Motivation - பகுதி 5

மேகலா : நீ சொல்லியது மாதிரி என்று simple ஆகச் சொல்லலாம் கிருஷ்ணா…. அர்ஜுனனுக்கு நீ எடுத்த சுளுக்கு…, அதுதான் உலகின் best சுளுக்கு எடுத்தல் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அப்படியா…., அப்படி என்ன பிரமாதம்… சுளுக்கு தான எடுத்தோம்…

மேகலா : சுளுக்கு…, தானவா…, என்ன கிருஷ்ணா, லேசா சொல்லிட்ட…. அர்ஜுனன் வாழ்ந்த காலம் என்ன…, நாங்க வாழுற காலம் இன்று வரையிலும், எங்கள் பிரச்னை எங்களை அழுத்தும் போது…, கிருஷ்ணா, உன் வார்த்தை எங்களை உசுப்பேத்துவது போல, வேறு ஒருவருடைய motivation…, எங்களுக்கு அத்தனை தைரியத்தைக் கொடுக்க முடியாது….. அர்ஜுனன், துரோணாச்சாரியாருடைய நம்பிக்கைக்குகந்த மாணவன்…. எம்பெருமான் சிவபெருமானிடமே, பாசுபதா அஸ்திரத்தினை ஏவும் பயிற்சி பெற்றவன். அர்ஜுனனின் வில் திறமையின் மீது கொண்ட பயத்தினால் தான் துரியோதனன், பரசுராமருடைய மாணவன் கர்ணனை அங்க தேசத்து மன்னனாக்கி தன் நண்பனாக்கினான்… எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த அர்ஜுனன், குருக்ஷேத்திரப் போர்க்களத்தில், ஸ்ரீகிருஷ்ணரே அர்ஜுனனுக்கு தேரோட்டியாக வந்திருந்தும் கூட, எதிரில் நிற்பவர், தன் உறவினர்கள்…, இவர்களை எப்படி கொல்வது என்று மனத்தளர்ச்சி அடைந்து நின்றான்…. தேரோட்டும் வேலைதான் என்னோடது என்று ஸ்ரீகிருஷ்ணர் சும்மா இருக்கவில்லை…

‘அர்ஜுனா! ஒரு வீரனுக்குத் தகுதியில்லாததும், சுவர்க்கத்தைத் தடுப்பதும், புகழைப் போக்குவதுமான இவ்வுள்ளச் சோர்வு, இந்நெருக்கடியில் எங்கிருந்து உன்னை வந்தடைந்தது’

‘பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே. அது உனக்குப் பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே, இழிவான உள்ளத் தளர்வை துறந்து விட்டு எழுந்திராய்’

— என்று முதலில், ‘நீ என்ன அலியா’ என்று கடுமையான வார்த்தையால் அர்ஜுனனை திணற வைத்து, ‘உன் உள்ளத தளர்வை விட்டு எழுந்திராய்’ – என்று சொல்லி உள்ளத் தளர்ச்சியை மட்டும் நீக்கவில்லை. ஒரு வீரனுக்கு இந்த உள்ளத் தளர்ச்சி அழகல்ல’ என்று அர்ஜுனனை வீரன் என்பதை நினைவுபடுத்தி, அவனுடைய தைரியத்தையும், போர்த் திறமையையும் வெளிக் கொண்டு வந்த மகா புருஷன்…. ஸ்ரீகிருஷ்ணரின் பணி லேசானதா, கிருஷ்ணா…. நீ செய்த மகத்தான பணியை, நீ வேணா மறந்திருக்கலாம்…. ஒரு வீரனை உசுப்பேத்தி, காரியம் சாதித்த ஸ்ரீகிருஷ்ணரின் ஒவ்வொரு வார்த்தைகளும், ‘motivation’ என்ற வார்த்தையே பிறப்பதற்குக் காரணமான வார்த்தைகள்… இந்த பாரத நாட்டில், அர்ஜுனன் மாதிரி ஒவ்வொரு வீரனுக்கும், திறமையாளருக்கும்…, இன்று வரை…, இனிமேலும் வழி காட்டி வரும், தைரியம், தன்னம்பிக்கை, ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு வகையில் பயன் தரும் practical philosophy கூட, இந்த உலகில் எத்தனையோ பேர் பிறந்து வந்து, தைரியத்தையும், ஊக்கத்தையும் வேதமாக எடுத்துரைத்தாலும்….,

