடைவீதிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தோம்…

கிருஷ்ணர் : ஆமாம்…., பாதையெல்லாம் படிகளாக கொஞ்சம் குறுகலாகவும் இருக்குதே… நீ எப்படி நடந்து வந்தாய்…. இங்கு தேரோடும் வீதியில் கூட, சூப்பர் மார்க்கெட்டுக்கு ‘auto‘- ல போகும் party ஆச்சே நீ….

மேகலா : கிருஷ்ணா…., நானெல்லாம் என் வாழ்க்கையில் இமயமலையைப் பார்ப்பேனா… ரிஷிகேஷ் செல்வேனா…, ஹரித்துவார் அறிவேனா என்றிருந்தேன். ஏழைக்கு புதையல் கிடைத்த மாதிரி இந்த வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்கிறது… கால்வலியை யோசிச்சு நடக்காமல் இருப்பனா கிருஷ்ணா…. slow walking தான்… ஹரி…, இல்லாட்டா ராணிமா…., சமயத்தில் ஷீத்தல் அப்பா…, ஏதாவது ஒரு நேரம் கார்த்தி, மதனா…, ஏன் ஒரு சமயம் ஆதி கூட என் கையைப் பிடித்து என்னைக் கூட்டிச் சென்றார்கள் கிருஷ்ணா…. நானும், கால்வலியை மறந்து, புனிதபூமியில் நடந்து சென்றேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : மென்மையான ஆதி கூட உனக்கு ‘வலிமை’ சேர்த்திருக்கிறான் பார்… ஆதியும், கார்த்தியும் இந்த trip-ஐ எப்படி ரசித்தார்கள்….

மேகலா : கிருஷ்ணா…, நான் வியந்த ஒரு விஷயம்… ‘கங்கை’ ஒரு ’மஹாசக்தி’ என்பதை உணர்ந்து கொண்டேன் கிருஷ்ணா… ’தாகம்’ எடுத்தவருக்கு தாகம் தீர்க்கிறாள்…. ‘அழகை’ ரசிப்பவருக்கு, வனதேவதையாக ஓடி வருகிறாள்… ‘பக்தி’யில் பரவசப்பட்டவருக்கு, ‘கங்கை மாதா’வாக அருள் பாலிக்கிறாள்…. பாவம் தொலைக்க நினைப்பவருக்கு, பாவத்தைக் கழுவிக் கொடுத்து புண்ணியம் சேர்க்கிறாள்….. ஆதி, கார்த்திக்கு, அவர்களைப் போலவே ஆர்ப்பாட்டமாய், உற்சாகமாய் துள்ளிக் குதித்து, குதூகலப்படுத்துகிறாள்… என்னைப் போன்றோருக்கு, பல வரலாறுகளை உள்ளடக்கிய, பல விநோதங்களைப் பார்த்து வருபவளாக, சிவபெருமானின் தலைமுடியிலிருந்து வழிந்து வரும் மஹாசக்தியாகத் தெரிகிறாள். ஆதியும், கார்த்தியும் கங்கையைத் தன்னளவில் குஷியாக, குதூகலமாக ரசித்தனர் கிருஷ்ணா…. சொல்லப் போனால், இந்த trip முழுவதும், ‘tired’ ஆக இருக்கு, ‘room’-க்குப் போவோம்’ என்று அனத்தவே இல்லை கிருஷ்ணா….

கிருஷ்ணர் : எப்படி tired ஆவாங்க… அவங்கள பொறுத்த மட்டில், குஷியாய்…, குதூகலமாய் ஆட்டம் போட கங்கையும் உற்சாகமாய் துள்ளி வருகிறாள். வளச்சி வளச்சி photo எடுக்க…, திரும்பும் இடமெல்லாம் இயற்கையின் சௌந்தர்யம் கொட்டிக் கிடக்குது… ‘பானி பூரி’ சாப்பிட்டீர்களா….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. கார்த்தி கேட்டதும், ஹரி எல்லோருக்கும் ’பானி பூரி’ வாங்கிக் கொடுத்தான். North India tour வந்து, பானி பூரி சாப்பிடாட்டா எப்படி….?

கிருஷ்ணர் : நான் சொன்னது சரியாப் போச்சா…. ரோட்டோரம் நின்று, இந்த இயற்கையை ரசித்துக் கொண்டே, ‘பானி பூரி’ சாப்பிடும் சுகம் ஒன்று போதும். நம்முடைய tiredness எல்லாம் காணாமப் போகும்… பிள்ளைகள் எப்படி ‘tired’ ஆகுது என்று சொல்வார்கள்…..