‘பாரதா, எப்பொழுதெல்லாம் அறம் அழிந்து போய், மறம் மேலெழுகிறதோ, அப்பொழுதெல்லாம், என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்’

‘நல்லாரைக் காப்பதற்கும், கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும், யுகந்தோறும் நான் அவதரிக்கிறேன்’

— என்று, ‘நீ கவலைப்படாதே, தர்மத்தின் வழி செல்பவர்களுக்கு பிரச்னை என்றால், எந்தக் காலமானாலும், நான் மறுபடியும் பிறந்து வந்து தர்மத்தைக் காப்பாற்றுவேன் என்று ஸ்ரீகிருஷ்ணர் கொடுத்த தைரியம் போல ‘தன்னம்பிக்கை வேதம்’ ஒன்றிருக்க முடியாது… ‘கீதை’ வாசித்து, கண்ணீர் துடைத்தவர்கள் ஏராளம்…., மீண்டும் தைரியம் பெற்றவர்கள் கணக்கிலடங்காது…. பலம் பெற்றவர்கள், பக்குவம் பெற்றவர்கள், உயிர் பெற்றவர்கள், ஊக்கம் அடைந்தவர்கள், உரிமை பெற்றவர்கள்…, கிருஷ்ணருடைய நட்பு பெற்றவர்கள்…, என்று என் வரையிலும், இது இன்னும் தொடர்ந்து கொண்டே வருகிறது. Motivation theory என்று பிறர் சொன்னாலும், நான், motivational therapy’ என்றுதான் சொல்லுவேன்…, ஏன்னா, கீதை, கூன் விழுந்த மனதைக் கூட, bend எடுக்க வல்லது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : பேசி முடிச்சிட்டயா…. ஒரு செயலைச் செய்யத் தயாராகும் போது, பின்வாங்குவது, தர்மமே கிடையாது… என்ன காரணமாக இருந்தாலும்…, முடிவு என்னவாக இருந்தாலும், அதையெல்லாம் மீறி, காரியத்தைச் செய்வதுதான் மனிதனுடைய கடமை… இது இப்படி இருக்க…, அருகிலிருப்பவர், ‘ஓஹோ, உன்னால் முடியாதா…, ஆமாம்…, எதிரில் இருக்கும் சுற்றத்தாரை எப்படிக் கொல்லுவது…, சரி வா, நாம் போரைக் கை விடலாம்’ – என்று சொன்னால், அதை விடக் கேவலம், முட்டாள்தனம் வேறு ஒன்று இருக்க முடியாது…. மேலும், நியாயத்தின் மீதும், தர்மத்தின் மீதும் அக்கறை உள்ளவர்கள், கோழைத்தனத்தைப் பார்த்து எப்படிச் சும்மா இருப்பது… அதனால் தான், அர்ஜுனனுடைய மனத் தளர்ச்சி என்னை கோபத்துக்குள்ளாக்கியது. அவனுடைய தன்மானத்தை சீண்டி விட்டு, மனத்தளர்ச்சிக்கு மருந்தும் தடவினேன்….

மேகலா : நீ காட்டியது அக்கறை மட்டுமல்ல கிருஷ்ணா…., பேரன்பு…. அர்ஜுனன் மீது மட்டுமல்ல…, இந்த உலகத்தார் அனைவருக்குமான ஊட்டச் சத்து… இடித்துரை சொல்லுபவர்கள் இல்லாமல் போனால், ஒரு மனிதனுக்கு யாரும் கிட்ட இருந்துதான் குழி பறிக்கணும்னு அவசியமில்லை…. ’நான் மனத் தளர்ச்சி அடைந்து விட்டேன்…, வேலை செய்வதற்கு பயமாக இருந்தது’ என்று செயலைச் செய்யாமல், தானே சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்பவர்கள் கிருஷ்ணா….. தவறு செய்யும் போது, தட்டிக் கேட்பவன் தான், உண்மையான அன்பும், அக்கறையும் உள்ளவனாகிறான் கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2