மேகலா : அதிலும், ‘நாளை ‘rope car’-ல் போகப் போகிறோம்…. யாரெல்லாம் ‘rafting’ என்னுடன் வரப் போகிறீர்கள்’ என்று கேட்டுக் கொண்டே இருக்கிறான். கார்த்திக்கு இந்த thrilling-ஏ அவனை குஷியாக நடக்க வைத்தது கிருஷ்ணா… ஆதிக்கு எல்லோரும் சேர்ந்து போவதே கொண்டாட்டமாய் இருந்தது. அதனால் அவர்களைப் பற்றி எங்களுக்கு கவலையே இல்லை கிருஷ்ணா…. என்னைத்தான் மெதுவாக…, மிக மெதுவாக…, நடத்திக் கூட்டிச் சென்றார்கள். அடுத்து, ‘கைடு’ எங்களை ஒரு கடைக்குள் அழைத்துச் சென்றார்…. அந்தக் கடை owner-க்கும், guide-க்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கும் போல…. அவர் மனப்பாடம் செய்த பாடத்தை ஒப்பிப்பது போல, ருத்ராட்சத்தைப் பற்றி, ஹிந்தியில் விளக்க ஆரம்பித்தார். எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் புரிஞ்சது…..

கிருஷ்ணர் : அது என்ன…? புரிஞ்சுதுன்னு சொல்றத நம்பவே முடியலயே….

மேகலா : ‘பஞ்ச முக ருத்ராட்சம்’, ‘single முக ருத்ராட்சம்’ – ‘பாஞ்ச்’, ‘ஏக்’ என்ற words மட்டும் தான் புரிஞ்சுது… ஆனால்…., இந்தக் கதையையெல்லாம் கேட்க யாருக்குமே விருப்பமில்லை… புரியவுமில்லை…, நைஸா நழுவிட்டோம்…. இதற்கடுத்து நீண்ட படிக்கட்டுக்களில் இறங்கி, ‘லக்ஷ்மண் ஜூலா’வின் ஒரு முனைக்கு வந்து விட்டோம் கிருஷ்ணா…. மறுமுனைக்கு நீங்கள் சென்றதும், driver உங்களை pick-up பண்ணிக் கொள்வார் என்று கூறி, கைடு விலகிக் கொண்டார்……

மேகலா : மாலை நேரம்…, வெளிச்சம்
விலகத் தயாராக இருக்கிறது… மின் விளக்குகளெல்லாம் கண் சிமிட்டத் தயாராகி காத்திருக்கிறதுஅலைகளைவளையலாய் அணிந்த கங்கை புத்திரி செல்லமாய்சிணுங்கலாய் குதித்து ஓடுகிறாள்தன் வளையலை சிலுப்பி சிலுப்பி ஓசையூட்டுகிறாள்…. கங்கையின் இக்கரையிலிருந்துஅக்கரைக்குச் செல்ல, ‘ஊஞ்சல் பாலம்’ அமைத்துபாரதத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள்தங்கள் திறமையை கங்கைக்கு சமர்ப்பித்துள்ளார்கள்அந்தப் பாலத்தைப் பார்த்து ‘salute’ அடிக்க வேண்டும் போல இருந்தது கிருஷ்ணா…. நாம் நடக்க நடக்கஊஞ்சல் அசைவுகள் பயமுறுத்தினாலும்புது அனுபவம் பல மடங்கு மகிழ்ச்சியில் எங்களை ஆழ்த்தியது நிஜம் கிருஷ்ணா… அந்தரத்தில் ஊஞ்சலில் நடக்கிறோம்…, தெரியாத மனிதர்கள்…, புரியாத மொழிகள்…, ஓரிரு தமிழ் வார்த்தைகள்…, மாலை மங்கிய வெளிச்சம்….
கீழே பார்க்கும் தொலைவில்கங்கை ஆர்ப்பரித்து ஓடுகிறாள்… அதியற்புதமான தருணம் கிருஷ்ணா. இத்தனை நேரம் நான் விவரித்ததெல்லாம் என்
தமிழின் அழகிய வார்த்தைகள்ஆனால் நான் இப்போது பேசுவது…,
ஒரு பாரதத்தின் மகளாக… என் மனதின் பெருமை
வெளிப்படுத்தும் உணர்வு…, சொல்ல முடியாத பெருமை கிருஷ்ணா….

மன்னும் இமயமலை எங்கள் மலையே

மாநில மீதில் அது போல் பிரிதில்லையே

இன்னறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே

இங்கிதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே

பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே

போற்றுவோம் இதை எமக்கு இல்லை ஈடே

– என்று பாரதியார் பாட்டின் முதல் வரியை முணுமுணுத்துக் கொண்டே இருந்தேன்

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2